Thursday, September 18, 2014

On Thursday, September 18, 2014 by farook press in ,    
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு முனையத்திற்கு கத்தாரில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 30) என்பவர் வந்தார்.
அவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது, கடந்த 2 ஆண்டுகளாக சதி திட்டம், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்ற வழக்குகளில் சி.பி.ஐ. போலீசார் அவரை தேடி வருவதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ரஞ்சித்குமாரை பிடித்து தனி அறையில் அடைத்தனர். இதுபற்றி சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்து பிடிபட்ட ரஞ்சித்குமாரை கைது செய்து தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளி அருண்செல்வராசனை 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி கோர்ட்டு அனுமதி அளித்தது.

பாகிஸ்தான் உளவாளி

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான அருண்செல்வராசனை கடந்த 10-ந் தேதி தேசிய புலனாய்வு போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அருண்செல்வராசனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கேட்டு கடந்த 12-ந்தேதி பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு போலீசார் மனு செய்து இருந்தனர்.

நேற்று முன்தினம் மனுவை விசாரித்த நீதிபதி மோனி, அருண்செல்வராசனை எத்தனை நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிப்பது என்பது குறித்து புதன்கிழமை(நேற்று) அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

6 நாள் காவல்

அதன்படி நேற்று இந்த மனு மீதான விசாரணை மீண்டும் நடந்தது. அப்போது பாகிஸ்தான் உளவாளி அருண்செல்வராசனை 18-ந்தேதி(இன்று) மதியம் 12 மணி முதல் 23-ந்தேதி மாலை 4 மணி வரை மொத்தம் 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்கவும், அப்போது அருண்செல்வராசன் சட்ட உதவிகள் குறித்து கேட்டால் தேசிய புலனாய்வு போலீசார் செய்து தர வேண்டும் என்றும் நீதிபதி மோனி உத்தரவிட்டார்.

மேலும் அருண்செல்வராசனுக்கு ராஜீவ்காந்தி கொலையாளிகளுடன் தொடர்பு உள்ளதா? என்று விசாரிக்க வேண்டும் என்பதால் அவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சி.பி.ஐ. அதிகாரிகள் அளித்த மனுவை நீதிபதி மோனி திருப்பி அனுப்பினார்.

சி.பி.ஐ. பதில் மனு

“ராஜீவ்காந்தி கொலையாளிகள் சம்பந்தப்பட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகையில், இங்கு ஏன் சி.பி.ஐ. மனு தாக்கல் செய்ய வேண்டும்? அதற்கான பதில் மனுவை 10 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த விசாரணையின் போது அருண்செல்வராசன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்படவில்லை. தேசிய புலனாய்வு போலீசார் இன்று(வியாழக்கிழமை) புழல் சிறையில் இருந்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்வார்கள்.

விசாரணையின் போது அருண்செல்வராசனை போல் வேறு யாராவது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள் தமிழகத்தில் பதுங்கி உள்ளார்களா? தமிழகத்தில் எந்தப்பகுதிகளை தாக்க சதி திட்டம் தீட்டப்பட்டது. இவனுக்கு உதவியவர்கள் யார்? என்பது குறித்த தகவல்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
நீலாங்கரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர்.

டிரைவர்

சென்னையை அடுத்த நீலாங்கரை செங்கேணியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டில் முதல் தளத்தில் வாடகைக்கு வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவருடைய மனைவி மலர் (32). இவர்களது மகள்கள் ஹரிணி (7), பரணி (3). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஹரிணி 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.

வெங்கடேசன், சென்னை பாலவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

உடல் கருகி கிடந்தனர்

நேற்று அதிகாலை வெங்கடேசன் வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. இதை பார்த்ததும் வீட்டின் உரிமையாளர் வனராஜா மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து ஓடி வந்து கதவை தட்டினார்கள். ஆனால் யாரும் கதவை திறக்காததால் கடப்பாரையால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

வீட்டிற்குள் தீ எரிந்து கொண்டு இருந்தது. வீடு முழுவதும் புகை மண்டலமாக இருந்ததால் உள்ளே சென்றவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பின்னர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து பார்த்தனர்.

அப்போது படுக்கை அறையில் வெங்கடேசன், மலர், ஹரிணி ஆகியோர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். சிறுமி பரணி மட்டும் இடுப்பு மற்றும் கால்கள் எரிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஆஸ்பத்திரியில் சாவு

இதுபற்றி தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீஸ் உதவி கமிஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிய சிறுமி பரணியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரணியும் பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதையடுத்து தீயில் கருகிய வெங்கடேசன், மலர், ஹரிணி, பரணி ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி நீலாங்கரை போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

காதல் திருமணம்

வெங்கடேசனின் சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம் இடையார்கிராமம் ஆகும். மலர், கோவையைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நீலாங்கரைக்கு வந்து வாடகை வீட்டில் குடியேறினர். பாலவாக்கம் தனியார் நிறுவனத்தில் வெங்கடேசன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு வெங்கடேசனை வேலையில் நிறுத்தி விட்டதாக தெரிகிறது. அதன்பிறகு அவர், பல இடங்களில் வேலை தேடினார். ஆனால் எங்கும் வேலை கிடைக்கவில்லை. இதனால் குடும்பம் நடத்த பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார்.

மேலும் மகளின் பள்ளி கட்டணத்திற்காக பலரிடம் கடன் வாங்கியதாகவும் தெரிகிறது. ஒரு வாரமாக வீட்டில் சமையல் செய்யாமல் ஓட்டலில் சாப்பாடு வாங்கி வந்து சாப்பிட்டு உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

வறுமை, கடன்தொல்லை

அவர்கள் பிணமாக கிடந்த அறையில் ஒரு பெட்ரோல் கேனும் கிடந்தது. வேலை இல்லாததாலும், வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாகவும் வெங்கடேசன் தனது குடும்பத்துடன் தீக்குளித்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆனால் பெட்ரோல் ஊற்றி அவர்கள் தீ வைத்துக்கொண்டபோது அலறல் சத்தம் கேட்கவில்லை. எனவே வெங்கடேசன், முதலில் மனைவி, மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு அவர்கள் மயங்கி கிடந்த போது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தானும் தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

காரணம் என்ன?

மலரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தினரிடம் இருந்து வெங்கடேசன் பிரிந்து தனியாக வசித்து வந்தார். வேலைக்கு செல்லாததால் கடன் தொல்லை அதிகமாகி அதில் மனமுடைந்து அவர்கள் தீக்குளித்து தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
சென்னை ஆயிரம் விளக்கு வாலஸ்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பா (வயது 26). இவர் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தனது தாயார் மற்றும் குடும்பத்தினருடன் வந்தார். அவரது உடல் முழுக்க மண்எண்ணெய் வாசனை வீசியது. தனது கணவர், மண்எண்ணெய் ஊற்றி, தன்னை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொல்ல முயன்றதாகவும், அவரிடம் இருந்து தப்பித்து வந்துள்ளதாகவும், கமிஷனர் அலுவலக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

புஷ்பா மேலும், அதிகாரிகளிடம் கூறியதாவது:-

எனக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது, குழந்தை இல்லை. எனது கணவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். தற்போது அவர் ஆந்திர பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். என்னை தினமும் அடித்து, உதைத்து துன்புறுத்தி வந்தார். ஏற்கனவே என்னை 2 முறை கொல்ல முயற்சித்துள்ளார். தற்போது 3-வது முறையாக என்னை தீர்த்துக்கட்ட முயன்றார். நல்லவேளையாக நான் தப்பித்துவிட்டேன். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அவர் கமிஷனர் அலுவலகத்தில் மனுவும் கொடுத்தார். அவரது மனு மீது உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது
On Thursday, September 18, 2014 by farook press in ,    
பல்லாவரம் அருகே கவுல்பஜாரில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.

நகை கொள்ளை

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள கவுல்பஜார், கலைஞர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் லியோ ராஜராஜன்(வயது 36). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவியும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் லியோ ராஜராஜன் புகார் செய்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையர்களை விரைந்து பிடிக்க சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

3 பேர் கைது

இதையடுத்து தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம், பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் மேற்பார்வையில் பல்லாவரம் உதவி கமிஷனர் கவிக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்கள் ஆலந்தூர் வ.உ.சி. நகரைச் சேர்ந்த நாகராஜ்(30), வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்ற அடையார் கார்த்திக்(25) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காஞ்சீபுரம் தெற்குபட்டு திருவிடந்தை பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆனந்த்பாபு(30)என்பவரையும் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் இருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட 58 பவுன் நகைகள் மற்றும் 1 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.

உரிமையாளரிடம் ஒப்படைப்பு

கொள்ளையர்கள் 3 பேரும், திருட்டு வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில்தான் சிறையில் இருந்து வெளியில் வந்தது விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளை அதன் உரிமையாளரான லியோ ராஜராஜனிடம் தென்சென்னை இணை கமிஷனர் திருஞானம் ஒப்படைத்தார்.

புகார் கொடுத்த 12 மணி நேரத்தில் கொள்ளையர்களை திறமையாக பிடித்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.

On Thursday, September 18, 2014 by farook press in ,    
பி.எஸ்.என்.எல். புதிய சிம்கார்டு வாங்கினால் உடனடியாக பேசும் வசதியை சென்னை டெலிபோன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
புதிய வசதி
பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ஏ.பாலசுப்பிரமணியன் நேற்று பி.எஸ்.என்.எல். புதிய சிம் கார்டு வாங்கினால் அதை உடனடியாக செயல்படுத்தும் வசதியை நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
சென்னை நகரில் மட்டும் 14 லட்சத்து 90 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல். சிம்கார்டு பயன்படுத்துகிறார்கள். 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல். இணைய தளவசதி பெற்றுள்ளனர். 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் பி.எஸ்.என்.எல்.லேண்ட் லைன் போன் வைத்துள்ளனர்.
பி.எஸ்.என்.எல். சிம்கார்டை ஏராளமான வாடிக்கையாளர்கள் வாங்கி பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் சிம் கார்டு வாங்கினால் உடடினயாக அந்த சிம்கார்டு செயல்பட (ஆக்டிவேசன்) தொடங்கும் வசதியை சென்னை டெலிபோன்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.
முதலில் www.cymn.bsnl.co.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களுக்கு தேவையான புதிய எண் கொண்ட பி.எஸ்.என்.எல் சிம்கார்டை தேர்ந்து எடுங்கள்.
சேவை மையம்
பின்னர் அதே ஆன்லைனில் உங்கள் முகவரி, அடையாள அட்டை போன்ற விவரங்களை விண்ணப்பத்தில் தெரிவியுங்கள். இவ்வாறு அதில் உங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்துவிட்டு அது கொடுக்கும் எண்ணை கொண்டு அருகில் உள்ள தொலைபேசி சேவை மையத்திற்கு செல்லுங்கள். சென்னையில் 50 சேவை மையங்கள் உள்ளன.
சேவை மையத்திற்கு சென்று, நீங்கள் ஆன்லைனில் சிம்கார்டை தேர்ந்து எடுத்ததற்கான பதிவு எண்ணை தெரிவியுங்கள். மேலும் சேவை மையத்தில் நீங்கள் இணைய தளத்தில் விண்ணப்பித்த அனைத்து அசல் சான்றிதழ்களையும் காண்பிக்க வேண்டும்.
அவ்வாறு செய்தால் அனைத்து ஆவணங்களும் உண்மை என்ற பட்சத்தில் உடனடியாக உங்கள் சிம் கார்டு செயல்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது முதன்மை பொதுமேலாளர்கள் கே.கே.வேலு, என்.பூங்குழலி, பொது மேலாளர் பி.ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
100 வருடம் தொலைபேசி
பின்னர் சென்னையில் 100 வருடமாக தொலைபேசி வைத்து பயன்படுத்தி வரும் ரமேஷ் சி.குமார் என்பவருக்கு பி.எஸ்.என்.எல். சென்னை டெலிபோன்ஸ் சார்பில் தலைமை பொது மேலாளர் ஏ.பாலசுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்து பரிசளித்து கவுரவப்படுத்தினார்.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
ஈரோட்டில் வியாபாரியை மிரட்டி ரூ.1¼ லட்சம் பறித்த போலி நிருபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பர்னஸ் ஆயில் மோசடி

கோவை மற்றும் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக பர்னஸ் ஆயில் பெங்களூரில் இருந்து டேங்கர் லாரிகளில் ஈரோடு மாவட்டம் நசியனூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது இந்த ஆயிலை டிரைவர்கள் சிலர் தங்கள் லாரிகளில் இருந்து திருடி குறைந்த விலைக்கு நசியனூர் மற்றும் பல பகுதிகளில் விற்பதாக கூறப்படுகிறது. லாரியில் இருந்து எடுக்கப்பட்ட பர்னஸ் ஆயிலுக்கு பதிலாக அதே அளவில் ஏதாவது பழைய ஆயிலை லாரியில் ஏற்கனவே உள்ள பர்னஸ் ஆயிலுடன் டிரைவர்கள் கலந்து விடுவார்கள்.

இந்த பர்னஸ் ஆயிலை பெறும் தொழிற்சாலை நிறுவனங்கள் அவ்வளவு எளிதில் இதை கண்டுபிடிக்க முடியாது. இதுபோன்ற மோசடி கடந்த பல மாதங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

பழைய இரும்பு வியாபாரி

ஈரோடு அருகே உள்ள நசியனூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 46). பழைய இரும்பு வியாபாரி. அந்த பகுதியில் கடை வைத்து உள்ளார்.

இந்தநிலையில் கோவையை சேர்ந்த ஜெகதீசன் என்ற டிரைவர் பெங்களூரில் இருந்து லாரியில் பர்னஸ் ஆயிலுடன் நேற்று முன்தினம் நசியனூர் வந்தார். பின்னர் ராமசாமியின் கடை முன்பு லாரியை நிறுத்தினார். பின்னர் அவர்கள் 2 பேரும் கடை முன்பு பேசிக்கொண்டிருந்தனர்.

மிரட்டல்

அப்போது 4 பேர் 2 மோட்டார்சைக்கிளில் ராமசாமியின் கடை முன்பு வந்து நின்றனர். பின்னர் அவர்கள், ‘தாங்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு மாத இதழ் பத்திரிகையில் வேலை செய்கிறோம். சென்னையை சேர்ந்த வேலு பிரபாகரன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர். கோபால் திருச்செங்கோடு தாலுகா போட்டோ கிராபர். சிவக்குமார் (42) ஈரோடு தாலுகா நிருபர் மற்றும் போட்டோ கிராபர். பிரகாஷ் பத்திரிகையின் ஈரோடு பகுதி முகவர்‘ என்று ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து ராமசாமியை பார்த்து ‘நீங்கள் பெங்களூரில் இருந்து வரும் லாரிகளில் பர்னஸ் ஆயிலை திருடி விற்பனை செய்து வருகிறீர்கள். இது சட்டப்படி குற்றம். நீங்கள் பர்னஸ் ஆயில் திருடுவது போன்ற படம் எடுத்து உள்ளோம். எனவே இந்த செய்தியை எங்கள் பத்திரிகையில் படத்துடன் வெளியிட்டுவிடுவோம். அப்படி செய்தி வெளிவந்தால் உங்கள் மானம், மரியாதை ஆகியவை போய்விடும். மேலும் போலீஸ், வழக்கு என்று அலையவேண்டி வரும்‘ என்றும் மிரட்டினர்.

ரூ.1¼ லட்சம் பறிப்பு

அவர்களின் மிரட்டலை கண்டு பயந்த ராமசாமி நான் லாரியில் இருந்து பர்னஸ் ஆயிலை திருடும் எந்த தவறுகளையும் செய்யவில்லை என்று கூறிப்பார்த்தார். ஆனால் அவர்கள் ராமசாமியை தொடர்ந்து மிரட்டினர். அதுமட்டுமின்றி இந்த செய்தி எங்கள் பத்திரிகையில் வராமல் இருக்க வேண்டும் என்றால் எங்களுக்கு ஆள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கூறினர்.

அவர்களின் மிரட்டலில் பயந்து போன ராமசாமி தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து ரூ.1¼ லட்சத்தை வாங்கி அந்த 4 பேரிடம் கொடுத்தார்.

லாரி உரிமையாளரிடம்...

இந்த பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் சட்டென்று அங்கு நின்று கொண்டிருந்த லாரியில் ஏறி பர்னஸ் ஆயில் கொண்டு வருவதற்கான அனுமதி கடிதம் மற்றும் லாரியின் உரிமையாளரான கோவையை சேர்ந்த செந்தில் என்பவரின் செல்போன் எண்ணையும் எடுத்தனர்.

நீங்கள் (ராமசாமி) பணம் தராவிட்டால் என்ன. நீங்கள் கொடுக்க வேண்டிய மீதி பணத்தை லாரி உரிமையாளரிடம் (அதாவது செந்திலிடம்) நாங்கள் வாங்கி விடுவோம் என்றனர். அப்படியும் லாரி உரிமையாளர் கொடுக்காவிட்டால் இந்த செய்தியை பத்திரிகையில் வெளியிடுவோம். இதனால் அவருடைய பர்னஸ் ஆயில் ஒப்பந்தம் ரத்தாவதுடன், லாரியையே பறிமுதல் செய்யும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறிவிட்டு அவர்கள் அனைவரும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

போலீசில் புகார்

இதுகுறித்து ராமசாமி சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் தேடி வந்தார்.

இந்தநிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் நிருபரும், போட்டோ கிராபருமான சிவக்குமார் நிற்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலி நிருபர் கைது

தகவல் அறிந்ததும் போலீசார் வீரப்பன்சத்திரம் விரைந்து சென்று அங்கு மாரியம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்த சிவக்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம், மோட்டார்சைக்கிள், பத்திரிகை அடையாள அட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக வேலு பிரபாகரன், கோபால், பிரகாஷ் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலி நிருபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் ஒரு போலி நிருபர் கைது செய்யப்பட்டு உள்ள சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
On Thursday, September 18, 2014 by farook press in ,    
பெரியார் பிறந்தநாளையொட்டி நேற்று அவரது சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.

பகுத்தறிவு கொள்கைகளை பரப்பிய ஈ.வெ.ரா.பெரியாரின் பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் எங்கும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது உருவச்சிலைகளுக்கும், படங்களுக்கும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாகர்கோவிலில் பெரியார் சிலை ஒழுகினசேரி சந்திப்பில் உள்ளது.

இந்த சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

நிர்வாகிகள்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் சதாசிவம், பொருளாளர் வக்கீல் ஞானசேகர், ஜஸ்டின்செல்வராஜ், துணைச்செயலாளர் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன், என்ஜினீயர் லட்சுமணன், சிவசெல்வராஜன், அணி செயலாளர்கள் எஸ்.ஏ.அசோகன், டி.மனோகரன், டாரதி சாம்சன், முட்டம் லாரன்ஸ், சேவியர்மனோகரன், வக்கீல் பாலஜனாதிபதி, நகர செயலாளர் சந்திரன், கிருஷ்ணகுமார், கே.சி.யு.மணி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சாரதாமணி, தலைமைக்கழக பேச்சாளர் நீலகண்டன், வக்கீல் சுந்தரம், இரணியல் லட்சுமணன், கோட்டார் கிருஷ்ணன், கே.பி.எஸ்.பிரான்சிஸ், வி.கே.மகாதேவன், பொன்.சுந்தர்நாத், பூங்காகண்ணன், திருமலைஅறிவழகன், வேலாயுதம், இ.என்.சங்கர், லதாராமச்சந்திரன், ஆக்கோ ஆறுமுகம், கவுன்சிலர்கள் ஸ்ரீமணிகண்டன், ஜே.ஜே.சந்திரன், விக்ரமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க.-தி.க.

தி.மு.க. சார்பில் தோவாளை ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற மாலை அணிவிப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முருகபதி தலைமை தாங்கினார். செயலாளர் தமிழரசன், துணைச்செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தயாளன், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கரநாராயணன், மகளிரணி மண்டல அமைப்பாளர் மணிமேகலை மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
On Thursday, September 18, 2014 by farook press in ,    
திருவனந்தபுரத்திற்கு வந்த விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கன்னியாகுமரியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
தவறாக நடக்க முயற்சி
தோகாவில் இருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் திருவனந்தபுரம் நோக்கி நேற்று காலையில் வந்து கொண்டு இருந்தது. இந்த விமானத்தில் கன்னியாகுமரியை சேர்ந்த சில்வா மைக்கிள்(வயது 40) என்பவர் பயணம் செய்தார். இந்த நிலையில் அந்த ஆசாமி விமான பயணத்தின் போது பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதோடு, ஆபாச வார்த்தைகளை கூறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானம் வந்து இறங்கியதும், அந்த பணிப்பெண் நிலைய அதிகாரிகளிடம் புகார் செய்தார். விமான பணிப்பெண்ணின் புகாரை தொடர்ந்து சில்வா மைக்கிளிடம் விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
நீதிமன்றத்தில் ஆஜர்
அதனைத் தொடர்ந்து சில்வா மைக்கிளை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.