Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகு மூழ்கியதால் தத்தளித்த 5 மீனவர்களும் மீட்கப்பட்டனர்.
படகு மூழ்கியதுதூத்துக்குடி அருகே உள்ள வேம்பாரை சேர்ந்தவர் சேவியர். இவருக்கு சொந்தமான சிறிய விசைப்படகில், ஜெபமாலை, அய்யம்பெருமாள், ஆதித்தன், அந்தோணி உள்பட 5 பேர் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று அதிகாலையில் வேம்பாரில் இருந்து சுமார் 13 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
இதனால் அலையின் வேகம் அதிகமாக இருந்தது. அப்போது படகின் அடிப்பகுதியில் இருந்த 3 பலகைகள் சேதம் அடைந்தன. கடல்நீர் வேகமாக படகினுள் உட்புகுந்ததால், படகு மளமளவென மூழ்கியது. இதனால் படகில் இருந்த 5 மீனவர்களும் தத்தளித்தனர்.
மீட்புஅப்போது அருகில் வந்து கொண்டு இருந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த 5 மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து இன்று மூழ்கிய படகை மீட்பதற்கான நடவடிக்கையை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
பெரியார் 136-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு 7 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பிறந்த நாள் விழா

தூத்துக்குடியில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அரசியல் கட்சியினர் பெரியாரின் உருவப்படம் மற்றும் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடினர்.

தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் பெரியார் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சசிகலாபுஷ்பா எம்.பி, தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், வேட்பாளர் அந்தோணி கிரேஸ் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் துணை மேயர் சேவியர், வடக்கு மண்டல தலைவர் கோகிலா, முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட்செல்வின், பி.டி.ஆர்.ராஜகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் உருவச்சிலைக்கு மாவட்ட தலைவர் இர.கனகராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் நெல்லை மண்டல திராவிடர் கழக செயலாளர் மா.பால்ராசேந்திரம், மாவட்ட துணைத்தலைவர் பொ.செல்வராசு, துணை செயலாளர் இரா.ஆழ்வார், பொதுக்குழு உறுப்பினர்கள் தி.ப.பெரியாரடியான், எஸ்.சக்திவேல், மாநகர திராவிடர் கழக தலைவர் மு.முனியசாமி, செயலாளர் சி.மணிமொழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

7 அமைச்சர்கள்

கோவில்பட்டி பயணிகள் விடுதியில் அ.தி.மு.க. சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளரும், சுற்றுலா துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., நகர செயலாளர் சங்கர பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ராமானுஜம் கணேசன், நகரசபை துணை தலைவர் ராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரியாரது உருவ படத்துக்கு மின்சார துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், வீட்டு வசதி துறை அமைச்சர் வைத்தியலிங்கம், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, வேளாண்மை துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

மாநில மகளிர் அணி செயலளர் எல்.சசிகலா புஷ்பா எம்.பி., தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி சக்கையன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.

கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர செயலாளர் ராமர், முன்னாள் நகர செயலாளர் கருணாநிதி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பச்சம்மாள், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், மாவட்ட பிரதிநிதி முத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் கலைமணிதாஸ், கனகராஜ், கிளை செயலாளர்கள் முனியசாமி, அந்தோணி, கஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாண்டவர்மங்கலத்தில் உள்ள தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு ஆதி தமிழர் பேரவையினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் திலீபன், ஒன்றிய துணை செயலாளர் உதயசூரியன், நிதி செயலாளர் பிரபாகர அதியமான், கொள்கை பரப்பு செயலாளர் தலித் பாலா, கயத்தாறு ஒன்றிய செயலாளர் முத்துசாமி, கிருஷ்ணன், மாரியப்பன், சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பெரியார் பிறந்தநாள் விழா

தந்தை பெரியார் ஈ.வெ.ரா 136-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் தலைமையில், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

எம்.பி.க்கள் விஜிலா சத்யானந்த், பிரபாகரன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் சுதா கே.பரமசிவன், துணை மேயர் ஜெகநாதன், பொருளாளர் கணேசராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், பாளையங்கோட்டை தொகுதி செயலாளர் சரவணன், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் அரிகரசிவசங்கர், வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மகபூப்ஜான், பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் மருதூர் ராமசுப்பிரமணியன், நகர கூட்டுறவு சங்க தலைவர் டால் சரவணன், மேயராக தேர்வு செய்யப்பட்டு உள்ள புவனேசுவரி, மகளிர் அணி வெண்ணிலா ஜீவபாரதி, கவுன்சிலர்கள் முத்துலட்சுமி, பேபி சுந்தர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.

தி.மு.க.-ம.தி.மு.க.

தி.மு.க. சார்பில் நெல்லை மாநகர அமைப்பாளர் அப்துல் வகாப் தலைமையில் பெரியார் சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிர்வாகிகள் நமசிவாயம் என்ற கோபி, பூக்கடை அண்ணாத்துரை, பொதுக்குழு வின்சர், நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அருள்வின் ரொட்ரிகோ தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. ஜெயின் உசேன், மணப்படை மணி, சுதர்சன், விஜயகுமார், கா.சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம் சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் இரா.காசி தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநகர தலைவர் ரத்தினசாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.ம.க-விடுதலை சிறுத்தைகள்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில துணை பொதுச் செயலாளர் வியனரசு தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரவிதேவேந்திரன், சக்தி, தமிழர் தேசிய முன்னணி தமிழ்ஈழன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் அமுதா மதியழகன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக், மாநகர் மாவட்ட பொருளாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. கிங் தேவேந்திரன், பொட்டல் கண்ணன், பெருமாள் பாண்டியன், முத்துப்பாண்டியன், பழனி மாரியப்பன், முத்து, முருகையா பாண்டியன், தினேஷ், முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

அருந்தமிழர் முன்னேற்ற கழகம் உள்பட பல்வேறு அமைப்பினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ள வீரசிகாமணியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 32). அவருடைய மனைவி சுதா ராஜேசுவரி (27). இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சுதா ராஜேசுவரி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவருக்கு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுதா ராஜேசுவரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சுதா ராஜேசுவரி, குடும்ப பிரச்சினை காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
எனக்கு வெளிநாடு செல்ல அனுமதி மறுத்தது, மனித உரிமை மீறல் ஆகும். அதுபற்றி கோர்ட்டில் வழக்கு தொடருவேன்“ என்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.

உதயகுமாருக்கு அனுமதி மறுப்பு

நேபாள தலைநகர் காட்மாண்டுவில், மனித உரிமை மீறல் குறித்த மாநாடு நடந்து வருகிறது. அந்த மாநாட்டில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், அந்த மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் புறப்பட்டார். டெல்லியில் இருந்து காட்மாண்டு செல்ல இருந்தார். ஆனால், அவர் வெளிநாடு செல்ல டெல்லி விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர்.

“உரிய உத்தரவு இன்றி இனி வெளிநாடு செல்ல முயற்சிக்க வேண்டாம்“ என்று அதிகாரிகள் அவரிடம் அறிவுறுத்தியதாக தெரியவருகிறது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கூடங்குளம் போராட்டக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி உதயகுமாரிடம் ‘தினத்தந்தி‘ நிருபர் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

பாஸ்போர்ட் முடக்கம்

“ஒவ்வொரு நாட்டுக்கும் ஐ.நா.சபை பிரதிநிதிகள் சுதந்திரமாக சென்று, அந்த நாடுகளில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துகிறார்கள். ஆனால், இந்தியாவுக்குள் ஐ.நா. சபை பிரதிநிதிகள் வருவதற்கு விசா வழங்கப்படுவது இல்லை. இதனால்தான் இந்தியாவில் நடைபெற இருந்த மனித உரிமைகள் குறித்த மாநாடு, நேபாள தலைநகர் காட்மாண்டுவுக்கு மாற்றப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிபைன் உள்ளிட்டோர் எனக்கு அழைப்பு விடுத்தனர். கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள், கூடங்குளம் பகுதியில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து பேசலாம் என்று அங்கு புறப்பட்டேன்.

டெல்லி விமான நிலையத்துக்கு மதியம் 1.30 மணி அளவில் சென்றடைந்தேன். பிற்பகல் 3 மணிக்கு காட்மாண்டுவுக்கு விமானம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏற்கனவே எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், நேபாளம் செல்ல வேண்டும் என்றால், இந்திய அரசின் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் போதுமானது. எனவே வாக்காளர் அட்டையை காண்பித்தேன்.

விமானம் சென்றுவிட்டது

நான் கூடங்குளம் போராட்டக்குழுவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்ததால், என்னை தனி அறைக்கு அழைத்துச் சென்றார்கள். துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். என் மீது கூடங்குளம் போலீசில் 350 வழக்குகள் இருப்பதால், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் உத்திரவாதம் கொடுத்தால் மட்டுமே காட்மாண்டு செல்ல அனுமதிப்போம் என்று கூறினார்கள்.

நெல்லை சூப்பிரண்டிடம் போனில் பேசினார்கள். ஆனால், அனுமதி கொடுப்பது பற்றி, மேல் அதிகாரிகளிடம் கேட்டுத்தான் முடிவு செய்ய முடியும் என்று அவர் கூறி இருக்கிறார். இடையில் என்ªன்னவோ நடந்தது. நான் செல்ல வேண்டிய விமானமும் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

5½ மணி நேரம் விசாரணை

அதன்பின்பும் என்னை விடவில்லை. மாவோயிஸ்டுகள் பற்றி என்னிடம் கேட்டார்கள். தீவிரவாதத்தில் நம்பிக்கை இருக்கிறதா? என்றெல்லாம் விசாரித்தார்கள். நான் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்கள் துருவித்துருவி விசாரித்தார்களே தவிர, நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். பகல் 1.30 மணி அளவில் தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது. இனிமேல் வெளிநாடு செல்ல முயற்சிக்க கூடாது, என்று அறிவுறுத்தி விமான நிலையத்தில் இருந்து அனுப்பி வைத்தார்கள்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கை தனி மனிதனின் உரிமைக்கு எதிரானது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு யார்-யாரெல்லாமோ? வருகிறார்கள். ஆனால், ஐ.நா.சபை பிரதிநிதிகள் வரக்கூடாதா? இதுதான் இந்தியாவின் ஜனநாயகமா?

வழக்கு தொடருவேன்

எனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல் குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். எனது பாஸ்போர்ட்டை திரும்ப தர வேண்டும். என் மீது போடப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழக அரசு கைவிட வேண்டும்.

இல்லை என்றால் என் மீதான வழக்கை நடத்தி, குற்றம் இருந்தால் தண்டனை கொடுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் எனது பாஸ்போர்டை திரும்பத் தாருங்கள் என்று கோரியும், சுப்ரீம் கோர்ட்டு அல்லது ஐகோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறேன்“

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருவாரூரில் கியாஸ் சிலிண்டர் கிடைக்காததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்

திருவாரூர் மேட்டு தெருவில் உள்ள ஒரு தனியார் கியாஸ் ஏஜென்சி நிறுவனம், திருவாரூர் நகர பகுதிகளில் உள்ள வீடு, கடைகளுக்கு கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகிறது. இதில் வீடுகளில் உபயோகிக்கும் கியாஸ் சிலிண்டர்களை இணைய தளம் மூலம் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. இந்த முறையில் கியாஸ் சிலிண்டர்கள் கேட்டு பதிவு செய்தவர்களுக்கு கடந்த சில மாதங்களாக உரிய நேரத்தில் சிலிண்டர்கள் வழங்கப்படவில்லை என கூறி பொதுமக்கள் நேற்று கியாஸ் ஏஜென்சி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கியாஸ் ஏஜென்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது வருகிற 30-ந் தேதிக்குள் பதிவு செய்தவர்களுக்கு கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என போலீசாரிடம் தனியார் கியாஸ் ஏஜென்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்தனர். பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட நகர சபை உறுப்பினர் வரதராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

30-ந் தேதிக்குள்....

இணையதளத்தில் கியாஸ் பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த முறை சரிவர கடைப்பிடிக்கப்படுவது இல்லை. மேலும் சிலிண்டர் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் இருந்து வருகிறது. பதிவு செய்து மாத கணக்கில் காத்திருக்கும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர். தற்போது நடந்த பேச்சு வார்த்தையில் ஆகஸ்டு மாதம் வரை பதிவு செய்தவர்களுக்கு வருகிற 30-ந் தேதிக்குள் சிலிண்டர் வழங்கப்படும் என நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. அதற்குள் சிலிண்டர்களை வினியோகம் செய்யாவிட்டால் மீண்டும் கியாஸ் ஏஜென்சியை முற்றுகையிட்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
கள்ளிக்குடியில் மாணவ-மாணவிகளுக்கு கலவை சாதத்தை கலெக்டர் மதிவாணன் வழங்கினார்.

கலவை சாதம்

திருவாரூர் அருகே உள்ள கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு புதிய வகை கலவை சாதங்கள், மசாலா முட்டை வழங்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் மதிவாணன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2 வயது முதல் 5 வயது வரையிலான முன்பருவக்கல்வி பயிலும் குழந்தைகள், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள், 9, 10-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கலவை சாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் காப்புறுதி திட்டம், மாற்று வழி புதுமை கல்வி போதனை மையங்கள் ஆகியவற்றில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி திங்கட்கிழமை காய்கறி பிரியாணி, மிளகு தூள் முட்டை வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை கொண்டை கடலை புலாவு, தக்காளி மசாலா முட்டையும், புதன்கிழமை தக்காளி சாதம்- மிளகு தூள் முட்டையும், வியாழக்கிழமை சாம்பார் சாதம்- சாதா முட்டையும், வெள்ளிக்கிழமை கருவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், உருளைக்கிழங்கு தக்காளி சேர்த்து வேகவைத்த முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இவை உள்பட 13 வகையான உணவு வகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

நோக்கம்

பள்ளிச்செல்லும் குழந்தைகள் இடையில் படிப்பை நிறுத்தாமல் இருப்பது, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு சத்தாண உணவை வழங்குதல், மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்தை அளித்தல், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தல், தினசரி வருகையை அதிகரித்தல் ஆகியை இந்த திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருவாரூர் உதவி கலெக்டர் பரமசிவம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மீனாட்சிசுந்தரம், உதவி கணக்ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டஅலுவலர் ரவிச்சந்திரன், திருவாரூர் ஒன்றியக்குழு தலைவர் மலர்மணிகண்டன், தாசில்தார் நாகராஜன், சத்துணவு திட்ட உதவி கணக்கு அதிகாரி வெங்கட்டராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருச்சியில் பிரதேச ராணுவ படை வீரர்களை தேர்வு செய்வதற்கான முகாம் நேற்று தொடங்கியது. இளைஞர்கள் ஏராளமானவர்கள் குவிந்ததனர்.
ஆள் சேர்ப்பு முகாம்
திருச்சியில் உள்ள 117 பிரதேச ராணுவ படையில் சிப்பாய் (பொது பிரிவு) 26 பணியிடங்கள் மற்றும் ஒரு சலவையாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான ஆள் தேர்வு முகாம் காஜாமலை கிம்பர் கார்டனில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை ஐந்தாவது பட்டாலியன் அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
முகாமில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், குஜராத், மகராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி, கோவா, டையூ டாமன், லட்சதீவு, தாத்ரா அண்ட் நகர் ஹவேலி உள்பட யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 18 வயது முதல் 42 வரை உள்ளவர்கள் நேற்று காலை குவிந்தனர். காலை 5 மணி முதலே முகாம் தொடங்கியது. இந்த வீரர்கள் தேர்வு முகாமில் சுமார் 8 ஆயிரம் பேர் குவிந்ததாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓட்டபந்தயம்
முதலில் தேர்வுக்கு வந்தவர்களின் உயரம் அளக்கப்பட்டு, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல், நீளம் தாண்டும் போட்டிகள் மற்றும் உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் ஓட்டப்பந்தயத்தின் போது வெயிலின் தாக்கத்தால் கால் பாதத்தில் வெடிப்பு ஏற்பட்டு ஓட முடியாமல் பலர் பாதியிலே நின்றனர். சிலர் கீழே விழுந்தனர். இதனால் முகாமில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதேபோல உடற்தகுதி தேர்வில் சிலர் தோல்வி அடைந்தனர்.
ஓட்டபந்தயத்தின் போது தவறி கீழே விழுந்தவர்கள் மற்றும் கால்களில் வெயிலினால் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக அரசு மருத்துவ குழுவினர் தயாராக இருந்து பணியில் ஈடுபட்டனர். தேர்வுக்கு பள்ளி கல்வி சான்றிதழ்கள், மதிப்பெண் சான்றிதழ், நன்னடத்தை சான்றிதழ் உள்பட இதர சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவ பரிசோதனை
நேற்று நடந்த உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் திறன் போட்டிகளில் உரிய மதிப்பெண் பெற்றவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. அதன்பின்னர் நேர்முக தேர்வு நடைபெற்ற பின் பிரதேச ராணுவத்தில் சேர்த்து கொள்ளப்படுவார்கள். வருகிற 20–ந் தேதி வரை வீரர்கள் தேர்வு முகாம் நடைபெறுகிறது.
பயிற்சியின்போது மாத சம்பளம் ரூ.5 ஆயிரத்து 700–ம், பயிற்சி முடித்த பின்னர் மாதம் ரூ.5.200 மற்றும் கிரேடு சம்பளம் ரூ.2 ஆயிரம், ராணுவ சம்பளம் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றுடன் அகவிலைப்படி ஆகிய அனைத்தும் வழங்கப்படும். மேலும் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். பிரதேச ராணுவ படை பணி என்பது முழு நேர ராணுவ பணி ஆகாது. வருடத்தில் 2 மாதங்கள் மட்டுமே அவர்களுக்கு பணி காலம் ஆக இருக்கும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீஸ் பாதுகாப்பு
வீரர்கள் தேர்வு முகாமையொட்டி மைதானத்தில் குடிநீர் வசதி, உணவு வசதி உள்பட அடிப்படை வசதிகளை பிரதேச ராணுவ படையினர் செய்திருந்தனர். மேலும் மாநகர போலீசார் பாதுகாப்பு பணியை செய்து இருந்தனர். ராணுவ படைக்கு வீரர்கள் தேர்வுக்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் நேற்று போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
உள்ளாட்சி இடைத்தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கை சின்னத்தில் வித்தியாசம் இருப்பதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரெக்ஸ், மாநகராட்சி தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தார்.

அதிகாரியிடம் வேட்பாளர் புகார்

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. திருச்சி மாநகராட்சியில் 15, 32-வது வார்டுகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் நேற்று முன்தினம் பொருத்தப்பட்டன. இந்நிலையில் 32-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெக்ஸ் நேற்று திருச்சி மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான தண்டபாணியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், ‘‘மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் கை சின்னம் வாக்காளர்களுக்கு தெரியாத அளவில் சிறியதாகவும், சுயேச்சைகள் சின்னம் போல வித்தியாசமாகவும் உள்ளது. முறையான கை சின்னத்தை கண்களுக்கு தெரியும் வகையில் மாற்றி பொருத்த வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

கை சின்னத்தில்...

மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரி தண்டபாணி கூறுகையில், ‘‘வேட்பாளர்களின் சின்னம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. அதில் எதுவும் மாற்றங்கள் செய்யப்படவில்லை. மேலும் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து சின்னம் பதிவிறக்கம் செய்யப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது. சின்னத்தில் வித்தியாசம் இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் தான் புகார் தெரிவிக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு வேட்பாளர் ரெக்ஸ், சின்னத்தை அச்சிடும் போது வேண்டுமென்றே சிறியதாக அச்சிடப்பட்டுள்ளது. இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட சின்னமே பொருத்தப்பட்டுள்ளது. இதனை மாற்ற முடியாது என்று தேர்தல் அதிகாரி தண்டபாணி தெரிவித்தார்.