Friday, March 13, 2015

On Friday, March 13, 2015 by farook press in ,    
சம வேலைக்கு சம ஊதியம், வரைமுறையற்ற ஆலை மூடலை தடுத்து நிறுத்துவது, குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் மாத ஊதியம், தொழிலாளர் உரிமை பறிப்பை தடுத்திடுவது, நீர்த்துப் போகச் செய்யும் தொழிலாளர் சட்ட திருத்தங்களை கைவிடுவது உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி மே 12ம் தேதி தமிழகம் தழுவிய மறியல் போராட்டத்தை நடத்துவது என்று சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.
சிஐடியு மாநிலக்குழுக் கூட்டம் திருப்பூரில் மார்ச் 12, 13 தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முக்கிய தீர்மானங்களை விளக்கி சிஐடியு மாநிலத் தலைவர் ஏ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ., வெள்ளியன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காப்பீட்டு துறையில் பெருமுதலாளிகளை அனுமதிப்பது, நிலக்கரி சுரங்கங்களைத் தனியாருக்கு வழங்குவது என மத்திய அரசு பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. அதேசமயம் தொழில் உறவுச் சட்டங்களை பயன்பாடில்லாத வகையில் நீர்த்துப் போகச் செய்வது, நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்தம் ஆகியவற்றின் மூலம் தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. இதை எதிர்த்து தொடர் கண்டன இயக்கம் நடத்த சிஐடியு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் 12 பெரிய துறைமுகங்களை அரசின் நேரடி பார்வையில் உள்ள பொறுப்புக்கழகங்களிடம் இருந்து பறித்து நேரடியாக அரசுக்குத் தொடர்பில்லாத வகையில், தனியாருக்கு ஒப்படைக்க வழி செய்யும் விதத்தில், அவற்றை கம்பெனிகள் சட்டத்தில் பதிவு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவின் நுழைவாயில்களாக இருக்கும் துறைமுகங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்.
நோகியா, பாக்ஸ்கான் போன்ற பெரிய மின்னணு நிறுவனங்கள் மூடப்பட்டதால் 25 ஆயிரம் பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கப்பாரோ எனப்படும் ஆட்டோமொபைல் தொழிற்சாலையும் மூடப்படும் என்று அறிவித்துள்ளது. ஒரு பக்கம் மேக் இன் இந்தியா என்று முழங்கிக் கொண்டே, மறுபக்கம் ஆலை மூடல் மூலம் தொழிலாளர்களின் வேலை பறிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் நோக்கியா ஆலை மூடல் பற்றி மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சீத்தாராம் யெச்சூரி அழுத்தமாக கேள்வி எழுப்பியதற்கு, அந்த ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அந்த ஆலை திறக்கப்பட்டால் அதை வரவேற்போம். ஆனால் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஏதும் இல்லை.
தற்கொலை நகரம் திருப்பூர்
திருப்பூரில் 8 மணி நேரம் வேலை என்பது இல்லை. 12 மணி நேரம், 16 மணி நேரம், 24 மணி நேரம் கூட தொழிலாளர்கள் வேலைவாங்கப்படுகின்றனர். தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி இல்லாதநிலையில் வாடகை கொடுக்க முடியாமல் உள்ளனர். இது போல் பலவித பிரச்சனைகளில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் முன்னணியில் இருக்கும் நகரமாக திருப்பூர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.தொழிலாளர்கள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு அடையாளமாக இந்த நிலை உள்ளது.
நலவாரியம் ஜனநாயகப்பூர்வமாக செயல்பட வேண்டும், இந்த விசயத்தில் தமிழக அரசின் நடவடிக்கை மிக மோசமான தான்தோன்றித்தனமாக உள்ளது. நலவாரிய செயல்பாட்டை ஜனநாயகப்பூர்வமாக மாற்றுவதுடன், சிஐடியுவுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். 
திருவண்ணாமலை, புதுக்கோட்டை, பெரம்பலூர் உள்பட 7 மாவட்டங்களில் முந்திரி தொழிலில் இரண்டரை லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கச்சா முந்திரி போதுமான அளவுக்கு இல்லை. எனவே தமிழக அரசு புறம்போக்கு நிலங்கள், சாலையோர பகுதிகளில் முந்திரி வளர்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர் சம்பளப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதை சுமூகமாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிப்பு, மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழக
​ம் முழுவதும் மே 12ம் தேதி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசுத் துறைகளில் வேலை நியமனம், இடமாற்றம் உள்ளிட்ட விசயங்களுக்கு பணம் வாங்கப்படுவதாக ஊடகங்களில் செய்து வருகிறது. இந்த புகார்கள் குறித்து அரசு கவலைப்பட வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சர் ஆய்வு செய்து முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அ.சவுந்தரராசன் எம்.எல்.ஏ., கூறினார்.
இந்த பேட்டியின்போது மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கருமலையான், சிஐடியு திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் எம்.சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

0 comments: