Wednesday, September 24, 2014

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
திருப்பூர் மாநகராட்சியின் 48–வது வார்டு உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்ட திருப்பூர் மாநகர மகளிரணி செயலாளர் கீதாஆறுமுகம் (அ.தி.மு.க.) கடந்த 2 ஆண்டு காலத்தில் பகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்காக காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் தமிழக முதல்–அமைச்சரின் மீது மிகுந்த பற்றும், கட்சியின் மீது இவர் வைத்திருந்த மரியாதையும் மக்களுக்கு செய்யும் சேவையால் இவர் 48–வது வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.
மக்களுக்காக உழைப்பதே தனது கடமை என்று எண்ணி உழைத்து மக்களிடம் நன்மதிப்பை பெற்ற கீதா ஆறுமுகம் கூறியதாவது:–
எனது 48–வது வார்டுக்குட்பட்ட பகுதியில் தார் சாலைகள், போர்வெல் தண்ணீர் டேங்க், குடிநீர் குழாய், குடிசை மேம்பாட்டு திட்டத்தில் தெருவிளக்குகள், சோடியம் மற்றும் டியூப் லைட்டுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 48–வது வார்டு மக்களின் அத்தியாவசிய தேவைகளை முன்னின்று செய்து கொடுத்து வருகிறேன். நான் பெண் கவுன்சிலராக இருப்பதால் 48–வது வார்டில் உள்ள பெண்கள் தங்கள் குறைகளை எளிதில் என்னை அணுகி தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்கிறார்கள். மேலும் முதல்–அமைச்சர் திருப்பூர் மாநகராட்சிக்கு அதிகமான நிதி உதவி வழங்கி வருகிறார்கள். முதல்–அமைச்சரின் ஆசியால் பொதுமக்களுக்கு அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்து கொடுக்க முயற்சி செய்வேன். அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்.
On Wednesday, September 24, 2014 by farook press in ,    
பொமக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தேசிய பென்சன் திட்டம் 2013–ஐ ரத்து செய்ய வேண்டும். தமிழக முதல்–அமைச்சர் தேர்தல் காலத்தில் அறிவித்தவாறு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை தொகையை ரூ. 4 லட்சமாக உயர்த்த வேண்டும். 20 ஆண்டு பணி முடிந்த அனைவருக்கும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை வட்டக்கிளை தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் உடுமலை தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க உடுமலை வட்டக்கிளை தலைவர் பாலசந்திரமூர்த்தி தமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுக்குழு தலைவர் சிவதாணு, மாவட்ட செய லாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் சுப்பிரமணியன், வட்டார செயலாளர் தாசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அம்சராஜ் உள்பட பலர் பேசினர்.
On Wednesday, September 24, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் நியாயமான போனஸ் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி அக்டோபர் 7ம் தேதி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துதென சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
திருப்பூரில் சிஐடியு பனியன் மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகக்குழுக் கூட்டம்  செவ்வாயன்று அவிநாசி சாலை தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் கே.காமராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சி.மூர்த்தி, செயலாளர்கள் ஜி.சம்பத், எம்.என்.நடராஜ், கே.நாகராஜன், ஆர்.மாணிக்கம், துணைத் தலைவர்கள் எம்.சந்திரன், ரவி, பொருளாளர் வி.நடராசன் மற்றும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:
திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் உடனடியாக நியாயமான போனஸ் வழங்க கோரி வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி ஆயிரக்காணக்கான தொழிலாளர்களை திரட்டி திருப்பூர் குமரன் சிலை அருகில் மாபெரும் ஆர்பாட்டம் நடத்துவது என்றும், அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் 20 நாட்களுக்கு முன்பு நியாயமான போனஸ் வழங்க கேட்டு பனியன் உற்பத்தியாளர் சங்கங்களுக்கும், கம்பெனி நிர்வாகத்திற்கும் கடிதம் அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
​----------​
On Wednesday, September 24, 2014 by farook press in ,    
தமிழகத்தின் முக்கியமான தத்துவ மாத இதழான "மார்க்சிஸ்ட்" வெள்ளிவிழாவை முன்னிட்டு திருப்பூரில் செப்டம்பர் 25ம் தேதி வியாழக்கிழமை சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அரிசிக்கடை வீதியில் வியாழனன்று மாலை நடைபெறும் இக்கருத்தரங்கில் "இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மையும், 370வது பிரிவும்" என்ற தலைப்பில் அறிஞர்கள் பங்கேற்று கருத்துரை வழங்குகின்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் மாத இதழ் ஆசிரியர் குழு சார்பில் பேராசிரியர் சந்திரா அறிமுக உரை ஆற்றுகிறார். பேராசிரியர் அருணன், பத்திரிகையாளர் ஞானி, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்எல்ஏ., ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தோர் மார்க்சிஸ்ட் மாத இதழுக்கான ஆண்டு சந்தாக்களை வழங்க உள்ளனர். முன்னதாக திருப்பூர் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிறைவாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் நன்றி கூறுகிறார்.

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
கோவை, செப். 24–
கோவையில் நள்ளிரவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் ரோந்து வருகிறார்கள். நேற்று இரவு வெரைட்டி ஹால் பகுதியில் போலீசார் ரோந்து வந்தனர்.
அப்போது 2 வாலிபர்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு கடை முன்பு நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு கடையில் கொள்ளையடிப்பதற்காக அங்கு பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவர்கள் மறைத்து வைத்திருந்த இரும்புக்கம்பி, ஸ்குரு டிரைவர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் பெயர் மணிகண்டன், மாசாணம் என்று தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
போலீசார் ரோந்து சென்றிருக்காவிட்டால் நேற்று இரவு கொள்ளையர்கள் கடையில் கைவரிசை காட்டியிருப்பார்கள். கொள்ளை மற்றும் வழப்பறியை தடுக்க ரோந்துபணி தொடரும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
கோவை, செப்.24–
கோவையை அடுத்த நீலாம்பூரில் மஹாராஜா தொழில் நுட்ப பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 1000–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த திங்கட்கிழமை கல்லூரி நிர்வாகம் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்பதாக கூறி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து நேற்று சுமார் 500–க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சமாதானம் பேசிய போலீசார் மாணவ பிரதிநிதிகளில் சிலரை மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதிப்பதாக கூறினர். இதையடுத்து மாணவ பிரதிநிதிகள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.
அதில் கல்லூரி நிர்வாகம் அரசின் விதிமுறைகளை மீறி கல்வி கட்டணத்தை கூடுதலாக வசூலித்து வருகின்றனர். அதை தடுத்து தாங்கள் கல்லூரிக்கு கூடுதலாக செலுத்தி கட்டணங்களை திரும்ப பெற்று தர வேண்டும்.
இனிமேல் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். மனு மீது உரிய விசாரணை நடத்துவதாக கலெக்டர் உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மாணவர்கள் கல்லூரிக்கு திரும்பினர்.
கல்லூரியில் போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களை கல்லூரி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து கல்லூரியை கண்டித்து கல்லூரிக்கு வெளியே வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதியம் ஆரம்பித்த போராட்டம் இரவும் நீடித்தது. கல்லூரி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த முன்வராததால் இரவு கஞ்சித் தொட்டி அமைத்தனர்.
மேலும் விடிய விடிய 500–க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் தரையில் அமர்ந்து கல்லூரியின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த நிலையில் இரவில் திடீரென்று கனமழை பெய்தது. மழையையும் பொருப்படுத்தாமல் மழையில் நனைந்தபடி அமர்ந்திருந்தனர். இது பார்ப்போரையும் பரிதவிக்க செய்யும் விதமாக இருந்தது.
இந்தநிலையில் நள்ளிரவு 1 மணியளவில் மழையில் தொடர்ந்து நனைந்தபடி இருந்ததால் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு மாணவி லாவண்யா மற்றும் மெக்கானிக்கல் இறுதி ஆண்டு மாணவர் மனோஜ் ஆகியோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினர். மற்ற மாணவர்கள் 108 ஆம்புலன்சு உதவியுடன் பாதிக்கப்பட்ட 2 பேரையும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் தொடர்ந்து இன்று காலையும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதன் காரணமாக கல்லூரி முன்பு தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.

On Wednesday, September 24, 2014 by farook press in ,    
வால்பாறை, செப்.24–
கோவை மாவட்டம் பெரியகல்லாறு, சின்னக்கல்லாறு, சின்கோனா மற்றும் நீராறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக 20 யானைகள் கொண்ட கூட்டம் உலா வருகின்றன. நேற்று மாலை 3 பெரிய யானை மற்றும் 3 சிறிய யானை என 6 யானைகள் கொண்ட கூட்டம் நீராறு அணைப்பகுதியில் உள்ள வனத்தில் முகாமிட்டிருந்தன.
நள்ளிரவு 11.30 மணியளவில் காட்டு யானைகள் கூட்டம் நீராறு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன. அங்கிருந்த வீட்டை இடித்து தரைமட்டமாக்கின. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடைந்தனர்.
4 மணி நேரம் நீராறு பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அதிகாலை 2.30 மணியளவில் சின்கோனா பத்தாம்பாடி குடியிருப்பு பகுதிக்கு சென்றன. அங்கு ஆட்கள் இல்லாத வீட்டில் கதவு மற்றும் ஜன்னலை உடைத்து தும்பிக்கையை வீட்டுக்குள் நுழைத்து சாப்பிட உணவு பொருட்கள் உள்ளனவா? என தேடின.
பின்னர் அதே பகுதியில் தனியாக வசித்து வந்த விஜயகுமாரி என்ற பெண் தொழிலாளியின் வீட்டுக்கு சென்றன. விஜயகுமாரி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். காட்டு யானை கூட்டத்தில் இருந்த ஒரு யானை சமையலறை பகுதிக்கு சென்று அங்கிருந்த ஜன்னலை உடைத்து தும்பிக்கையை உள்ளே நுழைத்தது.
சமையலறையில் அரிசி, பருப்பு உள்ளதா? என தேடிய போது பாத்திரங்கள் உருண்டோடின. சத்தம் கேட்டு எழுந்த விஜயகுமாரி சமையலறையில் பார்த்த போது யானையின் தும்பிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்தார். யானையிடம் இருந்து தப்பிக்க வீட்டுக்கதவை திறந்து வெளியே ஓட முயன்றார். கதவை திறந்த போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை தும்பிக்கையை வீட்டுக்குள் நுழைத்தது.
மீண்டும் அச்சத்தில் நடுநடுங்கிய விஜயகுமாரி தீப்பந்தத்தை ஏற்றி யானையை துரத்தினார். பின்னர் கதவை சாத்தி கட்டிலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டு சத்தம் போட்டார். விஜயகுமாரியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தபோது 6 யானைகளும் அங்கேயே முகாமிட்டிருந்தன.
பொதுமக்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பொது மக்களுடன் இணைந்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்துக்கு பின்னர் அதிகாலை 3ž மணியளவில் வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் விரட்டப்பட்டன.
இதுகுறித்து தேயிலை தொழிலாளர்கள் கூறும்போது காட்டு யானைகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு காட்டு யானைகளை விரட்ட வேண்டும். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையெனில் இதை கண்டித்து சாலைமறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
On Wednesday, September 24, 2014 by farook press in ,    
கோவை, செப். 24–
கோவையை அடுத்த திருமலையாம் பாளையத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக லட்சுமணன் உள்ளார். நேற்று மாலை வேலை முடிந்து வங்கியை அலுவலர்கள் பூட்டிச் சென்றனர். இந்த நிலையில் இரவு வங்கியின் காம்பவுண்டு சுவரை தாண்டி 2 கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்தனர்.
அவர்கள் வங்கியின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை வளைத்து உடைத்தனர். அப்போது ஜன்னலில் இருந்த கண்ணாடி உடைந்து கீழே விழுந்தது. இந்த சத்தம் கேட்டு வங்கியின் இரவு காவலாளி கோபால் வங்கிக்கு பின்புறம் சென்று பார்த்தார்.
காவலாளியை பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து காவலாளி கோபால் வங்கி மேலாளர் லட்சுமணனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் கொள்ளை சம்பவம் குறித்து க.க.சாவடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வங்கியில் பொருத்தியிருந்த கேமிராவை ஆய்வு செய்து பார்த்த போது அதில் கொள்ளை முயற்சி சம்பவம் பதிவாகியிருந்தது. அதில் இருந்த 2 பேரின் புகைப்படத்தை எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
On Wednesday, September 24, 2014 by farook press in ,    
திருப்பூர் காந்திநகர் ராக்கியாபாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 28). டைல்ஸ் மேஸ்திரி. இவருக்கும் திருச்சியை சேர்ந்த சுப்பிரமணியன்– சரோஜா தம்பதியின் மகள் நந்தினிக்கும் (23) கடந்த 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சிந்தனா (5) என்ற பெண் குழந்தை உள்ளார். 
இந்நிலையில் பால கிருஷ்ணனின் நண்பர் ராஜேந்திரன் (28) என்பவரும் கட்டிடவேலைக்கு சென்றார். நண்பர் ராஜேந்திரனை வீட்டுக்கு அடிக்கடி பாலகிருஷ்ணன் அழைத்து வந்தார். இதனால் நந்தினிக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது.
தனது மனைவி நண்பருடன் சிரித்து பேசுவதை கண்டு பாலகிருஷ்ணன் சந்தேக மடைந்தார். இதனால் நந்தினியை அடித்து துன்புறுத்தினார். இதில் கோபமடைந்த நந்தினி கடந்த 4 மாதத்துக்கு முன் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றார். பெரியோர்கள் சமரசம் செய்துவைத்து நந்தினியை கணவருடன் அனுப்பி வைத்தனர். சிறிது நாட்களே அமைதியாக சென்ற வாழ்க்கையில் மீண்டும் சந்தேகம் கிளம்பியது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
வாழ்க்கையில் வெறுப்படைந்த நந்தினி நேற்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதன்படி தூக்கில் தொங்கியபோது வீட்டில் உள்ளவர்கள் பார்த்தனர். அதிர்ச்சியடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நந்தினியை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நந்தினியின் பெற்றோர் திருப்பூர் விரைந்தனர். நந்தினியின் தாய் சரோஜா அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.