Tuesday, September 02, 2014

On Tuesday, September 02, 2014 by farook press in , ,    
தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கம்பெனி பதிவாளர் மனுநீதிசோழனை கோர்ட்டு காவலில் ஜெயிலில் அடைக்க சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில், மத்திய அரசு நிறுவனமான கம்பெனிகள் பதிவாளர் அலுவலகம் உள்ளது. புதிதாக தொடங்கப்படும் கம்பெனிகள் இந்த அலுவலகத்தில்தான் பதிவு செய்யவேண்டும். இந்த அலுவலகத்தில், கம்பெனி பதிவாளவராக டாக்டர் மனுநீதி சோழன் (வயது 50) என்பவர் உள்ளார்.
இதற்கிடையில், தொழில் அதிபரும், செட்டிநாடு குழுமத்தின் தலைவருமான எம்.ஏ.எம்.ராமசாமியை, அந்த பதவியில் இருந்து நீக்கிவிட்டு, அந்த பதவிக்கு வேறு ஒருவரை நியமித்து செட்டிநாடு குழுமத்தின் பொதுகுழுவில் தீர்மானம் இயற்றப்போவதாகவும், அவ்வாறு இயற்றப்போகும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறி கம்பெனி பதிவாளர் டாக்டர் மனுநீதி சோழனுக்கு எம்.ஏ.எம். ராமசாமி ரூ.10 லட்சம் லஞ்சமாக கொடுக்கப்போவதாகவும் சி.பி.ஐ. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து கடந்த 26–ந் தேதி வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், நேற்று முன்தினம் லஞ்சம் பணம் வாங்கும்போது மனுநீதி சோழனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து மனுநீதி சோழனிடம், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
பின்னர், இரவு 12 மணிக்கு நுங்கம்பாக்கம் போலீசில் அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் ஒப்படைத்தனர். இரவு நேரத்தில் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இவ்வாறு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர், நேற்று அதிகாலை 5.30 மணிக்கு அவரை மீண்டும் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர், அவரை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு முதன்மை செசன்சு கோர்ட்டில், நேற்று மதியம் 12.30 மணிக்கு ஆஜர்படுத்தினார்கள். இதையடுத்து மனுநீதிசோழனை ஒருநாள் (இன்று மதியம் வரை) கோர்ட்டு காவலில் இருந்து எடுத்து புழல் மத்திய ஜெயிலில் அடைக்கும்படி, சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
இதையடுத்து, மனுநீதிசோழனை ஜாமீனில் விடுவிக்கவேண்டும் என்று அவர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (28–ந் தேதிக்கு) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், இந்த வழக்கு தொடர்பாக மனுநீதி சோழனை ஒருவாரம் (7 நாட்கள்) தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுநீதி சோழன் சார்பில் ஆஜரான வக்கீல் ரோகித், ‘சி.பி.ஐ. அதிகாரிகளின் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கக்கூடாது என்றும், இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்‘ என்றும் வாதிட்டார். இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையையும் வியாழக்கிழமைக்கு (இன்று) தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்பின்னர், மனு நீதிசோழனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் ஜெயிலில் அடைக்க சி.பி.ஐ. அதிகாரிகள் அழைத்து சென்றனர். அப்போது, அவரை படம்பிடிக்க முயன்ற கேமராமேன்களுக்கும், மனுநீதிசோழனின் நண்பர்களுக்கும் தள்ளுமுள்ளு நடந்தது.

0 comments: