Tuesday, February 03, 2015

On Tuesday, February 03, 2015 by farook press in ,    
பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்களின் அளவைக் குறைக்காமல் சரியான எடையில் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு) மண்டல மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கூட்டுறவு ஊழியர்களின் மண்டல கோரிக்கை மாநாடு திருப்பூரில் ஞாயிறன்று நடைபெற்றது.
இம்மாநாட்டில் கொடியேற்றி வைத்தார். சம்மேளனக் குழு உறுப்பினர் வி.கருப்பசாமி வரவேற்றார். சம்மேளன இணைச் செயலாளர் பி.கௌதமன் தலைமை தாங்கினார். சம்மேளனத் துணைத் தலைவர் வழக்கறிஞர் எம்.சுப்பிரமணியம் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில் பொது விநியோகத் திட்டத்தை சீர்குலைக்காமல், தொடர்ந்து நடத்தி பலப்படுத்த தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போதுள்ள விலைவாசி உயர்வு, கூட்டுறவு ஊழியர்களின் கடும் வேலைப்பளு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், நிதிப் பயன்களை 2015 ஜனவரி 1ம் தேதி கணக்கிட்டு வழங்க வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி வழங்க வேண்டும், தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய மானிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும், கூட்டுறவு ஊழியர்களின் பணித்தன்மைக்கு ஏற்ப படிகளை வழங்க வேண்டும், பொது விநியோகத் திட்டத்தை பல்வேறு துறைகள் ஆய்வு செய்வதைக் கைவிட்டு ஒரே துறையின் ஆய்வின் கீழ் கொண்டு வர வேண்டும், எடை குறைவு பிரச்சனையைப் போக்க பாக்கெட் முறையை அமலாக்க வேண்டும், சரக்கு இருப்புக் குறைவுக்கு இரட்டிப்பு அபராதத் தொகை விதிக்கும் அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கூடுதல் பணிகள் செய்வதற்கு உரிய கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கை மாநாட்டில் மண்டலம் முழுவதும் இருந்து சேலம் மாவட்டச் செயலாளர் எல்.கே.மனோகரன், ஈரோடு மாவட்டத் தலைவர் கே.ரவி, நாமக்கல் மாவட்டச் செயலாளர் எம்.ரங்கசாமி, கரூர் மாவட்டச் செயலாளர் கே.மணியரசு, கோவை மாவட்டத் தலைவர் எஸ்.சுந்தர்ராஜன், நீலகிரி நிர்வாகி ஆல்தொரை உள்பட 350 பேர் கலந்து கொண்டனர். நிறைவாக சிஐடியு மாநில உதவித் தலைவர் எம்.சந்திரன் மாநாட்டை நிறைவு செய்து வைத்து உரையாற்றினார். திருப்பூர் மாவட்டத் தலைவர் கே.அபூபக்கர் நன்றி கூறினார். 




0 comments: