Friday, April 24, 2015
திருப்பூரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 4 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர், பொல்லிக்கால் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மன்ஞித்சிங் (63). இவர் தனியார் நிறுவனத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தார். புதன்கிழமை மதியம் பணி முடிந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். காங்கயம் சாலை, விஜயாபுரம் பிரிவு அருகே சென்றபோது அவர் நிலைதடுமாறி சைக்கிளில் இருந்து கிழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த மன்ஞித்சிங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மன்ஞித்சிங் உயிரிழந்தார். இதுகுறித்து, திருப்பூர் ஊரக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கருவம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ் (70). இவர், புதன்கிழமை மாலை பார்க் சாலையில் உள்ள பூங்காவிற்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவர், மங்கலம் சாலை அருகே வந்தபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் நடராஜின் வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்து நடராஜ் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (75). இவர், புதன்கிழமை இரவு பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியம் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து, திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருப்பூர், செல்லாண்டியம்மன்துறை பகுதியைச் சேர்ந்தவர் தர்மர் (எ) குணசேகரன் (27). இவர், பல்லடம் சாலையில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். புதன்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் குணசேகரன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் குணசேகரனின் வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த குணசேகரன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment