Wednesday, September 07, 2016
மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் உயிரிழந்த ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதியவரின் இறுதிச்சடங்கை முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றிணைந்து செய்திருப்பது மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
தாணே நகரில் உள்ள கௌசா பகுதியில் வசித்துவந்த வாமன் கதம் (65) என்பவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
உறவினர்கள் என்று யாரும் இல்லாத காரணத்தால், இறுதிச்சடங்கு செய்வதற்கு உதவி கிடைக்காமல் அவரது மனைவி செய்வதறியாமல் தவித்து நின்றார்.
இதை அறிந்த மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் 8 பேர், தாமாக முன்வந்து இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.
மூங்கில் கழி, கயிறு, மண் பானைகள், அகர்பத்திகள், ஆடைகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கிவந்து, பிற்பகல் 3 மணியளவில் இறுதிச் சடங்கை அவர்கள் செய்தனர்.
மனித நேயத்துக்கு எடுத்துகாட்டாக விளங்கிய அந்த இளைஞர்களை மும்ப்ரா பகுதிவாசிகள் பாராட்டினர். மும்ப்ராவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம்.
இதற்கிடையே, மும்ப்ரா-கல்வா தொகுதி எம்எல்ஏவான ஜிதேந்திர அவாத், அந்த இளைஞர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக சமூக வலைதளமான முகநூலில் (ஃபேஸ்புக்) குறிப்பிட்டுள்ளார்
0 comments:
Post a Comment