Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருவாரூரில் கியாஸ் சிலிண்டர் கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்

திருவாரூர் மேட்டு தெருவில் உள்ள ஒரு தனியார் கியாஸ் ஏஜென்சி நிறுவனம், திருவாரூர் நகர பகுதிகளில் உள்ள வீடு, கடைகளுக்கு கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகிறது. இதில் வீடுகளில் உபயோகிக்கும் கியாஸ் சிலிண்டர்களை இணைய தளம் மூலம் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் கியாஸ் சிலிண்டர்கள் கேட்டு பதிவு செய்தவர்களுக்கு கடந்த சில மாதங்களாக உரிய நேரத்தில் சிலிண்டர்கள் வழங்கப்படவில்லை என கூறி பொதுமக்கள் நேற்று கியாஸ் ஏஜென்சி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கியாஸ் ஏஜென்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது வருகிற 30-ந் தேதிக்குள் பதிவு செய்தவர்களுக்கு கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என போலீசாரிடம் தனியார் கியாஸ் ஏஜென்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனர். பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட நகர சபை உறுப்பினர் வரதராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

30-ந் தேதிக்குள்....

இணையதளத்தில் கியாஸ் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த முறை சரிவர கடைப்பிடிக்கப்படுவது இல்லை. மேலும் சிலிண்டர் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது. பதிவு செய்து மாத கணக்கில் காத்திருக்கும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர். தற்போது நடந்த பேச்சு வார்த்தையில் ஆகஸ்டு மாதம் வரை பதிவு செய்தவர்களுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் சிலிண்டர் வழங்கப்படும் என நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. அதற்குள் சிலிண்டர்களை வினியோகம் செய்யாவிட்டால் மீண்டும் கியாஸ் ஏஜென்சியை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
கள்ளிக்குடியில் மாணவ-மாணவிகளுக்கு கலவை சாதத்தை கலெக்டர் மதிவாணன் வழங்கினார்.

கலவை சாதம்

திருவாரூர் அருகே உள்ள கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு புதிய வகை கலவை சாதங்கள், மசாலா முட்டை வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் மதிவாணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 வயது முதல் 5 வயது வரையிலான முன்பருவக்கல்வி பயிலும் குழந்தைகள், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள், 9, 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கலவை சாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் காப்புறுதி திட்டம், மாற்று வழி புதுமை கல்வி போதனை மையங்கள் ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி திங்கட்கிழமை காய்கறி பிரியாணி, மிளகு தூள் முட்டை வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை கொண்டை கடலை புலாவு, தக்காளி மசாலா முட்டையும், புதன்கிழமை தக்காளி சாதம்- மிளகு தூள் முட்டையும், வியாழக்கிழமை சாம்பார் சாதம்- சாதா முட்டையும், வெள்ளிக்கிழமை கருவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், உருளைக்கிழங்கு தக்காளி சேர்த்து வேகவைத்த முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இவை உள்பட 13 வகையான உணவு வகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

நோக்கம்

பள்ளிச்செல்லும் குழந்தைகள் இடையில் படிப்பை நிறுத்தாமல் இருப்பது, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு சத்தாண உணவை வழங்குதல், மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்தை அளித்தல், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், தினசரி வருகையை அதிகரித்தல் ஆகியை இந்த திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் உதவி கலெக்டர் பரமசிவம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மீனாட்சிசுந்தரம், உதவி கணக்ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டஅலுவலர் ரவிச்சந்திரன், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் மலர்மணிகண்டன், தாசில்தார் நாகராஜன், சத்துணவு திட்ட உதவி கணக்கு அதிகாரி வெங்கட்டராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருச்சியில் பிரதேச ராணுவ படை வீரர்களை தேர்வு செய்வதற்கான முகாம் நேற்று தொடங்கியது. இளைஞர்கள் ஏராளமானவர்கள் குவிந்ததனர்.
ஆள் சேர்ப்பு முகாம்
திருச்சியில் உள்ள 117 பிரதேச ராணுவ படையில் சிப்பாய் (பொது பிரிவு) 26 பணியிடங்கள் மற்றும் ஒரு சலவையாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான ஆள் தேர்வு முகாம் காஜாமலை கிம்பர் கார்டனில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை ஐந்தாவது பட்டாலியன் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
முகாமில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், குஜராத், மகராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, கோவா, டையூ டாமன், லட்சதீவு, தாத்ரா அண்ட் நகர் ஹவேலி உள்பட யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 18 வயது முதல் 42 வரை உள்ளவர்கள் நேற்று காலை குவிந்தனர். காலை 5 மணி முதலே முகாம் தொடங்கியது. இந்த வீரர்கள் தேர்வு முகாமில் சுமார் 8 ஆயிரம் பேர் குவிந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓட்டபந்தயம்
முதலில் தேர்வுக்கு வந்தவர்களின் உயரம் அளக்கப்பட்டு, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டும் போட்டிகள் மற்றும் உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் ஓட்டப்பந்தயத்தின் போது வெயிலின் தாக்கத்தால் கால் பாதத்தில் வெடிப்பு ஏற்பட்டு ஓட முடியாமல் பலர் பாதியிலே நின்றனர். சிலர் கீழே விழுந்தனர். இதனால் முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதேபோல உடற்தகுதி தேர்வில் சிலர் தோல்வி அடைந்தனர்.
ஓட்டபந்தயத்தின் போது தவறி கீழே விழுந்தவர்கள் மற்றும் கால்களில் வெயிலினால் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக அரசு மருத்துவ குழுவினர் தயாராக இருந்து பணியில் ஈடுபட்டனர். தேர்வுக்கு பள்ளி கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் உள்பட இதர சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவ பரிசோதனை
நேற்று நடந்த உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் போட்டிகளில் உரிய மதிப்பெண் பெற்றவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. அதன்பின்னர் நேர்முக தேர்வு நடைபெற்ற பின் பிரதேச ராணுவத்தில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். வருகிற 20–ந் தேதி வரை வீரர்கள் தேர்வு முகாம் நடைபெறுகிறது.
பயிற்சியின்போது மாத சம்பளம் ரூ.5 ஆயிரத்து 700–ம், பயிற்சி முடித்த பின்னர் மாதம் ரூ.5.200 மற்றும் கிரேடு சம்பளம் ரூ.2 ஆயிரம், ராணுவ சம்பளம் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றுடன் அகவிலைப்படி ஆகிய அனைத்தும் வழங்கப்படும். மேலும் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். பிரதேச ராணுவ படை பணி என்பது முழு நேர ராணுவ பணி ஆகாது. வருடத்தில் 2 மாதங்கள் மட்டுமே அவர்களுக்கு பணி காலம் ஆக இருக்கும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
வீரர்கள் தேர்வு முகாமையொட்டி மைதானத்தில் குடிநீர் வசதி, உணவு வசதி உள்பட அடிப்படை வசதிகளை பிரதேச ராணுவ படையினர் செய்திருந்தனர். மேலும் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியை செய்து இருந்தனர். ராணுவ படைக்கு வீரர்கள் தேர்வுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் நேற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
உள்ளாட்சி இடைத்தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கை சின்னத்தில் வித்தியாசம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரெக்ஸ், மாநகராட்சி தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தார்.

அதிகாரியிடம் வேட்பாளர் புகார்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. திருச்சி மாநகராட்சியில் 15, 32-வது வார்டுகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் நேற்று முன்தினம் பொருத்தப்பட்டன. இந்நிலையில் 32-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெக்ஸ் நேற்று திருச்சி மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான தண்டபாணியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், ‘‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் வாக்காளர்களுக்கு தெரியாத அளவில் சிறியதாகவும், சுயேச்சைகள் சின்னம் போல வித்தியாசமாகவும் உள்ளது. முறையான கை சின்னத்தை கண்களுக்கு தெரியும் வகையில் மாற்றி பொருத்த வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

கை சின்னத்தில்...

மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி தண்டபாணி கூறுகையில், ‘‘வேட்பாளர்களின் சின்னம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதில் எதுவும் மாற்றங்கள் செய்யப்படவில்லை. மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து சின்னம் பதிவிறக்கம் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. சின்னத்தில் வித்தியாசம் இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் தான் புகார் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு வேட்பாளர் ரெக்ஸ், சின்னத்தை அச்சிடும் போது வேண்டுமென்றே சிறியதாக அச்சிடப்பட்டுள்ளது. இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட சின்னமே பொருத்தப்பட்டுள்ளது. இதனை மாற்ற முடியாது என்று தேர்தல் அதிகாரி தண்டபாணி தெரிவித்தார். 
On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் ‘லிப்ட்’ நடுவழியில் நின்றது. ஊழியர்கள் 2 பேர் சிக்கி தவித்தனர்.

மாநகராட்சி அலுவலகம்

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தின் கட்டிட அமைப்பு தரை தளம், முதல் தளம், 2-வது தளம் மற்றும் அதற்கு மேல் மாடி என உள்ளது. இதில் தரைதளத்தில் இருந்து முதல் தளம், 2-வது தளத்திற்கு செல்வதற்கு ‘லிப்ட்’ வசதி உள்ளது. முதல் தளத்தில் மேயரின் அறையும், மாநகராட்சி கூட்டரங்கம் உள்பட துறை அதிகாரிகளின் அலுவலகம், 2-வது தளத்தில் ஆணையரின் அறை உள்பட அதிகாரிகளின் அறை அலுவலகம் உள்ளது.

தரைதளத்திலும் முக்கிய அதிகாரிகளின் அறைகள் உள்ளன. தரைதளத்தில் இருந்து முதல் தளம் மற்றும் 2-வது தளத்திற்கு செல்ல மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ‘லிப்ட்’ வசதியை பயன்படுத்துவது உண்டு. சிலர் படிக்கட்டுகள் வழியாகவும் செல்வார்கள்.

‘லிப்ட்’ நடுவழியில் நின்றது

இந்த நிலையில் நேற்று காலை சுமார் 10 மணிக்கு மேல் ‘லிப்ட்’ தரைதளத்தில் இருந்து 2-வது தளத்திற்கு சென்ற போது திடீரென நடு வழியில் நின்றது. அதன் உள்ளே லிப்ட்டை இயக்கும் ஊழியர் குமாரும், மாநகராட்சி பெண் ஊழியர் ஒருவரும் என 2 பேர் இருந்தனர். அவர்கள் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு ‘லிப்ட்’ நின்றது குறித்து தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சக ஊழியர்கள் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரித்தனர். இதில் மின் தடை ஏற்பட்டதால் ‘லிப்ட்’ நடுவழியில் நின்றது தெரிந்தது. இதைத்தொடர்ந்து ஜெனரேட்டரை உடனடியாக இயக்கினர். அதன்பின் மின்சாரம் வந்ததும் ‘லிப்ட்’ இயங்கியது. சுமார் 15 நிமிடங்கள் லிப்டில் 2 பேரும் தவித்தப்படி இருந்தனர். லிப்ட் இயங்கி 2-வது தளத்திற்கு வந்ததும், அதில் இருந்து வெளியே வந்ததும் 2 பேர் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவம் மாநகராட்சியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 
On Thursday, September 18, 2014 by farook press in ,    

திருச்சி,

திருச்சி அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்ற வாலிபர் திடீர் என வெறி பிடித்தவர் போல் ஓடி ஒரு நோயாளியை கடித்தார். இதனால் மற்ற நோயாளிகள் அலறி அடித்து ஓடினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்கத்தா வாலிபர்

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சலீம் (வயது35). இவர் கரூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து கொசு வலை வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் அவரை ஒரு வெறி நாய் கடித்தது. இதனால் பாதிக்கப்பட்ட சலீம் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் நேற்று மதியம் ஒரு மணி அளவில் சலீமை அவரது மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

ஜன்னலை உடைத்தார் 

 மாலை 4 மணி அளவில் திடீர் என அவர் அறையை விட்டு வெளியே வந்தார். மனைவி மற்றும் மைத்துனருடன் பேசினார். அவரது பேச்சு மற்றும் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததால் அறையில் தள்ளி பூட்டு போட்டு பூட்டினார்கள். இந்நிலையில் மாலை 6 மணி அளவில் சலீம் திடீர் என அந்த அறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே குதித்தார். அவர் உடலில் துணி எதுவும் இன்றி நிர்வாணமாக ஓடினார். நாய் குரைப்பது போல் சத்தம் போட்டுக்கொண்டே ஆவேசமாக ஓடி வந்தார். அப்போது எதிரே ஒரு அறையில் இருந்த நோயாளிகள் கிரில் கேட் கதவை இழுத்து சாத்தினார்கள். அந்த கதவை அசைத்து பார்த்து விட்டு திறக்க முடியாத சலீம் பின்னர் இன்னொரு அறையை பார்த்து ஓடினார்.

நோயாளியை கடித்தார் 
சலீம் வேகமாக ஓடி வருவதை பார்த்த நர்சுகள், மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஓடிப்போய் தங்களது அறையில் கதவை சாத்திக்கொண்டார்கள். அப்போது படுக்கையில் இருந்த ஒரு நோயாளியின் இடது தொடையில் சலீம் கடித்தார். கடிபட்டவரின் பெயர் அர்ஜுனன் (வயது30) புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பக்கம் உள்ள விழாப்பட்டியை சேர்ந்த இவர் ஏற்கனவே விபத்தில் காயம் அடைந்ததால் காலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். சலீம் கடித்ததை பார்த்ததும் அந்த அறையில் இருந்த மற்ற நோயாளிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினார்கள்.

ஒரு மணி நேரம் அட்டகாசம் 

சலீம் வெறி பிடித்தவர் போல் ஓடி எல்லோரையும் கடிக்க முயன்றதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் அவரது அட்டகாசம் நீடித்தது. ஒரு வழியாக மருத்துவமனை பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் சேர்ந்து சலீமை பிடித்து கைகளை கட்டி ஒரு தனியறையில் அடைத்தனர். அந்த அறையை சுற்றி இருந்த படுக்கைகளில் இருந்த நோயாளிகள் அனைவரும் மாடி பகுதிக்கு உடனடியாக மாற்றப்பட்டனர். ஆனாலும் சில நோயாளிகள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி மறியல் செய்வதற்காக மருத்துவமனையின் வெளி பகுதிக்கு வந்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனை போலீசார் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூரை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 36). இவர் கடம்பத்தூர் பஜார் பகுதியில் தள்ளுவண்டியில் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் முத்துராஜின் கடைக்கு வந்த கடம்பத்தூரை சேர்ந்த தன்ராஜ் (37) என்பவர் தனக்கு பானிபூரியை ஓசியில் தருமாறு கேட்டார். அதற்கு முத்துராஜ் மறுத்து விட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர் முத்துராஜை தாக்கி கடையில் உள்ள பொருட்களை கீழே கொட்டி நாசம் செய்ததாக தெரிகிறது. இது குறித்து முத்துராஜ் கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஊத்துக்கோட்டை அருகே கோவிலில் இருந்த கோபுர கலசங்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
கோபுர கலசங்கள் திருட்டு
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரிட்டிவாக்கம் கிராம எல்லையில் ஆரணி ஆற்றங்கரையில் குமாரலிங்கேஸ்வரர் உடனுறை ராஜேஸ்வரி கோவில் உள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவிலில் ரமேஷ் என்பவர் பூசாரியாக உள்ளார். ஒரு கால பூஜை நடைபெறும் இந்த கோவிலை தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசித்து வந்தனர். கோவில் கோபுரங்களில் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட 2 பஞ்சலோக கலசங்கள் இருந்தன. இந்த நிலையில் பூசாரி சுரேஷ் நேற்று காலை கோவிலை திறக்க சென்றார்.
அப்போது கோபுரங்கள் மீது இருந்த 5 அடி உயரம் மற்றும் 3 அடி உயரம் கொண்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள 2 பஞ்சலோக கலசங்களை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர்.
போலீசில் புகார்
இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி சுரேஷ் இது குறித்து ஊர் பெரிவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து பென்னாலூர்பேட்டை போலீல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இதே கோவிலில் மர்ம நபர்கள் புகுந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள டேப் ரிக்கார்டர் திருடிச் சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
கண்டலேறு அணையில் நீர் மட்டம் குறைந்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது.
நதி நீர் பங்கீட்டு திட்டம்கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கடந்த மாதம் 3– ந் தேதி முதல் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 100 கனஅடியாக வந்தது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டது. சராசரியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. நேற்று மாலை தண்ணீர் மட்டம் 23.62 அடியாக பதிவானது.
ஏரிக்கு வினாடிக்கு 237 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதில் கிருஷ்ணா நதி நீர் 112 கனஅடியாகவும், மழை நீர் 125 அடியாக ஆக மொத்தம் 237 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் 658 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
தண்ணீர் நிறுத்தம்கடந்த மாதம் 3–ந் தேதி தண்ணீர் மட்டம் 17.22 அடியாகவும், 76 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் தான் இருப்பு இருந்தது என்பது குறிப்பிடதக்கது. கடந்த மாதம் 3–ந் தேதியில் இருந்து நேற்று மாலை வரை 1.572 டி.எம்.சி. தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 461 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுவது நேற்று முன்தினம் மாலை முதல் நிறுத்தப்பட்டது.
இதனால் சென்னையில் குடிநீர் வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.