தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸார் நேற்று மிகப்பெரிய பேரணி நடத்தினர். பேரணியின் முடிவில் 25 துறைகளின் முறைகேடுகள் குறித்த பட்டியலை ஆளுநர் ரோசய்யாவிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நிர்வாகிகள் அளித்தனர்.
தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சியில் பல துறைகளிலும் முறைகேடுகள் நடப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டி வந் தார். இந்த முறைகேடுகள் குறித்த பட்டியலை ஆளுநரிடம் அளிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் நேற்று மிகப்பெரிய பேரணியை நடத்தி, ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தார்.
முக்கிய தலைவர்கள்
பேரணியில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் ஆயிரக்கணக்கான காங்கிரஸார் திரண்டனர். மாலை 3.40 மணிக்கு தொடங்கிய பேரணி லேங்க்ஸ் பூங்கா சாலையில் முடிவடைந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம் பரம், அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர், மாநில துணைத் தலைவர் எச்.வசந்தகுமார் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பேரணியில் தமிழக அரசுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை காங்கிரஸார் ஏந்திச் சென்றனர்.
பேரணியின் முடிவில் இளங்கோவன் பேசியதாவது:
காங்கிரஸை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது என்பதையே இந்தப் பேரணி காட்டியுள்ளது. தேர்தல் தோல்வி என்பது சாதாரணம். மக்களிடம் இருந்து காங்கிரஸை பிரிக்க முடியாது. ராகுல் எங்கே என்று எல்லோரும் கேலி செய்தார்கள். இன்றைக்கு அவர் கேட்கும் கேள்விக்கு ஆளுங்கட்சியினரால் பதில் சொல்ல முடியவில்லை.
தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக, மக்களை காக்க வந்தேன் என்று கூறியது. ஆனால் இந்த 4 ஆண்டுகளில் லஞ்சமும் ஊழலும்தான் நிறைந்துள்ளன. தவறு யார் செய்தாலும் தட்டிக் கேட்போம். சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காங்கிரஸ்காரர்களுக்கு தவறை தட்டிக்கேட்க அதிக அக்கறை உள்ளது.
விவசாயிகளுக்கு பிரச்சினை என்றதும் வீதிக்கு வந்த சோனியா காந்தி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தார். நாங்கள் பதவிக்கு ஆசைப் படவில்லை. ஆனால், 2016-ல் காங்கிரஸ் ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்குவோம்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
குஷ்பு புகார்
குஷ்பு பேசும்போது, ‘‘தமிழக மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கையுள்ளது. 2016-ல் காங்கிரஸ் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை’’ என்றார்.
பேரணி முடிந்ததும் இளங்கோவன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து, தமிழகத்தில் 25 துறைகளில் ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டி அதற்கான பட்டியலை அளித்தனர். பின்னர் நிருபர்களை சந்தித்த இளங்கோவன், “தமிழக அரசின் 25 துறைகளில் நடக்கும் ஊழல் குறித்து ஆதாரங்களோடு புகார் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்’’ என்றார்.