Friday, February 21, 2020

On Friday, February 21, 2020 by Tamilnewstv in ,    
திராவிடர் கழக பொதுக்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் இன்று நடைபெற்றது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் அறிவுக்கரசு தலைமை வகித்தார். திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி இதில் கலந்து கொண்டார்.

                  

 இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வீரமணி செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினார்.
அவர் கூறுகையில், மணியம்மையார் நூற்றாண்டு விழாவை மார்ச் 10ஆம் தேதி சென்னையில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை நிரந்தரமாக நீக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் மீண்டும் ஒரு முறை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். திராவிடர் கழகம் சார்பில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை 11 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதை வரவேற்கிறோம். இந்த நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் மார்ச் 23-ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டம் மூலம் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க அழுத்தம் கொடுக்கப்படும். இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் தடையை  மீறி போராட்டம் நடத்தப்படும். தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். உயர் ஜாதியினரின் பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு எனும் அரசமைப்புச் சட்டம் மோசடி திட்டமாகும். அதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை நாங்கள் வரவேற்றோம். அதேசமயம் இந்த முயற்சியை வரவேற்றாலும், அது முழு முயற்சியாக இருக்க வேண்டும். அவசர அவசரமாக இல்லாமல், ஆழமாக இதை செய்து முடிக்க வேண்டும். ஐந்து மாவட்டங்களில் மட்டும் இந்த சட்டத்தை அமல்படுத்தி விட்டு விட்டால், இதர மாவட்டங்கள் பாலைவனமாக மாறும். அதனால் முழுமையாக சட்டத்தை கொண்டு வரவேண்டும். தற்போது மசோதா மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. முழுமையாக செயல்படுத்தியும் ஒப்புதல் பெறவேண்டும். ஒரு துறையில் நிபுணரை தேர்வு செய்வதில் தவறில்லை. அவர் எந்த ஜாதியாக இருந்தாலும் அவரை நியமித்துக் கொள்ளலாம். நாங்கள் தனிப்பட்ட பிராமணருக்கு எதிரானவர்கள் கிடையாது. பிராமணியத்தை தான் எதிர்க்கிறோம். அதனால் பிரசாந்த் கிஷோர் நியமனத்தில் தவறில்லை என்றார்.

0 comments: