Friday, November 21, 2014

On Friday, November 21, 2014 by Unknown in ,    
மதுரை மாவட்டத்தில் சிகிச்சைக்கு கர்ப்பிணிகள் தாமதமாக கொண்டுவரப்படுவதால் இறப்புகள் நேரிடுவது தெரியவந்துள்ளது. அதே சமயம் உரிய நேரத்தில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளும், அவர்களது சிசுவும் காப்பாற்றப்பட்டுள்ளன.
மதுரையில், அரசு ராஜாஜி மருத்துவமனையைத் தவிர்த்து, மதுரை மாவட்டத்தில் (ஊரகப்பகுதிகளில்) 51ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர், வாடிப்பட்டி ஆகியவற்றில் தாலுகா மருத்துவமனைகள் உள்ளன. திருப்பரங்குன்றம், சமயநல்லூர் உள்ளிட்ட 5 இடங்களில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மதுரை நகரில் 19 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் 5-க்கும் மேற்பட்ட சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டவை.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையிலான கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். கர்ப்பிணிகளில் பெரும்பாலானோர் ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, கர்ப்பப்பை பாதிப்பு, ரத்தசோகை ஆகியவற்றுக்கு உள்ளாகியுள்ளனர். பெண் கர்ப்பிணியானதும், பத்து மாதத்தில் அவரது எடை 10 முதல் 12 வரை கூடுதலாக வேண்டும். அப்போதுதான் அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். ஆனால், பெரும்பாலான பெண்கள் தற்போது எடை கூடாமலே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியமான தாயால்தான் ஆரோக்கியமான குழந்தையை பெறமுடியும் என்பதால் தாயின் ஆரோக்கியமே குழந்தை இறப்பைத் தடுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உடல்நலம் பாதித்த கர்ப்பிணிகளுக்கு பெரும்பாலும் அறுவைச் சிகிச்சை மூலமே பிரசவம் நடக்கிறது. ஆண்டுதோறும் 5,000 பேரில் சுமார் 450 பேருக்கு அறுவைச் சிகிச்சை மூலமே குழந்தை பிறக்கிறது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்தவர்களில் 2010-ல் 364, 2011 -332, 2012 -355, 2013-218 என கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் உள்ளது. இதைத் தவிர்க்கும் வகையில் கடந்த செப்டம்பர் (2014) முதல் தீவிர சிகிச்சைக்குரிய கர்ப்பிணிகளுக்கான சிகிச்சைத் திட்டம் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்தில் 13 முகாம்கள் மூலம் 5 ஆயிரம் கர்ப்பிணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1109 பேர் தீவிர கண்காணிப்புக்குரியவர்களாக தேர்வாகியுள்ளனர். இதில் ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட 30 பேருக்கு 110 யூனிட் ரத்தமும் இலவசமாக அரசு மருத்துவமனையில் ஏற்றப்பட்டுள்ளது. மதுரை ஊரகப்பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நகர் பகுதியிலும் இத்திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.
உரிய நேரத்தில் வந்தால் உயிரைக் காப்பாற்றலாம்
கர்ப்பிணிகள் இறப்பு விகிதம் கூடுதல் குறித்து மாவட்ட சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் நடராஜன் கூறியது: கர்ப்பிணிகள் மீது உரிய கவனம் செலுத்தி சிகிச்சை அளித்தால் நிச்சயம் உயிரைக் காப்பாற்றலாம். மதுரை ஊரகப் பகுதியில் கடந்த 4 மாதங்களில் 210 கர்ப்பிணிகள் தீவிர சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டு அதில் 180 பேருக்கு மதுரை அரசு மருத்துவமனை உதவியுடன் 167 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டுள்ளது. அதில் பலர் சுகப்பிரசவத்துடன் வீடு திரும்பியுள்ளனர் என்றார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் பி.சாந்தகுமார் கூறுகையில் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் 24 மணி நேரக் கண்காணிப்பில் சிகிச்சை பெறும் வசதி உள்ளது. ஆகவே உரிய நேரத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தால் நிச்சயம் தாய், சேயைக் காப்பாற்றிவிடலாம் என்றார். கிராமப்புறங்களில் இருந்து வரும் கர்ப்பிணிகள் பெரும்பாலானோர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற முடியாத நிலையிலேயே மதுரை அரசு மருத்துவமனையை நாடுவதாகவும், இதுபோன்ற தாமதங்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தீவிர கண்காணிப்பில் உள்ள 1109 பேரில்  697 கர்ப்பிணிகளின் பாதிப்பு விவரம்:
பிரசவகால ரத்த கொதிப்பு 104.
தீவிர ரத்தசோகை 232
இருதய நோய் பாதிப்பு 11
முதல் பிரசவம் அறுவைச் சிகிச்சையில் முடிந்தது 405
சுகப்பிரசவத்துக்கு ஏற்ற இடுப்பெலும்புள்ள தாய்மார்கள் 5
பிரசவத்துக்கு முன் ரத்தப்போக்கு 7
பிரசவத்துக்கு முன்பே குழந்தை இறக்க வாய்ப்பு 109
21 வயதுக்கு முன்பே பிரசவம் 28
கர்ப்பப்பையில் குழந்தை தலைகீழ் 16
2 மற்றும் 3 குழந்தைகள் பிறப்பு 32
பிரசவத்துக்குப் பின் ரத்தப்போக்கு 2
தாய் மஞ்சள்காமாலையால் பாதிப்பு 1
கர்ப்பப்பையில் குழந்தை இறப்பு 4
தாய்க்கு வலிப்பு நோய் 2
பிரசவத்துக்கு பின் தாய்க்கு ரத்தக்குழாய் பாதிப்பு 1
உயர் ரத்த அழுத்தம் 3
உயரம் குறைவான தாய் 24
நஞ்சுக்கொடி பாதிப்பு 14
சர்க்கரை நோய் பாதிப்பு 14
ரத்தவகை மாறுபாடு (குழந்தை, தாய்) 50
எச்ஐவி பாதிப்புள்ள தாய் 21
தைராய்டு பாதிப்புள்ள தாய் 19
குறைவான எடையுடைய தாய் 7
நீர்ச்சத்துக்குறைவான தாய் 11
திருமணத்துக்குப் பின் நீண்ட 24
இடைவெளியில் பிரசவம்
2 மற்றும் 3 குழந்தைகளுக்கு மேல் பிரசவம் 36

0 comments: