Friday, April 17, 2015

On Friday, April 17, 2015 by Unknown in ,    
கிராமப்பகுதிகளில் தனிநபர் கழிவறை கட்டுவதை ஊக்குவிக்க சுயஉதவிக்குழுவுக்கு ஊக்கத்தொகை: கலெக்டர் தகவல்
மதுரை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தை திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் அற்ற மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 2015–16–ம் ஆண்டு வரவு செலவு திட்ட உரையில் 15 லட்சம் தனிநபர் இலக்க கழிப்பறைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் 66 ஆயிரத்து 800 கழிப்பறைகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 25 ஆயிரத்து 91 கழிப்பறைகளும் கட்டப்படும். ஒவ்வொரு தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கும் தகுதி வாய்ந்த பயனாளிக்கு ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
ஊரக பகுதிகளில் தனிநபர் இல்லங்களில் கழிப்பறைகள் கட்டுவதற்கான தேவையினை உருவாக்குவது மற்றும் கட்டப்பட்ட கழிப்பறைகள் தொடர்ந்து உபயோகப்படுத்துவதை உறுதி செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான சுயஉதவிக்குழு கூட்டமைப்பு போன்றவைகளை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு தனிநபர் இல்ல கழிப்பறைக்கு ரூ.300 ஊக்கத்தொகையாக இந்த அமைப்புகளுக்கு வழங்கப்படும்.
தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கான விண்ணப்பங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் இலவசமாக கிடைக்கும்.
இத்திட்டம் கிராம ஊராட்சியால் செயல்படுத்தப்படும். கிராம ஊராட்சி தலைவரின் வேலை உத்தரவு பெற்றவுடன், 3 மாதங்களுக்குள் தனிநபர் இல்ல கழிப்பறையை கட்டி முடிக்கப்பட வேண்டும். இப்போது ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்படும் தனிநபர் இல்ல கழிப்பறைக்கான மானியத் தொகை 2 தவணைகளாக விடுவிக்கப்படும். அடித்தளம் முடிந்த பிறகு முதல் தவணையும், கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் 2–வது தவணையும் விடுவிக்கப்படும். எனவே தனிநபர் இல்ல கழிப்றை இல்லாதோர் முழுமையாக இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் சமூகம் சார்ந்த அமைப்புகளுக்கும், ஊராட்சிகளுக்கும் சிறந்த களப்பணியாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்

0 comments: