Wednesday, December 24, 2014

On Wednesday, December 24, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கருமாபாளையம் மூலக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் கோணாக்காரர் என்ற சுப்பிரமணியம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது36), இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு வஞ்சிப்பாளையத்தில் உள்ள தனது தங்கை கார்த்திகா வீட்டிற்கு குடிபோதையில் சென்று அவரது கணவர் சசிகுமாரிடம் சொத்து சம்பந்தமாக தகராறு செய்துள்ளார். இது குறித்து கார்த்திகா தனது மற்றொரு அண்ணன் சிவக்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தோட்டத்து சாலையில் உள்ள கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார்.காலையில் வெகுநேரமாகியும், கிருஷ்ணமூர்த்தியை காணாததால் அவரது தந்தை தோட்டத்து சாலைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு கூர்மையான ஆயுதங்கள் மற்றும் மரக்கட்டையால் மர்ம மனிதர்களால் தாக்கப்பட்டு கிருஷ்ணமூர்த்தி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சேவூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமசாமி, இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் சேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணை நடத்தினார்கள்.கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மூலம் சோதனை செய்யப்பட்டது. மோப்ப நாய் யாரையும் பிடிக்கவில்லை. கிருஷ்ணமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவரை தம்பி மற்றும் தங்கை கணவர் அடித்துக்கொலைசெய்தார்களா? அல்லது மர்மமனிதர்கள் யாராவது அடித்துக்கொலை செய்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்திக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: