Wednesday, September 17, 2014

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
திருப்பூர் : போக்குவரத்து மாற்றம், மாநகராட்சி குழாய்களை மாற்றுவது நீடிக்கும் இழுபறியால், ரயில்வே சுரங்க பாலம் பணிகள் தாமதமாகி வருகிறது.

திருப்பூர் நகரை இரண்டாக பிரிக்கும் ரயில்வே வழித்தடத்தை கடக்க, இரு புறமும் உள்ள மக்கள், பல கிலோ மீட்டர் தூரம் சுற்றியும், இரண்டு ரயில்வே கேட்களில் காத்திருக்கவும் வேண்டியுள்ளது. முதல் ரயில்வே கேட்டுக்கு மாற்றாக, பிரிட்ஜ்வே காலனி மற்றும் கோர்ட் வீதியை இணைக்கும் வகையில், டி.எம்.எப்., அருகில், 27 கோடி ரூபாய் செலவில் சுரங்க பாலம் அமைக்க, 2007-08ம் ஆண்டு பணி துவங்கியது. ரயில்வே துறை சார்பில், ரயில்வே வழித்தடத்தின் கீழ், பாக்ஸ் வடிவ சுரங்க பாலம் அமைக்கப்பட்டது. நீதிமன்ற வழக்கு, நிலம் எடுப்பதில் சிக்கல் போன்றவற்றால், நெடுஞ்சாலைத்துறை (திட்டம்) சார்பில் பணி மேற்கொள்வது இழுபறியானது. நிலம் கையகப்படுத்தப்பட்டு, கடந்த பிப்., மாதம் பணி துவங்கியது.

ஓம்சக்தி கோவில் லட்சுமி நகர் பகுதியில், 750 மீட்டர் நீள பாலத்துடன் கூடிய கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பிரிட்ஜ் வே காலனி ரோட்டை இணைக்கும் உயர் மட்ட பாலம் பணி, மாநகராட்சி கழிவுநீர் கால்வாயை மாற்றி அமைக்காததால், இழுபறியாகி வருகிறது. இந்த சூழலில், கோர்ட் வீதியில் பணிகளை துவக்க வசதியாக, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஊத்துக்குளி ரோட்டில் வரும் வாகனங்கள், சுரங்க பாலத்தை பயன்படுத்த, கோர்ட் வீதியில் இரு புறமும் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி; ரயில்வே சுரங்க பாலத்துக்கு இணைப்பு ரோடு அமையும் வகையில், கோர்ட் ரோட்டில் சரிவாக 150 மீட்டர் நீளத்துக்கு கான்கிரீட் பாலம் அமைக்கும் பணி மற்றும் ஊத்துக்குளி ரோட்டில் வரும் வாகனங்கள் நேராக செல்லும் வகையில், உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்காக, கோர்ட் ரோட்டின் மத்தியில் அமைந்துள்ள பாதாள சாக்கடை திட்ட குழாய்கள், குடிநீர் குழாய்கள், தொலைத்தொடர்பு கேபிள்கள் மற்றும் இரு புறமும் உள்ள மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டி உள்ளது. இப்பணிக்காக, நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநகராட்சி, மின் வாரியத்துக்கு உரிய தொகை செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சி குழாய்கள் மாற்றும் பணி இழுபறியாகி வருகிறது. கோர்ட் வீதியில் போக்குவரத்தை மாற்றியமைத்தால் மட்டுமே, பணி துவங்க முடியும் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், ஊத்துக்குளி ரோடு, குமரன் ரோட்டில் வரும் வாகனங்கள் மற்றும் கோர்ட் வீதிக்கு வரும் வாகனங்கள் பயன்படுத்த வேண்டிய வழித்தடங்கள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், " மாநகராட்சி குழாய்களை மாற்றி அமைத்த பிறகே, கோர்ட் ரோட்டில் பாலம் பணி துவங்க முடியும். உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிந்த பிறகு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பணிகளை துவக்கலாம் என, மாநகராட்சி மற்றும் போலீசார் தெரிவித்தனர். போக்குவரத்தை மாற்றி அமைப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அடுத்த வாரத்தில் பணி துவங்கும்' என்றனர்.

On Wednesday, September 17, 2014 by farook press in ,    
திருப்பூர் : டாஸ்மாக் இணை நிர்வாக இயக்குனர் நடவடிக்கை மூலம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருப்பூர் டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் தொடர்ந்து பணியில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில், அதிக விலைக்கு மது பாட்டில் விற்பனை, விற்பனை தொகை மற்றும் சரக்கு இருப்புகளில் முறைகேடு, பதுக்கல் விற்பனைக்காக அதிக எண்ணிக்கையிலான மதுபாட்டில்கள் மொத்தமாக விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு புகார்கள் சென்றன. கடந்த வாரம், டாஸ்மாக் இணை நிர்வாக இயக்குனர் மோகன் தலைமையிலான குழுவினர் திருப்பூர் மதுக்கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர். ஆய்வில், புகார்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

மதுக்கடைகளில் பணியாற்றிய மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் 48 பேரை சஸ்பென்ட் செய்ய அவர் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு மாவட்ட மேலாளர் மூலம் உரிய ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்கள் 48 பேரும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மிகவும் வேண்டப்பட்ட நபர்கள் என்பதால், அவர்களுக்கு சஸ்பெண்ட் ஆர்டர், சம்பிரதாயமாக மட்டுமே வழங்கப்பட்டதாகவும், அவர்கள் தொடர்ந்து அதே கடைகளில் பணியாற்றி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இவ்வாறு, சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள், ஒரு வாரமாக பணியில் உள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களுக்குப் பதிலாக, கூடுதல் பொறுப்பாக வேறு பகுதிகளைச் சேர்ந்த மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நியமிக்கப்படவில்லை என, முறையாகப் பணியாற்றும் சில ஊழியர்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

இது குறித்து டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் ரகமது அலியிடம் கேட்ட போது,'கடந்த ஏப்., மாதம் வரை நடவடிக்கைக்கு ஆளான ஊழியர்கள் அரசு உத்தரவுப்படி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர். கடந்த வாரம் சஸ்பெண்ட் ஆன ஊழியர்களுக்கு பதிலாக, மாற்று ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, அது குறித்த கோப்புகள் என்னிடம் உள்ளன. அவர்கள் தொடர்ந்து பணியாற்றுவதாக வந்த புகார் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்', என்றார்.

இப்புகார் குறித்து அதிகாரிகள் கவனத்துக்கு சென்றதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டும், கடைகளில் பணியாற்றி கொண்டிருந்த ஊழியர்கள் நேற்று காலை, வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் திருப்பூர் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
On Wednesday, September 17, 2014 by Unknown   
சென்னை ECRல் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்தின் ஆய்வாளர் பாஸ்கர் ஓர் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 
இதுகுறித்து அவரை கேட்டபோது, எங்கள் மாநகரகாவல் ஆணையர் முதியோர்களுக்கு முழுமையான பாதுகாப்பையும், உதவியும் காவல்துறை உறுதிசெய்திட வேண்டும் என்ற உத்தரவின் பேரில், கூடுதல்ஆணையர்,இணைஆணையர்,(தெற்க்குமண்டலம்)வழிகாட்டுதலின் படி, நீலாங்கரை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதில் சுமார் 80களுக்கு மேற்ப்பட்ட முதியோர்கள் தனிமையில் வசிக்கின்றார்கள். அவர்களுக்கு துணையாக இருப்பவர்களும் சற்று முதியவர்களே.அதனால் சேவை மனப்பான்மையோடு ஓர் திட்டம் வகுக்கப்பட்டது. காவல்நிலையத்தில் தனியாக ஓர் தொலைபேசி (9498100174) அமைக்கப்பட்டுள்ளது, அதனுடைய எண்ணை தனிமையில் உள்ள முதியோரின் செல்போனில் speed முறையில் எண் 2ல் பதிவு செய்து தந்துவிடுவோம்.எண் 2ஐ அழுத்திப்பிடித்தாலே, எங்களுக்கு அழைப்பு வரும், சம்பந்தப்பட்டவர்களின் பெயரும் தெரிந்துவிடும். பிறகு உடனடியாக அவர்களுக்கு அவசர உதவிகள் செய்துதரப்படும்.இதன்மூலம் நாங்கள் தனிமையில் இல்லை. உடனடி உதவிசெய்ய, உறவுகளாய் காவலர்கள் உள்ளனர் என்ற மனநிம்மதி இருக்கும். இது முதியோர்களுக்கும்,எங்களுக்கும் ஓர் நல்லுறவு ஏற்படுத்தும் திட்டம் என ஆய்வாளர் பாஸ்கர் கூறினார்.
ஆய்வாளரின் திட்டத்தை வரவேற்று,நிலையகாவலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட உள்ளனர்.

இந்நிகழ்ச்சியை இன்று மாலை துணை ஆணையர் கண்ணன் அவர்கள் துவக்கி சிறப்புரையாற்றுகிறார்.









Tuesday, September 16, 2014

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
திருப்பூர் : திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, வெளிநாட்டு ராணுவ வீரர் ஆடை உற்பத்திக்கான, வர்த்தக விசாரணை வரத்துவங்கியுள்ளது.

மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ள திருப்பூர் பின்னலாடை துறைக்கு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. பல்வேறு காரணங்களால், சீனா, வங்கதேசம் போன்ற போட்டி நாடுகள், ஆடை உற்பத்தியை குறைத்துள்ளன. இது, திருப்பூரின் ஆடை ஏற்றுமதிக்கு சாதகமாகியுள்ளது. கோடை, குளிர், இளவேனில் சீசன் கால ஆடை உற்பத்திக்கான ஆர்டர் மட்டுமின்றி, பிரசித்தி பெற்ற ஆர்டர்களும், திருப்பூர் நோக்கி வரத்துவங்கியுள்ளன. சமீபத்தில் நடந்த 'பிபா' உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு, ரசிகர்கள் அணிந்த ஆடை உற்பத்தி வாய்ப்பு, திருப்பூருக்கு கிடைத்தது. தற்போது, வெளிநாட்டு ராணுவ வீரர்கள் அணியும் உள்ளாடை உற்பத்திக்கான வர்த்தக விசாரணை வரத்துவங்கியுள்ளது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் துணி உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:ஆரம்ப காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுக்கான, ஆடை உற்பத்திக்கு ஆர்டர் கிடைத்தது. தற்போது, இந்த ஆர்டர்களை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. மின்வெட்டு, சாய ஆலை பிரச்னை என தொடர் பாதிப்புகளில் இருந்து விடுபட்டுள்ள தொழில் துறைக்கு, சீனா, வங்கதேசம் போன்ற போட்டி நாடுகளுக்கு செல்ல வேண்டிய ஆர்டர்கள் கிடைக்கத் துவங்கியுள்ளன.சீசன் கால ஆர்டர்களோடு, தற்போது ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ வீரர்கள் அணியும் ரவுண்ட் நெக் பனியன், ஜட்டி, வெண்மை நிற கை பனியன் உற்பத்தி செய்வதற்கான விசாரணை வரத்துவங்கியுள்ளது.

பருத்தி நுாலிழையில் உற்பத்தி செய்யப்படும் இந்த ஆடை உற்பத்திக்கு, ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர். நுால் விலை, டாலர் மதிப்பு சீராக உள்ளது. எனவே, இவ்வகை ஆர்டர்களை முழுமையாக பெற முடியும். விதிமுறைகளுக்கு உட்பட்டு, சாம்பிள் ஆடைகள் தயாரித்து, பல்வேறு ஆய்வுகளுக்குப் பின் அனுப்பப்படுகிறது. இந்த ஆர்டர் வசமானால், திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு தொடர்ந்து ஆர்டர் கிடைக்கும்.இவ்வாறு, கூறினார்.
On Tuesday, September 16, 2014 by farook press in ,    

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
 
On Tuesday, September 16, 2014 by farook press in ,    

On Tuesday, September 16, 2014 by farook press in ,    

On Tuesday, September 16, 2014 by farook press in ,    
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் 28வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற இருப்பதை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி திங்களன்று திருப்பூரில் மக்களுக்கான மருத்துவம் என்ற சிறப்புக் கருத்தரங்கில் அகில இந்தியச் செயலாளர் ஆர்.ரமேஷ்சுந்தர் சிறப்புரை ஆற்றுகிறார். உடன் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.சுரேஷ்பாபு, சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்ற ஒரு பகுதியினர்.

இக்கருத்தரங்கின்போது வெண்மணித் தியாகிகள் நினைவாலயத்திற்காக மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் ரூ.5 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
​-------------------
மருந்துத்துறையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை
பாரதிய ஜனதா அரசு முழுமையாக வரவேற்கிறது

மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம் சாடல்!
 திருப்பூர், செப்.16-
இந்தியாவின் மருந்து உற்பத்தித் துறையில் மிகச்சிறப்பாக செயல்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை சீர்குலையச் செய்து, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை முழுமையாக வரவேற்கக்கூடியதாக மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு செயல்படுகிறது என்று அகில இந்திய மருந்து விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.ரமேஷ்சுந்தர் குற்றம்சாட்டினார்.
​திருப்பூரில் திங்களன்று தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற "மக்களுக்கான மருத்துவம்" என்ற சிறப்புக் கருத்தரங்கில் பங்கேற்ற ஆர்.ரமேஷ்சுந்தர் தமது உரையில் கூறியதாவது:
​மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பது மருத்துவம். இந்த மருத்துவத் துறைக்கு தேவையானது மருந்துகள். ஆனால் மருத்துவத்திற்கென தனியாக சுகாதாரத் துறை அமைச்சகம் வைத்திருக்கும் மத்திய அரசு, மருந்துகளை அந்த துறை வசம் ஒப்படைக்காமல் பெட்ரோ கெமிக்கல்ஸ் எனப்படும் தனித்துறை வசம் பிரித்து வைத்திருக்கிறது. இதில் இருந்தே மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை, தனியார் லாபத்திற்கான துறையாக பார்க்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
மருந்து தயாரிக்கும் நாடுகளில் இந்தியா உயர்ந்த நிலையில் இருக்கிறது என்பது பெருமைக்குரியது. நம் நாட்டில் மொத்த மருந்து உற்பத்தி ஆண்டுக்கு ரூ.1லட்சம் கோடியை எட்டிவிட்டது. உலக அளவில் இந்தியாவில் தான் மருந்து விலை குறைவாக இருக்கிறது. அதேசமயம், அந்த மருந்துகளின் உற்பத்திச் செலவை ஒப்பிட்டால் 300 முதல் 400 சதவிகிதம் விலை அதிகமாக இருக்கிறது.
உலக அளவில் ராணுவ தளவாட உற்பத்திக்கு அடுத்தபடியாக அதிக அளவு முதலீடும், லாபமும் ஈட்டக்கூடிய துறையாக மருந்துத்துறை இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவின் மருந்துத்துறை சுயசார்புடையதாக இருந்தது. ஆனால் 1991ல் தொடங்கப்பட்ட தாராளமய கொள்கை அமலாக்கத்தின் மூன்றாவது தலைமுறை சீர்திருத்தம் வந்த பிறகு நமது சுயசார்புத் தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் 90 சதவிகிதத்திற்கு மேலான மருந்துகளின் மூலப்பொருட்கள் மேலை நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகளாக தயாரிக்கப்படுகின்றன.
இதனால் 1956ல் ஏற்படுத்தப்பட்ட தொழில் கொள்கையின் மூலம், பொதுத்துறை பலப்படுத்தப்பட்டு மருந்து தயாரிப்பில் ஈடுபட்டது தற்போது சீரழிக்கப்பட்டுவிட்டது. பொதுத்துறை மருந்து தயாரிப்பில் ஈடுபடுவதற்கு முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள்தான் மருந்து தயாரிப்பில் ஈடுபட்டன. பொதுத்துறை நிறுவனங்கள் வந்தபிறகு சந்தையில் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டெட்ரா மைஸின் 10 பைசாவுக்கு கிடைத்தது. அதேபோல் 6 ரூபாய்க்கு விற்கப்பட்ட மாத்திரை 60 பைசாவுக்குக் கிடைத்தது. பொதுத்துறை நிறுவனமும் லாபத்தை வைத்துத்தான் மருந்து விற்பனை செய்தது. அப்படியானால் தனியார் முதலாளிகள் மருந்துத்துறையில் ஈட்டிய லாபம் எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதை அறியலாம்.
1970ல் இந்திய மருந்துச் சட்டம், புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும் அதன் மூலப்பொருளுக்கு பதிலாக மருந்து செயல்முறைக்கு காப்புரிமை (பிராஸஸ் பேட்டன்) வழங்கியது. இதனால் ஒரே மருந்தை பல நிறுவனங்கள் வெவ்வேறு விதத்தில் தயாரித்து சந்தையில் விற்பனை செய்தன. எனவே போட்டி காரணமாக மருந்து விலை கட்டுப்படுத்தப்பட்டது. ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட மருந்து ரூ.2க்குக் குறைந்தது.
இன்றைக்கு அறிவுச்சொத்துடைமை காப்புரிமை சட்டத்தின் மூலம்தான் இந்திய மருந்துத் துறைக்கு மிகப்பெரும் ஆபத்து வரப்போகிறது. போலியோ மருந்து கண்டுபிடித்த அறிஞர் அதற்கு சொந்தமாக காப்புரிமை பெற மறுத்துவிட்டார். அதனால் போலியோ மருந்து உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு மலிவாகக் கிடைத்தது, பல கோடி குழந்தைகள் போலியோவில் இருந்து காப்பாற்றப்பட்டனர். ஆனால் இதற்கு காப்புரிமை பெறப்பட்டிருந்தால் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனம் அதைப் பெற்று மிகப்பெரும் லாபம் ஈட்டக்கூடிய மருந்தாக மாற்றியிருப்பார்கள்.
இன்றைக்க காப்புரிமை சட்டத்தில் பல தில்லுமுல்லுகளைச் செய்து பன்னாட்டு நிறுவனங்கள் மருந்து உற்பத்தியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். புற்று நோய்க்கான மருந்து ரூ.5 ஆயிரம் மட்டுமே, அதே மருந்தை பன்னாட்டு நிறுவனம் உற்பத்திக்கான காப்புரிமை (ப்ராடக்ட் பேட்டன்) பெற்றுக் கொண்டு ரூ.1லட்சத்து 20 ஆயிரத்திற்கு விற்பனை செய்கின்றனர். உச்சநீதிமன்றம் இந்த விசயத்தில் நியாயமாக தீர்ப்பு வழங்கி புற்றுநோய் மருந்து ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்தியது. உடனடியாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருப்பதால் வரமுடியாது என்று கூப்பாடு போட்டனர். அப்போதைய வர்த்தக அமைச்சர் ஆனந்த்சர்மா பன்னாட்டு நிறுவனத்திடம் மன்னிப்பே கேட்டார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், இப்போதைய பாரதிய ஜனதா அரசும் பொதுத்துறை மருந்து தயாரிப்பு நிறுவனங்களை முழுமையாகக் கைவிட்டு, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை முழுமையாக வரவேற்கக்கூடியவையாக இருக்கின்றன. மருந்து தயாரிப்பில் சிறப்பாகச் செயல்பட்ட ஐடிபிஎல் எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தின் உற்பத்தி மொத்தமாக நிறுத்தப்பட்டுவிட்டது. உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசிகள் தயாரித்த பொதுத்துறை நிறுவனங்களை நலிவடையச் செய்து மத்திய அரசு கைவிட்டுவிட்டது.
தொற்று நோய்களைத் தடுக்கும் மருந்துகள் சிறப்பாக உற்பத்தி செய்து மக்களின் உயிரைக் காப்பாற்றியதில் பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் பங்கு சிறப்பானது. அதை அப்படியை மத்திய அரசுகள் கைவிட்டு விட்டன.
அதேபோல் மருந்துகளின் விலைக்கட்டுப்பாட்டு கொள்கையையும் அரசுகள் கைவிட்டுவிட்டன. ஆயிரக்கணக்கான மருந்துகளில் வெறும் 354 மருந்துகள மட்டுமே விலைக்கட்டுப்பாட்டு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. மொத்த உற்பத்தி மதிப்பை ஒப்பிடும்போது வெறும் 2 சதவிகித மருந்துகள் மட்டுமே விலை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. விலைக்கட்டுப்பாட்டை முற்றிலும் விலக்கிக் கொள்ளும் மோசடி தற்போது நடைபெற்று வருகிறது. மருந்துகளின் பிராண்ட் பெயர்களை வைத்து விற்பனை செய்வதற்கு மாறாக, அவற்றின் மூலப்பொருளை கொண்டு விற்பனை செய்ய வேண்டும் என்று கூறுவதும் ஒருவகையில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிதான்.
எனவே மருந்துத்துறை பற்றி பொது மக்களுக்கு மிகப்பெருமளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பசி, பிணி, பகை இல்லாத நாட்டைப் படைக்க நாம் பாடுபட வேண்டும்.
இவ்வாறு  ஆர்.ரமேஷ்சுந்தர் பேசினார்.
திருச்சியில் இம்மாதம் கடைசி வாரத்தில் நடைபெறவுள்ள மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் மாநில மாநாட்டை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் வி.சுரேஷ்பாபு தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் வி.ராஜாராம் வரவேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்த நிகழ்ச்சியில் வெண்மணி நினைவாலயத்திற்கு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் ரூ.5 ஆயிரம் நிதியை சிஐடியு மாவட்டச் செயலாளர் எம்.சந்திரனிடம் வழங்கினர்.
ஏராளமான மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.செந்தில்குமார் நன்றி கூறினார்.