Friday, September 25, 2015

On Friday, September 25, 2015 by Unknown in ,    
தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை அ.தி.மு.க. அரசு முடக்கி வருகிறது: ஸ்டாலின் பேச்சு
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்திட்டத்தின் கீழ் மக்களை சந்தித்து வரும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை விருதுநகர் வந்தார். விருதுநகர் மெயின் பஜாரில் வியாபாரிகளை சந்தித்து கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட அவர், மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்களிடையே பேசினார்.
அப்போது, ஹஜ் பயண நெரிசலில் 700-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்காக தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து ராமமூர்த்தி ரோட்டில் உள்ள 2 திருமண அரங்குகளில், ஓய்வூதியம் பெறுவோர், முதியோர், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள் மற்றும் நகர் பிரமுகர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரமுகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். வரி விதிப்பு முறையில் மாற்றம், விருதுநகரில் மருத்துவ கல்லூரி, ரெயில்வே மேம்பாலம், இலவச திட்டங்களுக்கு பதிலாக நலத்திட்ட உதவிகள், பூரண மதுவிலக்கு, தென் மாவட்டங்களில் தொழில் தொடங்குதல், தி.மு.க.வில் பல்வேறு அணிகளை வலுப்படுத்துதல், முதல்அமைச்சர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினை அறிவித்தல், குழந்தைகள் பாதுகாப்பு, தி.மு.க.வினர் செயல்பாட்டில் மாற்றம் ஆகியவற்றை பற்றிய கருத்துகள் கூறப்பட்டன. பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெறப்பட்டன. அப்போது மு.க. ஸ்டாலின் பேசியதாவது:–
இங்கு பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன. இங்கு பேசிய சகோதரி தி.மு.க. தொடங்கிய போது இருந்த கொள்கைப் பிடிப்பு தற்போது பின் நோக்கிச் செல்வதாக குறிப்பிட்டார். கால மாற்றங்கள் ஏற்படும் போது வளர்ச்சியும் ஏற்படும். தெருக்கூத்து நடந்த காலம் உண்டு. நாடகம் வந்தபோது தெருக்கூத்து மறைந்து விட்டது. சினிமா வந்தபோது, நாடகம் இல்லாமல் போய்விட்டது. தற்போது சி.டி. வந்தபின்பு சினிமாவிற்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டது. கால மாற்றத்தினால் வளர்ச்சி ஏற்பட்டாலும் கொள்கைப் பிடிப்பில் இருந்து பின்வாங்கக் கூடாது. இதேபோன்று தி.மு.க.வினர் பதவிக்கு வந்தாலும் அதனை பொறுப்பு என உணர்ந்து செயல்பட வேண்டும்.
நான் துணை முதல்வராக இருந்தபோது தொழில் துறையையும் கவனித்து வந்தேன். அப்போது தென் மாவட்டங்களில் தொழில் தொடங்குவதற்காக தொழில் அதிபர்களையும் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்களையும் சந்தித்து பேசினேன். தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க திட்டமிட்டு செயல்படுத்துவதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது.
வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தென் மண்டலம், கொங்கு மண்டலம், டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்களில் சென்று மக்களின் கருத்துகளை கேட்டு வருகிறார்கள். தற்போது நீங்கள் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்களையும் நான் சென்னைக்கு கொண்டு செல்கிறேன். இவற்றை எல்லாம் இணைத்து தான் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும்.
தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை அ.தி.மு.க. அரசு முடக்கி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் போலீஸ் துறையில் 216 பேர் தற்கொலை செய்துள்ளனர். போலீஸ் அதிகாரி விஸ்ணு பிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரிக்க கேட்டதற்கு யாரையோ காப்பாற்றுவதற்காக சி.பி.சி.ஐ.டி. விசாரணை போதும் என்கிறார். சட்டசபையில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா அடுக்கடுக்கான பொய்களை கூறி வருகிறார்.

0 comments: