Wednesday, October 01, 2014

On Wednesday, October 01, 2014 by Unknown in ,    



சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் ஜாமீன் மீதான விசாரணையை வழக்கமாக மேல் முறையீட்டு மனுக்களை விசாரிக்கும் டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி விடுமுறை கால நீதிபதி ரத்னகலா உத்தரவிட்டுள்ளார்.


 
இதனால், இந்த வழக்கு, அக்டோபர் 7 ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று காலை 10.30 மணியளவில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிபதி ரத்னகலா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா சார்பாக வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானார்.
 
அரசுத் தரப்பின் சார்பில் மனுத்தாக்கல் செய்கிறீர்களா என நீதிபதி கேட்டதும், தான் தயாராக இருப்பதாக பவானி சிங் தெரிவித்தார். ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
 
உடனடியாக நீதிபதி, இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக இருப்பதால், இதனை விடுமுறைக் கால நீதிபதியான, தான் விசாரிக்க முடியாது என்றும் வழக்கமாக மேல் முறையீடுகளை விசாரிக்கும் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றுவதாகவும் உத்தரவிட்டார்.
 
கர்நாடக நீதிமன்றங்கள் தசரா விடுமுறையில் இருப்பதால், விடுமுறை முடிந்து அக்டோபர் 7ஆம் தேதி இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், "கர்நாடக உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே, வழக்கை கேட்காமலேயே ஒத்திவைத்தது இதுதான் முதல் முறை. தலைமை நீதிபதி தலையிட்டு, ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று கூறினார்.

0 comments: