Friday, September 25, 2015

On Friday, September 25, 2015 by Unknown in , ,    
வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 



இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரத்தில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் என்.வெங்கடேச பண்ணையாரின் 12-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 26ம் தேதி (சனிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் திரளான மக்கள் கலந்து கொள்வார்கள். 

கடந்த ஆண்டுகளில் நடந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காக, வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவரும் ஊர்வலமாக வருவதற்கும், 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றாக கூடுவதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக நினைவுதின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடத்துவதற்கும், அன்னதானம் அளிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு நடத்த இருந்தால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை அணுகி முன்அனுமதி பெற வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு போன்ற ஊர்வலங்களுக்கு பொருந்தாது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.
நிகழ்ச்சியை அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் நடத்த மாவட்ட எஸ்பி அஸ்வின் எம்.கோட்னீஷ் தலைமையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி மாவட்டத்தின் எல்லையில் 10 இடங்களில் சோதனை சாவடிகளும், பிரச்சினைக்கு உரிய இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

0 comments: