Thursday, December 25, 2014

On Thursday, December 25, 2014 by farook press in ,    
திருப்பூரை அடுத்துள்ள 15.வேலம்பாளையம் மாரப்ப கவுண்டர் லே–அவுட் பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் புதிய கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது கட்டிட முள்வேலியில் சரசர என்று சத்தம் கேட்கவே கட்டிட தொழிலாளர்கள் பாம்பு என நினைத்து கம்புகள், குச்சிகளை எடுத்து அடிக்க வந்தனர். அவர்களிடமிருந்து தப்பி புதருக்குள் சென்றது. அப்போது அந்த விலங்கு சுருண்டு படுத்துக்கொண்டது. பின்னர் தான் அது எறும்புதின்னி என தெரிய வந்தது.
உடனே கட்டிட தொழிலாளிகள் அதை பிடித்து ஒரு பெரிய பேரலில் போட்டு அடைத்து வைத்தனர். பின்னர் இதுகுறித்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த சப்– இன்ஸ்பெக்டர் விஜேந்திரன் இது குறித்து திருப்பூர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். இதைதொடர்ந்து திருப்பூர் மீட்புப்பணி வாட்சர்நாகராஜ் வந்து சிறிய பிடிபட்ட எறும்புதின்னியை எடுத்துச் சென்றார்.
On Thursday, December 25, 2014 by farook press in ,    
காமநாயக்கன்பாளையத்தில் இருந்து கரடிவாவி செல்லும் சாலையில் புளியம்பட்டி பிரிவு உள்ளது. இங்கு நேற்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பிணமாக கிடந்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும், இறந்ததற்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Thursday, December 25, 2014 by farook press in ,    
திருப்பூரில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். அவர் புதிய மின் இணைப்புக்காக வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 47). இவர் இடுவம்பாளையத்தில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். திருப்பூர் ஆண்டிபாளையம் லிட்டில்பிளவர் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் அதே பகுதியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அவருடைய கட்டிடத்திற்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்காக இடுவம்பாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதற்காக ரமேஷிடம் இளங்கோவன் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் ரமேஷ் ரூ.50 ஆயிரம் பணத்தை மொத்தமாக கொடுக்க இயலாது. அதை தவணை முறையில் கொடுக்க முடியும் என்று ரமேஷ் கூறியதையடுத்து அதற்கு இளங்கோவன் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் ரமேஷ் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் ரமேஷிடம் கூறிய அறிவுரையின்படி நேற்று காலை அவர் இடுவம்பாளையம் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். மேலும் அவர் இளங்கோவனிடம் முதல் தவணையாக கொடுப்பதாக கூறிய ரூ.10 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைவாக இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் இளங்கோவனை கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும் நேற்று காலை 12 மணி முதல் மாலை 6 மணி வரை இடுவம்பாளையம் மின்வாரிய அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். இந்த அப்போது அங்கு கணக்கில் வராத பணம் ஏதாவது உள்ளதா என்றும் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இந்த சோதனையால் நேற்று காலை முதல் மாலை வரை மின்வாரிய அலுவலகத்தின் முன்பக்க கதவு பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது. பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் இளங்கோவனை கைது செய்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். திருப்பூரில் புதிய மின் இணைப்புக்காக ரூ.10ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Thursday, December 25, 2014 by farook press in ,    
நீலாங்கரை அருகே கடற்கரையில் கல்லூரி மாணவியை கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரை சேர்ந்த 19 வயது பெண், கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவரை காதலித்தார்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை, நீலாங்கரை அருகே உள்ள அக்கரை கடற்கரைக்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பும்போது, மோட்டார்சைக்கிளில் போலீஸ்போல் வந்த ஆசாமி, அவர்களை மிரட்டினார்.
இதைத்தொடர்ந்து மாணவியை மட்டும் விசாரணை என்று கூறி அழைத்துச்சென்ற அந்த ஆசாமி, ஒரு அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி புகார் அளித்தார். இதுபற்றி நீலாங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் மர்ம ஆசாமி குறித்து துப்புதுலக்குவதற்காக, 4 தனிப்படைகளை அமைத்து, போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியில் கல்லூரி மாணவி, மோட்டார்சைக்கிளில் செல்வது பதிவாகி உள்ளது.
ஆனால் மோட்டார்சைக்கிளை ஓட்டிய நபர் முகம் தெளிவாக தெரியவில்லை. கல்லூரி மாணவியை மிரட்டி அழைத்து சென்று கற்பழித்தது போலீஸ்காரரா? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் மருத்துவபரிசோதனை அறிக்கை வந்த பிறகு உண்மை தகவல்கள் தெரியவரும் என்றும் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
On Thursday, December 25, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., உட்கட்சி தேர்தல் வருகின்ற 27ம் தேதி முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது; இது குறித்த ஆலோசனை கூட்டம் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், அவைத் தலைவர் வி.பழனிசாமி, வடக்கு தொகுதி செயலளார் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமை தாங்கி பேசியதாவது:- 
அண்ணா தி.மு.க., கட்சியின் விதிமுறைப்படி, 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம்  ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளை கொண்ட திருப்பூர் மாநகர் மாவட்ட  அண்ணா தி.மு.கவின்  உட்கட்சி தேர்தல் வருகின்ற  27ம் தேதி துவங்கி, 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாநகரம், மாவட்டம், ஒன்றியம், அனைத்து கிளைகள் என ஒவ்வொரு அமைப்பிலும் தலைவர், செயலாளர், இணை செயலாளர், 2 துணை செயலாளர், பொருளாளர், மேலவை பிரதிநிதி அல்லது மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் 3 என, மொத்தம் 9 வகையான பொறுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். திருப்பூர் மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் கோகுல இந்திரா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களை பொதுச்செயலாளர் ஜெயலலிதா நியமித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணையாளர்களாக விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோர்களும் நியமனம் செய்யபட்டுள்ளனர். எனவே, கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் இருப்பவர்கள் மட்டுமே, தேர்தலில் போட்டியிடவும், ஓட்டளிக்கவும் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். அம்மா அவர்களால் நமது மாவட்டத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தந்து தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடந்த முதல் மாவட்டம் திருப்பூர்  மாநகர் மாவட்டம் என்ற பெருமையை மக்கள் முதல்வர் அம்மா அவர்களுக்கும், கட்சிக்கும் பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார். 
கூட்டத்தில் பல்லடம் சட்டமன்ற தொகுதியை மாநகர் மாவட்ட கழகத்தில் இணைந்து செயல்பட அனுமது வழங்கிய பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்தும், வருகிற கட்சி அமைப்பு தேர்தலை திருப்பூர் மாநகர் மாவட்ட பகுதியில் அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்தி முடிப்பது என்றும்,  திருப்பூர் மாநகர், மாவட்ட வளர்ச்சிக்காக அதிக நிதி வழங்கி மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மக்கள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு  நன்றியை தெரிவித்துக்கொண்டும், வருகின்ற 2016 தேர்தலில் கருணாநிதியை முழுமையாக மக்கள் புறக்கணிக்கும் வகையில் சிறப்பாக செயலாற்றுவது, மீண்டும் ஜெயலலிதா முதல்வராக வேண்டி திருப்பூரில் உள்ள கோவில்கள், மசூதிகள், சர்ச்களில் தொடர் பிரார்த்தணைகள் நடத்துவது என்பது  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.,கருப்புசாமி, தொகுதி செயலளார்கள் தம்பி மனோகரன், சேவூர் வேலுசாமி, லோகநாதன்,சார்பு அணி நிர்வாகிகள் வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், மார்க்கெட் சக்திவேல், அன்பகம் திருப்பதி, வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஸ்டீபன்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், சில்வர் வெங்கடாசலம், சிவாச்சலம், மு.சுப்பிரமணியம், நகர செயலாளர்கள் வி.கே.பி.மணி, ராமசாமி, விஸ்வநாதன் உள்ளிட்டவரக்ளும், சார்பு அணி நிர்வாகிகள் கரைபுதூர் நடராஜன், யு.எஸ்.பழனிச்சாமி, புத்தரச்சல்பாபு, ஆனந்தகுமார், சித்ராதேவி, ஜோதிமணி கிருதிகசொமசுன்தரம், வசந்தாமணி,அய்யாசாமி உள்ளிட்டவர்களும் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். 
முடிவில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன் நன்றி கூறினார்.


On Thursday, December 25, 2014 by farook press in ,    
திருப்பூர், பல்லடம், பொங்கலூர் பகுதியில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., சார்பில் கழக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பழைய பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மகளிர் அணி மாநில துணைச் செயலாளரும், மேயருமான அ.விசாலாட்சி தலைமையில் அண்ணா தி.மு.க.வினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவரும் ஊர்வலமாக சென்று பார்க் ரோட்டில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் எம்.எல்.ஏ., கே.பி.பரமசிவம், மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், வடக்கு ஒன்றிய செயலளார் ஜெ.ஆர்.ஜான், அம்மா பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் கருவம்பாளையம்  மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், எம்.மணி, சார்பு அணி நிர்வாகிகள் மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், கரைபுதூர் நடராஜன், ஜோதிமணி, சித்ராதேவி, மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, கலைமகள் கோபால்சாமி, ராஜேஷ்கண்ணா, வளர்மதி கருணாகரன், சாகுல்ஹஅமீது, தாமோதரன், கண்ணன், பட்டுலிங்கம், பூலுவபட்டி பாலு, கண்ணபிரான், வசந்தாமணி, பிரியா சக்திவேல், ரத்தினகுமார், ராஜ்குமார், ரஞ்சித்ரத்தினம், நீதிராஜன், பாசறை யுவராஜ் சரவணன்,லோகநாதன், பரமராஜன் மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க.,சார்பில் எம்.ஜி.ஆரின் 27ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பழைய பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்குமேயர் அ.விசாலாட்சி தலைமையில் அண்ணா தி.மு.க.வினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பல்லடம் கே.பி.பரமசிவம் எம்.எல்.ஏ.,மாவட்ட ஊராட்சி தலைவர் எம்.சண்முகம், நிர்வாகிகள் ஜெ.ஆர்.ஜான், வி.ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம்எம்.மணி, மாவட்ட கவுன்சிலர் தண்ணீர்பந்தல் நடராஜன், மார்க்கெட் சக்திவேல், வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம், கரைபுதூர் நடராஜன், மண்டலத்தலைவர் கிருத்திகா சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கொண்டனர்.
On Thursday, December 25, 2014 by farook press in ,    
ஆறு மாத கால மோடி அரசின் அடி மேல் அடியால் மாட்டு மக்கள் தலையில் இடி மேல் இடி இறங்கிக் கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 21வது மாநாட்டின் நிறைவாக ஊத்துக்குளி பி.ராமமூர்த்தி நினைவுத் திடலில் (ஈஸ்வரன் கோயில் திடல்) பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் உ.வாசுகி பேசியதாவது: மத்தியில் ஆறு மாத கால பாரதிய ஜனதா ஆட்சியில் நாட்டு மக்கள் மீது எண்ணற்ற தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. விலைவாசி கட்டுப்படுத்தவில்லை, விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது. உயிர் காக்கும் மருந்து விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. ஏழை எளிய மக்கள் குறைந்தபட்சம் அந்த மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம் என்று நம்பிக்கைகூட வைக்க முடியாது. இதைப் பற்றி யாராவது எதிர்த்துப் பேசினால், போராடினால் உடனே, வளர்ச்சி வராது என்று பாரதிய ஜனதா தலைவர்கள் கூறுகின்றனர். பாரதிய ஜனதா கூறும் வளர்ச்சி யாருக்கானது என்று மக்கள் கேட்க வேண்டும் என தேர்தலுக்கு முன்பே மார்க்சிஸ்ட் கட்சி கூறியது.
மோடி வெளிநாட்டுக்குப் போகும்போது கூடவே முதலாளிகளையும் கைகளில் பிடித்துக் கொண்டு செல்கிறார். அத்தோடு பாரத ஸ்டேட் வங்கி உயர் அதிகாரியையும் அழைத்துச் செல்கிறார். ஆஸ்திரேலியாவில் அதானி நிலக்கரி சுரங்கத்தை பேரம் பேசுவதற்கு அங்கேயே பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி ரூ.6500 கோடி அள்ளிக் கொடுக்கிறார். 
அணு உலை விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தர வேண்டும் என்ற சட்டப் பிரிவை தளர்த்துவது, காப்பீட்டு துறையில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிப்பது என மோடி - ஒபாமா கூட்டறிக்கை என்பது இந்தியாவில் மொத்தத்தையும் அவர்களுக்கு விற்பதற்கான ஒப்பந்தமாகும்.
வளர்ச்சி ஏற்படுத்துகிறோம் என்று தேர்தலுக்கு முன்பாக பாரதிய ஜனதா தலைவர்கள் சொன்னது நூறு சதவிகிதம் கலப்படமற்ற பொய்கள் என்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் கையில் நாடு சிக்கியுள்ளது. இவர்களிடம் சிக்கினால் நாடு எப்படி உருப்படும்? சாவர்க்கரின் வாரிசுகள் தேசிய கொடியை ஏற்றுவதைவிட அவமானம் இந்த தேசத்துக்கு வேறென்ன இருக்க முடியும்?
தமிழையும், தமிழகத்தையும் பாதுகாக்க பாரதிய ஜனதா மாநிலத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அமித் ஷா கூறியிருக்கிறார். ஏற்கனவே எல்லாவற்றையும் இந்திக்கு மாற்றுகிறார்கள். இவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்து கொண்டே தமிழை போட்டு மிதிக்கிறார்கள். மாநிலத்தில் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழும், தமிழகமும் எப்படி உருப்படும்?
இவர்கள் ஆட்சியில் முற்போக்கு சிந்தனை, அறிவியல் பார்வைகளை முடக்கி பிற்போக்கு சிந்தனை, கற்பனாவாதத்தை திணிக்கின்றனர். தேசத்தின் எதிர்காலத் தலைமுறை சரியான மூடர்களாக வளர வேண்டுமா? இதை அனுமதிக்கலாமா? 
பாரதிய ஜனதா உள்ளிட்ட சாதி, மத கட்சிகளுக்கு நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது.  எத்தனை பெயர்களில், எத்தனை வடிவங்களில் வந்தாலும் தாராளமயக் கொள்கையை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளை நாம் ஏற்கக்கூடாது. அவர்களைத் தோற்கடிக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். வர்க்க, வெகுஜன அமைப்புகளை வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறு உ.வாசுகி கூறினார்.
கே.தங்கவேல் எம்.எல்.ஏ.,
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., பேசினார். தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு சில விலையில்லா பொருட்களைக் கொடுத்துவிட்டு, அடிப்படையான பிரச்சனைகளில் நெருக்கடியை அதிகரிக்கிறது. பால்விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு என சாமானிய மக்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துகின்றனர். முதலமைச்சர் ஒருவரே நான்காண்டு சிறை, நூறு கோடி அபராதம், பதவி பறிப்பை சந்தித்தது வேறெங்குமே இல்லை. ஆனால் மீண்டும் அம்மா ஆட்சி வரும் என்று அக்கட்சியினர் பூஜைகள், மண் சோறு சாப்பிடுவது, தொண்டர்களுக்கு மொட்டை போடுவது, ஒப்பாரி வைத்து அழும் போராட்டம் நடத்துவது என செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எந்த நாகரிகம், பண்பாடும் இல்லாமல் அதிமுக, அரசியலை கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்கிறது.
இவர்களது ஊழலை எதிர்ப்பதாக வேறு கட்சிகளும் கூறுகின்றனர். ஒரு கட்சியின் ஊழலை மற்ற கட்சிகள் எதிர்க்கலாம். ஆனால் ஊழலுக்கு மூலகாரணம் என்ன என்பதை மற்ற கட்சிகள் சொல்வதில்லை. தனியார்மயம் தான் ஊழலின் ஊற்றுக்கண் என்று மார்க்சிஸ்ட் கட்சி சரியாகச் சொல்கிறது. எனவே தனியார்மயக் கொள்கையை எதிர்க்காமல் இந்த ஊழல்களைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே தமிழகத்தில் தனித்துவமான மார்க்சிஸ்ட் கட்சியை ஆதரித்து பொது மக்கள் வலுப்படுத்த வேண்டும் என்று கே.தங்கவேல் எம்.எல்.ஏ. கூறினார்.
முன்னதாக இக்கூட்டத்தில் மாவட்டக்குழுச் செயலாளர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.மூர்த்தி, செ.முத்துக்கண்ணன் ஆகியோர் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.குமார் தலைமை ஏற்றார். ஊத்துக்குளி தாலுகா குழுச் செயலாளர் கை.குழந்தைசாமி வரவேற்றார். நிறைவாக ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.கே.கொளந்தசாமி பேசினார்.

தேர்த்திருவிழா போல!
ஊத்துக்குளியில் வழக்கமாக கோயில் தேர்த்திருவிழா சமயத்தில்தான் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அந்த அளவுக்கு இதுவரை வேறு எந்த ஒரு இயக்கமும், அரசியல் அமைப்புகளும் மக்களைத் திரட்டியதில்லை. ஆனால் செவ்வாயன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாட்டுப் பேரணியிலும், பொதுக் கூட்டத்திலும் ஊத்துக்குளி தேர்த்திருவிழா அளவுக்கு மக்கள் கூட்டம் அலை மோதியது என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.