Monday, September 15, 2014

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் : உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூடாததால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்; போக்குவரத்து பாதிக்கப்
படுகிறது.
திருப்பூர் பி.என்.,ரோட்டில், மேட்டுப்பாளையம் ஸ்டாப் உள்ளது. அப்பகுதியில் உள்ள தரைப்பாலம் அருகே செல்லும் குடிநீர் குழாயில், சில மாதங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. சரி செய்யும் பணிக்காக குழி தோண்டி, அப்படியே போட்டு விட்டுச் சென்றனர்.பணியை முடிக்காததால், தொடர்ந்து தண்ணீர் வெளியேறுகிறது; குழியும் பெரிதாகி வருகிறது. இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது: புது பஸ் ஸ்டாண்டில் இருந்து தென்மாவட்டங்களுக்கும்; திருச்சி, தஞ்சாவூருக்கும் இவ்வழியாக பஸ்கள் செல்கின்றன. இது, ஒருவழி பாதை. மேலும், சாலை ஏற்கனவே குறுகலாக உள்ளது. போதாக்குறைக்கு, குழி தோண்டி, ரோட்டில் பாதியளவு மண் குவித்து வைத்துள்ளனர். இதனால், வாகனங்கள் வரும்போது பாதசாரிகளால் ஒதுங்கக்கூட முடிவதில்லை.கடைகளின் முன்பாக நிறுத்தப்படும் வாகனங்களால், மேலும் இடைஞ்சல் ஏற்படுகிறது."பீக் ஹவர்ஸில்' போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தாலும், வாகனங்களை ஒழுங்குபடுத்த முடியவில்லை; தினமும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. குடிநீர் குழாய்களை சரிசெய்து, குழியை மூடி, விரைவில் சாலை அமைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
அப்பகுதி குடிநீர் ஆய்வாளர் சுகுமாரிடம் கேட்டபோது, ""மெயின் குடிநீர் குழாய் மற்றும் டேங்க், பங்களா ஸ்டாப்பில் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் தண்ணீர் சப்ளையை நிறுத்தும்போது, குழியில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றிய பின்பே, பணி செய்ய வேண்டும்.""இந்த வாரம் மேட்டுப்பாளையம் நீரேற்று நிலையத்தில் பராமரிப்பு பணி நடக்கும்போது, தண்ணீர் சப்ளை நிறுத்தப்படும். அப்போது பணியை துவங்கி, விரைந்து முடிப்போம்,'' என்றார்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
உடுமலை : கேரள மாநிலம் மறையூர் அருகே, கரும்புத் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 50 கிலோ சந்தன மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டன.

கேரள மாநிலம் மறையூர், காந்தலுார் வனச்சரகம், பயஸ்நகர் பீட் பகுதியில், வேட்டைத்தடுப்புக் காவலர் நாகராஜூக்கு சொந்தமான கரும்புத் தோட்டம் உள்ளது. நேற்றுமுன்தினம் இவரது தோட்டத்தின் ஒரு பகுதியில், மூன்று சாக்கு மூட்டைகள் கிடந்தன. சந்தேகமடைந்த நாகராஜ், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.துணை வனச்சரகர் அஜி உள்ளிட்ட வனத்துறை அலுவலர்கள் அப்பகுதிக்கு வந்து, சோதனை செய்ததில், 50 கிலோ எடை கொண்ட 14 சந்தன மரக்கட்டைகள் சாக்கு மூட்டைகளில் இருந்தது. சந்தன மரக்கட்டைகளை வெட்டி, மறைத்து வைத்த மர்ம நபர்கள் குறித்து, வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

தமிழ்நாடு மற்றும் கேரள வனப்பகுதி எல்லைகளில், இருமாநில வனத்துறையினரிடையே, எல்லை பிரச்னையால் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியை யார் மேற்கொள்வது என தெரியாமல் திணறுகின்றனர். இருமாநில வனத்துறையினரிடையே ஒருங்கிணைப்பு இல்லாததை பயன்படுத்தி, மர்ம நபர்கள் தொடர்ந்து, சந்தனக்கட்டைகளை கடத்தி வருகின்றனர்.கடந்த ஜூலை மாதம், மறையூர் வனப்பகுதியில், சந்தனக்கட்டைகளை தொடர்ந்து கடத்தி வந்த, சேலம் கரிமாந்துறையை சேர்ந்த லட்சுமணன், 45 மறையூர் போலீசாரால் கைது செய்யப்பட்டான். முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கருதினர்.

ஆனால், 3ம் தேதி, காந்தலுார் வனச்சரகத்தில், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு சந்தன மரங்கள், மர்ம நபர்களால் வெட்டிக் கடத்தப்பட்டன. இதுகுறித்து போலீசார், வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவத்தில் குற்ற வாளிகள் பிடிபடாத நிலை யில், 10 நாள் இடைவெளியில் மீண்டும் சந்தனக் கட்டைகள் கைப்பற்றப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
On Monday, September 15, 2014 by farook press in ,    
பல்லடம் : பல்லடம் அருகே, தனியார் டையிங் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், துணிகள் எரிந்து சேதமடைந்தன.
கரைப்புதூரில் விஜய் என்பவருக்கு சொந்தமான டையிங் நிறுவனம் செயல்படுகிறது. இப்பகுதியில் நேற்று மாலை யாரோ புகைபிடித்து விட்டு, அணைக்காமல் போட்டுச் சென்றுள்ளனர். நெருப்பு பரவி, டையிங் செட் அருகே இருந்த தென்னை ஓலை எரியத் துவங்கியது. இதைப்பார்த்த பொதுமக்கள், தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதற்குள், தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கு பரவியது. இதில், டையிங் செட் மேற்கூரை மற்றும் துணி எரிந்து சேதமாகின. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒருமணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

On Monday, September 15, 2014 by farook press in ,    
அவிநாசி : அவிநாசி அருகே கிணற்றுக்குள் விழுந்த புள்ளி மானை, தீயணைப்பு துறையினர் நேற்று உயிருடன் மீட்டனர்.
அவிநாசி ஐயப்பன் கோவில் அருகே கரண்ட்காரர் தோட்டத்தை சேர்ந்தவர், மாரப்பன். இவரது தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில், 12ம் தேதி காலை புள்ளி மான் ஒன்று தவறி விழுந்தது. திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறை வீரர்கள், நேற்று முன்தினம் மானை மீட்க முயற்சித்தனர். வலை விரித்தோ, அல்லது மயக்க மருந்து செலுத்தினால் மட்டுமே மானை பிடிக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர். அதனால், உடுமலை வனச்சரகம் அமராவதியில் இருந்து, நேற்று வலை கொண்டு வரப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மோகன், ஜெகன் ஆகியோர், 70 அடி ஆழ கிணற்றுக்குள் இறங்கி, மான் மீது வலையை வீசினர். மற்ற வீரர்கள், வலையை மேலே இழுத்து, மானை காப்பாற்றினர்.
வனவர் முருகேசன் கூறுகையில்,""கிணற்றில் விழுந்த ஆண் புள்ளி மானுக்கு, இரண்டரை வயதிருக்கும். கிணற்றுக்குள் இருந்ததால், மிகவும் பயந்துள்ளது. லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட மான், சிகிச்சைக்குபின் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விடப்படும்,'' என்றார்.
அப்பகுதியினர் கூறுகையில், "இரண்டு நாட்களாக, கிணற்றுக்குள் விழுந்து உயிருக்கு போராடிய மானை, தீயணைப்பு துறையினர் போராடி, பத்திரமாக மீட்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது,' என்றனர்.

On Monday, September 15, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சியில்இடைத்தேர்தல் நடைபெற உள்ள, இரு வார்டுகளுக்கு வெளியிடப்பட்டுள்ள, புதிய வாக்காளர் துணை பட்டியலில், போட்டோக் கள் இல்லை. அதனால், கள்ள ஓட்டு போடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கு தீர்வு காண, மாநில தேர்தல் கமிஷனுக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு மற்றும் 45வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் வரும் 18ல் நடக்கிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, 22வது வார்டில் 8,538 வாக்காளர்கள் இருந்தனர்; தற்போது 12 ஆயிரத்து 290 வாக்காளர்கள் உள்ளனர். 45வது வார்டில் கடந்த தேர்தலில், 10 ஆயிரத்து 599 ஆக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, தற்போது 13 ஆயிரத்து 295 ஆக உயர்ந்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்திய பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2012, 2013 மற்றும் நடப்பு ஆண்டில் மேற்கொண்ட திருத்தத்தின் அடிப்படையில், துணை பட்டியல்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 22வது வார்டில் தயாரிக்கப்பட்டுள்ள பட்டியல்களில், 2,156 ஆண்கள்; 1,939 பெண்கள் என 4,095 வாக்காளர்களின் போட்டோ இல்லாமல், பட்டியல் தயாரித்து, "பூத் சிலிப்' வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டை எண் தெளிவாக அச்சிடப்பட்டுள்ள நிலையில், பட்டியலில் போட்டோ மட்டும் இல்லாததால், எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. கள்ள ஓட்டு பதிவாக அதிக வாய்ப்பு இருப்பதால், போட்டோவுடன் கூடிய துணை பட்டியல் வெளியிட வேண்டும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, வாக்காளர்களின் உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என மா.கம்யூ., மற்றும் இந்திய கம்யூ., கட்சிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் மனு கொடுத்துள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலரான, மாநகராட்சி கமிஷனர் அசோகனிடம் கேட்டபோது, ""வாக்காளர் பட்டியல் போட்டோ இல்லாமல் இருப்பது தொடர்பாக, அரசியல் கட்சியினர் கொடுத்த கோரிக்கைகள், மாவட்ட நிர்வாகத்துக்கு தெரி விக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், மாநில தேர்தல் கமிஷனுடன் பேசி, வெகுவிரைவில் தீர்வு பெற்றுத்தரும்,'' என்றார்.

மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, "அரசியல் கட்சியினர் கொடுத்த கடிதங்கள் அடிப்படையில், மாவட்ட நிர்வாகம், தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இதுதொடர்பாக, நாளை (இன்று) அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
கோவை மாநகரக் காவல் துறை , மாவட்டத்தில் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில் பொதுமக்களிடம் இருந்து சமூகவிரோத செயல்களைப் பற்றியத் தகவல்களைப் பெறவும், நேரடியாக பொதுமக்களே எந்த ஒரு குற்றச் சம்பவத்தைப் பற்றிய தகவல்களைக் கொடுக்கவும் மொபைல் எண்ணை அறிமுகப் படுத்தி இருக்கிறது. மெயில் மூலமாகவும் காவல்துறைக்குத் துப்புக் கொடுக்கலாம். எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டிய மொபைல் எண் : 9843100100 (இது நேரடியாக கமிஷனர் மற்றும் டெபுடி கமிஷனரின் பார்வைக்குப் போகும்) பொதுமக்கள் தொலைபேசியில் நேரடியாக டெபுடி கமிஷனரிடம் பேச : 0422-6545464 மெயில் மூலம் தகவல் தெரிவிக்க : copcbe@yahoo.com தொடர்ச்சியான ரோந்துப் பணியின் காரணமாகவும், காவல்துறையின் உடனடி நடவடிக்கையின் காரணமாகவும் , 2012 ம் ஆண்டை விட , 2013 ம் ஆண்டில் கோவையில் குற்றச் செயல்கள் கணிசமாகக் குறைந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். மக்களுடைய பங்களிப்பின்றி காவல்துறையினால் மட்டுமே எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது. ஆகவே நாமும் நம் காவல்துறையினரோடு இணைந்து பணியாற்றுவோம்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : பிரபல சிடி வியாபாரி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சென்னையில் புதுப்படங்களை சிடிக்களாக தயாரித்து, சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. இதன் பேரில் வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். இதில், செங்குன்றம் பாடியநல்லூரை சேர்ந்த சண்முகப்பாண்டி (38) என்பவர் தொடர்ந்து புதுப்படங்களை சிடிக்களாக தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. போலீசார் அவரை சில தினங்களுக்கு முன் கைது செய்தனர்.  சண்முகப்பாண்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதை ஏற்றுக் கொண்ட கமிஷனர் ஜார்ஜ், சிடி வியாபாரி சண்முகப்பாண்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
புதுவண்ணாரப்பேட்டை, : புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து பிரிவு காவலர் முகமது இஸ்மாயில் (40). கடந்த 4 நாட்களுக்கு முன், புதுவண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, இவருக்கும், பைக்கில் வந்த 3 சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. தாக்கப்பட்டதாக கூறி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முகமது இஸ்மாயில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டக்கல்லூரி மாணவர்கள் முகமது அன்சாரி, சதீஷ் உள்பட 3 பேரை கைது செய்தனர். இதைக் கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  பின்னர், துணை கமிஷனர் நெஜ்மல் ஹோடாவிடம், புகார் மனு கொடுத்தனர். இந்நிலையில், புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து பிரிவில் இருந்த முகமது இஸ்மாயில், நேற்று மணலி புதுநகர் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
On Monday, September 15, 2014 by farook press in ,    
சென்னை, : கொரட்டூர் போலீசார் நேற்று பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். 
தீவிர விசாரணையில், மதுரை, முத்துராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த கவாஸ்கர் (28) என்பதும், அவர் மீது சென்னை, புறநகர் மற்றும் தென் மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.
மேலும், நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை, நேதாஜி நகரை சேர்ந்த சீனிமுகமது, (42) என்பவரிடம் கத்திமுனையில் பணத்தை பறித்து சென்றதும் தெரிந்தது. அவர் கொடுத்த தகவலின்பேரில் 15 சவரன் நகையை பறிமுதல் செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.