Thursday, March 12, 2020

On Thursday, March 12, 2020 by Tamilnewstv in    
திருச்சி 

திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் வனிதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 

திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு இருதய உள்துளை சிகிச்சைக்காக கேத்லேப் தொடங்கப்பட்டது. இங்கு தமிழக முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆஞ்சியோ மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கே பலவிதமான இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாதத்திற்கு  ஆயிரம் வெளி நோயாளிகளும் 3,000 உள் நோயாளிகளும் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர். நெஞ்சு வலியுடன் வரும் நோயாளிகளுக்கு இங்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தேவைப்பட்டால் அவர்களுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் இதன்மூலம் பயனடைந்துள்ளனர். கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி  வரையிலான ஓராண்டில் ஆயிரம் ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைகள் திருச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனைகளில் ஒன்றரை லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். திருச்சி அரசு மருத்துவமனையில் முற்றிலும் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
 இருவருக்கு நிரந்தர பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.  பெண்களுக்கு கர்ப்பப்பை நாளங்களில்  ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் உயிர் இழக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.   தற்போது கேத்லேப் மூலம் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளாமலும், கர்ப்பப்பையை அகற்றாமலேயே சிகிச்சை அளிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் ரத்தப் போக்கினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் தடுக்கப்படுகிறது.  பிறப்பிலேயே இருதயத்தில் ஓட்டையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு  கேத்லேபில் உள்ள ஒரு கருவி மூலம் துவாரத்தை அடைக்கும் சிகிச்சை முறை விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12 படுக்கைகள் கொண்ட பிரத்தியேக சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக மேலும் 12 படுக்கைகள் கொண்ட சிகிச்சை வார்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த சில நாட்களில் இது பயன்பாட்டுக்கு வரும்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து 9 பயணிகள் காய்ச்சலுடன் இங்கு பரிசோதனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு லேசான காய்ச்சல் மட்டுமே இருந்தது. அவர்கள் உடனடியாக அதற்கான சிகிச்சை பெற்று வீட்டிற்குச் சென்று விட்டன என்றார்.
 உடன் இருதய அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியன், டாக்டர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இருந்தனர்.


0 comments: