Wednesday, August 31, 2016

On Wednesday, August 31, 2016 by Unknown in

நெமிலி அருகே உள்ள சயனாபுரத்தில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. 
இந்த பள்ளியில் 760 மாணவ- மாணவிகள் படிக்கிறார்கள். தலைமை ஆசிரியர் உள்பட 18 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
பள்ளியில் கடந்த 2015-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பென்ஜமின் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் பணிக்கு வந்த பின்னர் பள்ளியில் பல மாறுதல்கள் கொண்டு வரப்பட்டு, நிர்வாகம் சிறப்பாக இருந்தது என்றும் மாணவ-மாணவிகளின் கல்வித்தரம் உயர்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொதுத் தேர்வுகளில் மாணவ-மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் தலைமை ஆசிரியர் பென்ஜமின் கடந்த வாரம் மாறுதல் பெற்று சென்றார்.
இது மாணவ-மாணவிகளையும் பெற்றோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர்கள் பென்ஜமினை மீண்டும் தலைமை ஆசிரியராக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பென்ஜமினை தலைமை ஆசிரியராக நியமிக்காவிட்டால் நாங்கள் பள்ளிக்கு செல்லமாட்டோம் என்று கூறி இன்று காலை மாணவ- மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர்.
பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் இன்று காலை பள்ளிக்கு முன்பு திரண்டனர். பள்ளியின் கேட்டை பூட்டு போட்டு மூடினர். அவர்களின் போராட்டத்துக்கு மாணவ- மாணவிகளின் பெற்றோரும் ஆதரவு தெரிவித்தனர்.
பள்ளிக்கு வந்த ஆசிரியர்களையும் மாணவ- மாணவிகள் உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
மாணவ-மாணவிகளின் போராட்டம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது..