Tuesday, August 25, 2015

On Tuesday, August 25, 2015 by Unknown in ,    
 

தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் நடத்தும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி மூலம் 357 நாட்களில் ரூ.5.00 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்து சாதனை மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:
        மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் அறிவித்த அனைத்து திட்டங்களும் ஏழை, எளியோர்களுக்கு பயன்படும் ஒப்பற்ற திட்டமாகும். அம்மா பெயரில் செயல்படும் அம்மா திட்டம், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என அனைத்துமே பொது மக்களுக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கிறது. அது போன்று அம்மா அறிவித்த பண்ணை பசுமை காய்கறி கடையும் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஒரு வரபிரசாதமாகும். அதன்;படி முதன் முதலாக சென்னையில் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி துவங்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள 23.08.2014 அன்று பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி துவங்கப்பட்டது. 
விவசாயிகளால் பயிரிடப்படும் காய்கறிகளை நேரடியாக நல்ல விலைக்கு கொள்முதல் செய்து நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்வது இப்பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடையின் முக்கிய நோக்கமாகும்.
      மாநிலத்தில் பல இடங்களில் பண்ணை பசுமை காய்கறி கடை நடைபெற்றாலும் தூத்துக்குடி தான் விற்பனையில் மாநிலத்தில் முதல் இடத்தில் உள்ளது. இந்த பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி இதுவரை 18,20,547 கிலோவிற்கு ரூ.5 கோடியே 8 லட்சத்து 95 ஆயிரத்து 767 மதிப்பீட்டில் விற்பனை செய்துள்ளனர். இதில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5015 கிலோவிற்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 209 மதிப்பீட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அதிக நம்பிக்கை வைத்து காய்கறிகளை வாங்க வரும் நுகர்வோர் ஆகியோர்களால்தான் இந்த வெற்றி சாத்தியமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே சிறந்த பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிக்கான பரிசினை தூத்துக்குடி மாவட்ட பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடி பெற்று நமது மாவட்டத்திற்கு மேலும்  பெருமை சேர்த்து உள்ளது. 
       இடைத்தரகர்கள் நுழைய முடியாத வகையில் அனாவசியமான செலவுகள் குறைக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேரடி பார்வையில் செயல்பட்டு குறைந்த விலையில் தரமான பொருட்கள் பொது மக்களுக்கு கிடைக்கின்றது. இந்த மாவட்டத்திலேயே உற்பத்தி செய்யப்படும் 13 வகை காய்கறிகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதால் அவர்களுக்கும் நல்ல விலை கிடைக்கின்றது. பிற மாவட்டங்கள் பொறாமைபடும் அளவில் அம்மாவின் திட்டங்களை நிறைவேற்றும் வகையில் முதல் மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது என்றார்.
          இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.ரவி குமார்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தாவது:
          இந்த அங்காடி சிறப்பாக செயல்படுவதற்கு மக்கள் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் இணைந்து செயல்பட்டதை முக்கிய காரணமாகும். முதலில் சுமார் 600 சதுரஅடி பரப்பளவில் செயல்பட்ட இக்கடை தற்போது சுமார் 1600 சதுரடி பரப்பளவில் 2 அறைகளாக குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறிகளை இருப்பு வைத்து தரம் பிரிக்கப்பட்டு 2 அறைகளில் சேமிக்கப்படுகிறது. இக்கடையில் நுகர்வோருக்கு துல்லியமான எடை மற்றும் சரியான விலையில் காய்கறிகளை வழங்க ஏதுவாக கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இக்கடை தொடங்கி 75 நாளில் ரூ.1 கோடியையும் 145 நாட்களில் ரூ.2 கோடியையும் 220 நாளில் ரூ. 3 கோடியையும் விற்பனை செய்துள்ளது. இந்த ஒராண்டு நிறைவில் 357 நாட்களில் ரூ.5 கோடிக்கு விற்று தமிழ்நாட்டிலேயே சிறப்பான பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியாக விளங்குகின்றது. இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள் என்றார்.
       முன்னதாக தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் ஆவின் பால் சில்லறை விற்பனை நிலையத்தை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் திறந்து வைத்தார்.
        இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர் திருமதி.அ.பா.ரா. அந்தோணி கிரேஸ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ச.முருகையா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.பி.டி.ஆர்.ராஜகோபால், துணைப்பதிவாளர் திருமதி.சிவகாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.கு.தமிழ்செல்வராஜன், மேலாண்மை இயக்குநர், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் திரு.ஜெயசங்கர் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.தே.ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
        முன்னதாக தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் திரு.மாணிக்கராஜா அனைவரையும் வரவேற்றார். மாவட்ட கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.சுதாகர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

0 comments: