Monday, September 22, 2014
திருப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) காலை 9 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் கே.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மின்தடைபடும் பகுதிகள்: காட்டன் மில் சாலை, டிடிபி மில் ஒரு பகுதி, பிச்சம்பாளையம், பிச்சம்பாளையம் புதூர், பாப்பா நகர், குமாரசாமி நகர், சின்னபொம்மம்பாளையம், ஆர்.கே. நகர், ஓடக்காடு, வலையங்காடு, முருகங்கப்பாளையம், பத்மாவதிபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் சாலை, நாராயணசாமி நகர், ஆஷர் நகர், ராம் நகர், ராமையா காலனியின் ஒரு பகுதி, பி.என்.சாலை, முனியப்பன் கோவில் பின்புறப் பகுதி, அவிநாசி சாலை, புஷ்பா திரையரங்கு பகுதி, கல்லூரி சாலை, அணைப்பாளையம், கள்ளம்பாளையம், கோழிப்பண்ணை, எம்.ஜி.ஆர். நகர், பாரதி நகர், போஸ்டல் காலனி, மாஸ்கோ நகர், பூத்தார் திரையரங்கு பகுதி, காமாட்சிபுரம், கே.ஆர்.இ. லே-அவுட், எல்.ஐ.சி. காலனி, பாத்திமா நகர், டெலிபோன் காலனி, வித்யா
நகர், காவேரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துசாமி வீதி விரிவு, சாமுண்டிபுரம், சாமிநாதபுரம், லட்சுமி திரையரங்கு பகுதி
வெள்ளக்கோவில் நகராட்சி சார்பில், புதிய பேருந்து நிலையத்தில் அமைய உள்ள அம்மா உணவகத்தை, காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
ரூ. 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்த அம்மா உணவகத்திற்கான கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், இப்பணிகளை காங்கயம் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
இது குறித்து நகராட்சி பொறியாளர் கே.சரவணன் கூறுகையில், நவீன நீராவி அடுப்பு, அரிசி, பருப்பு மற்றும் ஒரே சமயத்தில் 240 இட்லிகளை வேகவைக்கும் சாதனம், சமையல் பாத்திரங்களைக் கழுவி கிருமி நீக்கும் இயந்திரம், குடிநீர் சுத்திகரிப்பு, குடிநீர் குளிர்விக்கும் கருவி, 12 உணவருந்தும் டேபிள்கள் உள்ளிட்ட சாதனங்கள் உணவகத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையிலும் இந்த உணவகம் செயல்படும். தமிழக முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் விரைவில் இந்த உணவகத்தை திறந்து வைக்க உள்ளார் என்றார்.
ஆய்வின் போது, நகர்மன்றத் தலைவர் வி.கந்தசாமி, நிலவள வங்கித் தலைவர் எஸ்.என்.முத்துக்குமார், கட்டட சங்கத் தலைவர் ஆர்.மணி, துணைத் தலைவர் யு.ஏ.சரவணன், கவுன்சிலர் வைகை கே.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள ஆடுவதை கூடத்தில் இடவசதி இல்லாததால் இறைச்சிக்கடைக்காரர்கள் தவித்து வருகிறார்கள். இதனால் 4 மண்டலங்களிலும் ஆடுவதை கூடம் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள ஆடு இறைச்சி கூடங்களை முறைப்படுத்தும் வகையில், தென்னம்பாளையம் பகுதியில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் நவீன ஆடுவதை கூடம் அமைக்கப்பட்டு கடந்த 2010–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. இந்த ஆடுவதை கூடம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்றுள்ளது. இந்த கூடம் ஆடுகளை வதைக்கும் அறை, ஆடுகளை பரிசோதிக்க டாக்டர்கள், மயக்க நிலையை ஏற்படுத்தி ஆடு அறுக்கும் வசதி, ‘ஹலால்’ முறை, என்று நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஆடுகளை அறுத்து, ‘‘சீல்’’ வைக்கப்பட்ட இறைச்சியாக கொடுக்க, ஒரு ஆட்டுக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. மாநகராட்சி பகுதி முழுவதற்கும் ஒரே ஆடுவதை கூடம் என்பதாலும், தொலைவு அதிகம் இருப்பதாலும் அதிருப்தி அடைந்த இறைச்சி கடைக்காரர்கள், ஆடுவதை கூடத்துக்கு செல்வதை தவிர்த்து வந்தனர். தொடக்கத்தில் கெடுபிடி விதித்த மாநகராட்சி அதிகாரிகள், பின்னர் காலப்போக்கில் இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர்.
இதனால் கடந்த பல மாதங்களாக ஆடுவதை கூடத்துக்கு இறைச்சிக்கடைக்காரர்கள் யாரும், ஆடுகளை வதை செய்ய கொண்டுவருவதில்லை. இதன் காரணமாக ஆடுவதை கூடம் செயல்பாடு இன்றி இருந்தது. இந்த நிலையில் இந்த ஆடுவதை கூடத்தை ஒப்பந்தம் எடுத்தவரும் வருமானம் இன்றி இருந்தார்.
தற்போது புதிதாக ஏலம் விடப்பட்டதை தொடர்ந்து ஆடுவதை கூடத்தில் அறுக்கப்படாத ஆடுகளை, மாநகராட்சி எல்லைக்குள் விற்கக்கூடாது. மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இறைச்சி கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கினார்கள். இதன் காரணமாக நேற்று முதல் வியாபாரிகள் மீண்டும் ஆடுவதை கூடத்துக்கு வரத்தொடங்கினார்கள். நேற்று அதிகாலையிலேயே ஏராளமான வியாபாரிகள், தங்கள் ஆடுகளை இங்கு வதை செய்து சீல் வைத்து சென்றனர். ஏராளமான வியாபாரிகள் ஒரே நேரத்தில் ஆடுவதை கூடத்துக்கு வந்ததால், அங்கு இட நெருக்கடி ஏற்பட்டு ஆடுகளின் தோல்களை உறிக்க சிரமப்பட்டனர்.
உடுமலையில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பின்னி பிணைந்து விளையாடிய 6½ அடி நீள சாரை பாம்புகளை வனத்துறையினர் பிடித்தனர்.
உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிப்பாளையத்தில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் 2 சாரை பாம்புகள் நேற்று பிற்பகல் நீண்ட நேரம் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து விளையாடிக்கொண்டிருந்தன. அதை காண அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது. அதே சமயம் குடியிருப்பு பகுதியில் பெரிய பாம்புகள் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவல் கிடைத்ததும் உடுமலை வனச்சரக அதிகாரிகளின் அறிவுரைப்படி வேட்டை தடுப்பு காவலர் மலர்வண்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் லட்சுமணன், கார்த்திக் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த 2 பாம்புகளும் அங்குள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் தென்னை மட்டைகள் போட்டு வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்தன. அதில் ஒரு பாம்பை வனத்துறையினர் லாவகமாகப் பிடித்தனர். உடனே மற்றொரு பாம்பு அங்குள்ள காய்ந்த தென்னை மட்டைக்குள் புகுந்தது.
அப்போது அங்கு கல் இடுக்குகளில் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது ஒரு கல் இடுக்கில் இருந்த கண்ணாடிவிரியன் பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். அத்துடன் தப்பியோடிய அந்த சாரை பாம்பையும் வனத்துறையினர் பிடித்தனர். உயிருடன் பிடிக்கப்பட்ட 2 சாரைப் பாம்புகளும் சுமார் 6½ அடி நீளம் இருந்தன. கண்ணாடி விரியன் பாம்பு 3½ அடி நீளம் இருந்தது. அவற்றை வனத்துறையினர், வனத்துறை அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
பெண்கள் போல் ஆண்களால் மனஉறுதியுடன் இருக்க முடியாது என்று திருப்பூரில் நடந்த மனைவி நல வேட்பு நாள் விழாவில் நடிகர் கே.பாக்கியராஜ் பேசினார்
வாழ்க்கை பாதையில் இன்ப, துன்பங்களை சரிபாதியாக ஏற்றுக்கொண்டு கணவருக்காகவும், குடும்பத்துக்காகவும் பல தியாகங்களை செய்த தனது துணைவி லோகாம்பாளின் பிறந்தநாளை மனைவி நல வேட்பு விழாவாக வேதாத்திரி மகரிஷி உருவாக்கி உள்ளார். அதன்படி திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள வேலாயுத சாமி திருமண மண்டபத்தில் மனைவி நல வேட்பு நாள் விழா மற்றும் அன்னை லோகாம்பாளின் 100–வது ஜெயந்தி விழா நேற்று மாலை நடந்தது.
விழாவுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாய்–லலிதா தம்பதியர் தலைமை தாங்கினார்கள். ஆழியார் அறிவுதிருக்கோவில் அறங்காவலர் நடராஜன்–கமலம் தம்பதியர் முன்னிலைவகித்தனர். திருப்பூர் வேதாத்திரி மருத்துவமனை டாக்டர் சீனியம்மாள் சிங்காரவேலு இறைவணக்கம், குருவணக்கம் பாடினார். திருப்பூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ஜி.வி.பழனிச்சாமி–வசந்தி தம்பதியர் வரவேற்று பேசினார்கள். ஜெய் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களின் தலைவர் தங்கராஜ்–சாவித்திரி தம்பதியர், திருப்பூர் பார் அசோசியேஷன் தலைவர் செல்லகிருஷ்ணன்–பரிமளா தம்பதியர், மற்றும் புதுமண தம்பதியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான கே.பாக்கியராஜ்–பூர்ணிமா தம்பதியர் கலந்துகொண்டு பேசினார்கள்.
விழாவில் கலந்து கொண்ட சுமார் 2 ஆயிரம் தம்பதியரும், புதுமண தம்பதிகள் போல் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக்கொண்டனர். கணவன்மார்கள் அனைவரும் தங்கள் மனைவியிடம் பரஸ்பரம் அன்பு செலுத்தியும், மனமொத்த தம்பதிகளாக இருப்பதாகவும் உறுதி எடுத்துக்கொண்டனர்.
விழாவில் திரைப்பட நடிகர் கே.பாக்கியராஜ் பேசும் போது கூறியதாவது:–
நான் கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தவன். பெண்கள் கூட்டமாக சேர்ந்து பேசுவதை அதிகமாக கேட்டுள்ளேன். பெண்கள் அளவுக்கு ஆண்களால் மனஉறுதியுடன் இருக்க முடியாது. ஊடலும், கூடலும் இருந்தால்தான் அது தாம்பத்தியம். இந்தியாவில் மட்டுமே ஆணும், பெண்ணும் பேசி பழகாமல் பெற்றோர் பார்த்து நிச்சயித்து திருமணம் முடித்து வைக்கும் கலாசாரம் உள்ளது. வெளிநாடுகளில் அந்த கலாசாரம் இல்லை.
இதனால் தான் இந்தியாவில் விவாகரத்து குறைவாக உள்ளது. தன்னலம் கருதாமல் நமக்காக பாடுபடும் நமது மனைவி மீது நாமும் அன்பு செலுத்த வேண்டும். இங்கு நான் மாலை மாற்றும் போது, 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த எனது திருமணம் மீண்டும் நினைவுக்கு வந்தது. இதுவரை எனது மனைவியின் கண்களை நான் நேருக்கு நேர் பார்த்ததில்லை. இன்று அதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுத்துள்ளீர்கள்.
Sunday, September 21, 2014
நடிகை குஷ்பு
மீண்டும் ரஜினியுடன் நடிக்க மாட்டேன் என்றும், கமலுடன் நடிக்க விரும்புகிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகினரைப் பொறுத்தவரை, ட்விட்டர் பக்கத்தில் எப்போதுமே தீவிரமாக இயங்குபவர் குஷ்பு. தன்னைப் பற்றி எந்த ஒரு செய்தி வந்தாலும், உடனுக்குடன் பதில் தருவது, கருத்துக்கள் தெரிவிப்பது என தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்.
ட்விட்டரில் தன்னைப் பின் தொடரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு சனிக்கிழமை பதிலளித்தார். 'ரஜினியுடன் மீண்டும் நடிக்க வாய்ப்பு வந்தால்?' என்ற கேள்விக்கு 'மாட்டேன்' என்றும், 'கமலுடன் 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு வந்தால்' என்ற கேள்விக்கு 'ம்ம்ம்ம்ம்ம்ம்...' என்று பதிலளித்து இருக்கிறார்.
மேலும் அவரது சில பதில்களின் தொகுப்பு:
"தற்போதைக்கு மீண்டும் அரசியலில் நுழையும் திட்டமில்லை.
என்னுடைய பார்வையில், இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்தில் தவறான பாதையில் செல்கிறார்கள்.
கார்த்திக் நடித்ததில் மெளன ராகம் மற்றும் அக்னி நட்சத்திரம் ஆகியவை மிகவும் பிடித்த படங்கள்.
சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'மதகஜராஜா' திரைப்படம் வெளிவருவதற்கான அறிகுறிகள் இல்லை."
இவ்வாறு குஷ்பு வெவ்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசுகிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி. படம்: ராய்ட்டர்ஸ்
இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.) தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈரானுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியா, இராக்கில் கணிசமான பகுதிகளை இஸ்லாமிக் ஸ்டேட் கிளர்ச்சிப் படை கைப்பற்றியுள்ளது. இரு நாடுகளின் அரசுகளால் அந்த அமைப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
இராக் தலைநகர் பாக்தாதை நோக்கி கிளர்ச்சிப் படை முன்னேறிய நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஐ.எஸ்.ஸுக்கு எதிராக அண்மையில் போரில் குதித்தன.
ஈரானுடன் மறைமுக பேச்சு
மேலும் வளைகுடா பகுதியைச் சேர்ந்த சுமார் 40 நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் பரம எதிரியான ஈரானுடனும் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறப்படு கிறது.
இதுகுறித்து ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி கொமேனி அண்மையில் நிருபர்களிடம் பேசியபோது, ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான போரில் தங்களுடன் இணையுமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டது, அதனை நிராகரித்துவிட்டோம் என்று தெரிவித்தார்.
ஜான் கெர்ரி அழைப்பு
ஈரானுடன் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா தயங்கி வருகிறது. கடந்த வாரம் ஜெட்டாவில் நடைபெற்ற வளைகுடா நாடுகளின் ஆலோ சனைக் கூட்டத்தில் ஈரானுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்படவில்லை.
இந்தப் பின்னணியில் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பேசியபோது, ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈரான் உட்பட ஒவ்வொரு நாடுகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது என்று தெரிவித்தார்.
இதன்மூலம் ஈரானுக்கு அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்தி ருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஈரான் ஆதரவு
சிரியா, இராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். ஈரானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அந்த வகையில் ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போருக்கு ஈரானும் மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது.
இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் பாஜக தலைவர்கள் முரளிதர ராவ், விஜய் ஜோலி ஆகியோர் நேற்று பேச்சு நடத்தினர்.
கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் இந்த பேச்சு நடைபெற்றது. இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர் களை விடுவிக்க ராஜபக்சே உத்தரவிட்டதை பாராட்டிய அவர்கள், மீனவர்களின் படகு களையும் விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண இருநாடுகளிடையே புதிய கடல்சார் கொள்கை உருவாக்கப்பட்ட வேண்டுமென்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கடலில் மீன்பிடிப்பது என்பது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை. இந்தியாவில் பதற் றத்தை அதிகரிக்கும் இந்த விவகாரத்தை இலங்கை மிகவும் நாசூக்காக கையாள வேண்டுமென்று ராஜபக்சேவிடம் முரளிதர ராவ் வலியுறுத்தினார்.
ஆசிய அரசியல் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாஜக தேசிய பொது செயலாளரும் தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ், பாஜக வெளிநாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் விஜய் ஜோலி ஆகியோர் இலங்கை சென்றுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
தர்மபுரி தொகுதி எம்.பி.யும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அ...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
திருப்பூரில் நடந்த கூட்டுறவு வார விழாவில் மகளிர் சுய உதவிக்குழு கடன், பயிர் கடன், மாற்று திறனாளிகள் கடன் என 591 பேருக்கு ரூ.3.52 கோடி மதிப...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
கைது சிறை தவிர்ப்பதற்கு கிலோ கணக்கில் சிலை வழங்கப்பட்டதா ? திருச்சி மன்னார்புரத்தில் தலைமை அலுவலகம் அமைத்து செயல்பட்டு வரும் நிதிநிறு...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...
-
தமிழகத்தில் பெயிண்ட் மற்றும் ஓவிய தொழில் பார்ப்பவர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தர வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில...
.jpg)



