Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், வேளாண் இணை இயக்குனர் சந்தானகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அல்தாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:–
பாலசுப்பிரமணியம் (உழவர் உழைப்பாளர் கட்சி):– அருள்புரத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உறுப்பினர்களாக உள்ள சாயப்பட்டறையாளர்கள் சாயக்கழிவுநீரை முறைகேடாக நிலத்தில் பாய்ச்சுகிறார்கள். கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் வழியாக சாய நீரை பூமிக்குள் இறக்குவதால் நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது.
கரைப்புதூர், சுக்கம்பாளையம், நொச்சிப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் கறுப்பு நிறமாக மாறி விட்டது. கால்நடைகளுக்கு கூட தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சாய திடக்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈஸ்வரமூர்த்தி(உழவர் உழைப்பாளர் கட்சி):–
பாசன சபையின் பெயரில் வங்கியில் இருக்கும் பணத்துக்கான வட்டியை அமராவதி கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க விவசாயிகள் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.
வாய்க்கால் பராமரிப்பு பணிகளை செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் விடப்படுகிறது. இந்த பணியை கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கே வழங்க வேண்டும். தாராபுரம் பகுதியில் குறுகிய ரக விதை நெல் மானியத்துடன் வழங்க தயாராக இருந்தது. ஆனால் மத்திய அரசின் மானியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறி விதை நெல் விலை அதிகமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரக நெல் 115 முதல் 120 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்து விடும். தற்போது போதுமான தண்ணீர் இருப்பதால் குறுகிய கால நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால் நெல்லுக் கான மானியத்தை விரைந்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவிந்தாபுரம், முத்தூர், சத்திரம் பகுதியில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது. அதனால் யூரியா உரத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் தனியார் உரக்கடை உரிமையாளர்கள், யூரியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர் ஜி.கோவிந்தராஜ்:– கரைப்புதூர் பகுதியில் உள்ள சாயக்கழிவுநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும். நெல்லுக்கு மானிய விலை வழங்குவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கேட்டு அறிவிக்கப்படும். யூரியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது ஆர்.டி.ஓ. மூலம் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
On Monday, September 29, 2014 by farook press in ,    
வெள்ளகோவில், செப். 29–
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள வெள்ளப்பாறை என்ற இடத்தில் காசுவைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருப்பூர் மாவட்ட சப்–இன்ஸ்பெக்டராக (தனிப்பிரிவு) பணியாற்றிய பஞ்சலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு காசுவைத்து சூதாடிக் கொண்டிருந்த 54 பேரை கைது செய்தனர். ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு காங்கயம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசா ரணைக்கு ஆஜராகுமாறு பஞ்சலிங்கத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு சாட்சி பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி மோகனவள்ளி உத்தரவிட்டார். பஞ்சலிங்கம் தற்போது கோவை பி–1 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள நிப்ட் டீ பேஷன் பின்னலாடை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதன்மை ஆலோசகரும், இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவருமான ராஜா சண்முகம் தலைமை தாங்கினார்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாயி 130 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை பட்டமும், 35 மாணவ, மாணவிகளுக்கு முதுகலைப்பட்டமும் வழங்கினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:–
உலகில் ஆடை உற்பத்தி தொழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் கடுமையான உழைப்பாளிகளாக விளங்குவதால் பின்னலாடை தொழில் துறையில் திருப்பூர் நகரம் தனித்தன்மை பெற்று விளங்குகிறது.
ஆடை வடிவமைப்பு துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டு மாணவ, மாணவிகள் இதில் அதிகளவில் பட்டங்களை பெற்று வருகின்றனர்.
நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய பாணி ஆடைகளை வடிவமைப்பில் ஆர்வமும், விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. ஆனால் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மீறாத வகையில் ஆடைகளை வடிவமைப்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆடைகள் தயாரிக்கப்படவேண்டும். ஆடைகளே கலாசாரத்தின் எதிரொலி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆடை தயாரிப்பாளர்களுக்கும், வடிவமைப்பாளர்களுக்கும் அதிக பொறுப்புணர்வும், சமூக உணர்வும் வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் வளாகத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் முழு உருவ வெண்கல சிலையும், மறைந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் மார்பளவு வெண்கல சிலையும் திறக்கப்பட உள்ளது.
இதையொட்டி, விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது, அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை தீர்ப்பாக தான் பார்க்க வேண்டும். அதில் விமர்சனம் செய்ய ஒன்றுமில்லை. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட வேண்டியது காவல்துறையினர், அரசு அதிகாரிகளின் முக்கிய கடமையாகும்.

வன்முறையில் ஈடுபடும் வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி சாதாரண மக்கள் எந்தவித அச்சமின்றி இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:–
வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்திருக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கையும், அப்பாவி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அரசு – தனியார் சொத்துக்கள் பெர்ருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
பூந்தமல்லியிலிருந்து வந்த அரசுப் பேரூந்தை காஞ்சிபுரத்தில் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க.வினர் அப்பேரூந்தை தீயிட்டு எரித்தனர். இதே நிகழ்வில் ஒரு பேரூந்தும், சில இரு சக்கர ஊர்திகளும் எரிக்கப்பட்டன. விளாத்திக்குளத்தில் மற்றொரு பேரூந்து தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறையில் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் நேற்று இன்னொரு பேரூந்து தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர 50க்கும் மேற்பட்ட அரசு பேரூந்துகளும், நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. கடைகள் மீது அ.தி.மு.க.வினர் கல்வீசித் தாக்கியதில் மிகப் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க.வின் காட்டு மிராண்டித் தனமான தாக்குதலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களும், அலுவலகங்களும் தப்பவில்லை. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகி விட்ட நிலையில் இன்னும் வன்முறை தொடர்கிறது. அ.தி. மு.க.வினரின் வன்முறையை காவல்துறை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆளுனரும், மத்திய அரசும் தலையிட்டு தமிழகத்தில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
பொதுச் சொத்துக்களுக்கு அரசியல் கட்சிகள் சேதம் ஏற்படுத்தினால் அதை எவ்வாறு வசூலிப்பது என்பதற்கான வழிகாட்டுதல்கள் 1992ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொதுச் சொத்து (சேதம் மற்றும் இழப்பைத் தடுத்தல்) சட்டத்தில் தெளிவாக உள்ளன. இதற்காக கடந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான அமைப்பும் இப்போது செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் இழப்பீட்டை வசூலிப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறைகள் தொடங்க வேண்டும்.
அ.தி.மு.க.வினரால் எரிக்கப்பட்ட எரிக்கப்பட்ட பேரூந்துகள், சேதப்படுத்தப்பட்ட பேரூந்துகள் ஆகியவற்றுக்கான இழப்பீடு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கருதப்படுகிறது. வன்முறையால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக மதுக்கடைகள், திரையரங்குகள் ஆகியவை செயல்படவில்லை. தனியார் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. இதனால் ஒரு நாளில் ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இவை தவிர, தனியார் சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதத்தின் மதிப்பு பல கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் அ.தி. மு.க.வினரின் வன்முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இன்று புதிதாக பதவியேற்கவிருக்கும் அரசுக்கு தமிழக ஆளுனர் ஆணையிட வேண்டும்.
1) அ.தி.மு.க.வினரின் வன்முறையால் அரசு மதுக்கடைகள் மூன்று நாட்களாக மூடப்பட்டிருப்பதால் குறைந்தது ரூ.210 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட இழப்பீட்டையும் துல்லியமாக கணக்கிட்டு அ.தி.மு.க. தலைமையிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2) அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளையும், வணிகம் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பீட்டையும் கணக்கிட்டு, அதற்குக் காரணமான அக்கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் மீது வழக்குத் தொடர்ந்து வசூலிக்க வேண்டும்.
3) பேரூந்து எரிப்பு, உடைப்பு, கடைகள் சூறை உள்ளிட்ட வன்முறைகளில் ஈடுபட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
4) கடந்த ஆண்டில் ஜெயலலிதாவே கூறியவாறு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும், சட்டம்ஒழுங்கை சீரழிக்கும் வண்ணமும், வன்முறை செயல்களிலும் ஈடுபட்ட அ.தி.மு.க.வை தடை செய்யவும் அரசு தயங்கக்கூடாது.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ஜெயலலிதா ஜெயிலில் அடைக்கப்பட்டிருப்பது அ.தி.மு. க.வினரை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி உள்ளது. அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் இன்று கருப்பு சட்டை அணிந்தனர். 

நேற்று ஏராளமான பெண்கள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இன்று தென்சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் எம்.எல்.ஏ., ஆயிரம்விளக்கு தொகுதி செயலாளர் டி.சிவராஜ், பகுதி செயலாளர்கள் ஏ.இ.வெங்கடேசன், பாபு, ஏழுமலை, மாவட்ட இளைஞ ரணி துணை தலைவர் என்.தயாளன், கவுன்சிலர்கள் நுங்கை மாறன், சின்னையன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து நாடு முழுவதும் விவாதம் நடந்து வருகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம். அதன்மூலம் மறுதீர்ப்பு பெற வாய்ப்பு உள்ளது.
எனவே இந்த தீர்ப்பு குறித்து புதிய கருத்து கூற விரும்பவில்லை. இந்த தண்டனை மூலம் அவர் அரசியலில் 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தண்டனை மூலம் கர்நாடகா, தமிழக மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது. ஜெயலலிதா மீது வழக்கு போட்டது கர்நாடக அரசோ, கர்நாடக மக்களோ அல்ல. சுப்பிரமணியசாமி.
தீர்ப்பு கூறியதுதான் கர்நாடக நீதிபதி. அ.தி.மு.க.வினர் தலைமை மீது கொண்ட ஈடுபாட்டால் தீர்ப்பை விமர்சிக்கிறார்கள். ஆனால் நீதிபதி தீர்ப்பை விமர்சிக்க கூடாது. புதியதாக பொறுப்பு ஏற்கும் முதல்–அமைச்சர் தமிழகத்தில் உள்ள வறட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் மார்ச் மாதம் 25 முதல் 29–ந்தேதி வரை நடக்கிறது.
வருகிற 6–ந்தேதி விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற இருந்த மறியல் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அக்டோபர் 16–ந்தேதி நடைபெறுகிறது.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தூத்துக்குடியில் தீயனைப்பு நிலையம் அருகில் உள்ள காமராஜரின் மார்பளவு சிலையை நேற்று இரவு வன்முறை கும்பல் அடித்து நொறுக்கி காமராஜருக்கு பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். இதனை எங்களது பெருந்தலைவர் மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
காவல் துறையினர் இந்த கும்பலை உடனடியாக கண்டு பிடித்து கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதப்படுத்தப்பட்டுள்ள காமராஜரின் சிலையை அகற்றி விட்டு அதே இடத்தில் முழு அளவு வெண்கல சிலையை அரசு வைத்து தர வேண்டும். தவறினால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
திராவிடக்கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் படி தலா 4 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டு, நூறு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாலும், இப்படி தண்டனை பெற்றதால் அவர்கள் வகிக்கும் பதவிகள் உடனடியாக இழப்புக்கு உள்ளாகும். இது தண்டனைக் காலத்திற்கு பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்கத் தடை என்று உச்சநீதிமன்றம் 2013ல் வழங்கிய தீர்ப்பின் காரணமாக ஏற்பட்ட சட்டப்படியான விளைவு ஆகும்.
இதற்கு முன் நாடாளு மன்றத்தில் பதவிகளில் இருந்த நான்கு பேர்கள் லாலுபிரசாத் உட்பட இத்தீர்ப்பின் அடிப்படையில் பதவி இழப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதற்கு முன்பு 2013க்கு முன்பு இருந்த நிலை வேறு. முதல் அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படி தண்டனை பெற்று உடனடி பதவி இழப்புக்கு ஆளாவது இதுவே இச்சட்டத்தின் கீழ் முதல் நிகழ்வு இந்திய அரசியலில்.
அ.தி.மு.க. போதிய பெரும்பான்மையும், கட்டுக் கோப்புடனும் உள்ள ஆளுங்கட்சியாக இருக்கிற காரணத்தாலும் அ.தி.மு.க.வின் ஆற்றல், அதிகாரம் மிக்க தலைவராக பொதுச் செயலாளர் என்ற பொறுப்பில் ஜெயலலிதா இருக்கின்ற காரணத்தாலும் அவரது ஆணைப்படி நேற்று அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, நிதியமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை சட்டமன்ற கட்சித் தலைவராக ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளனர். அவர் தலைமையில் புதிய அமைச்சரவை செயல்படும் என்பதற்கு தமிழக ஆளூநர் ரோசய்யாவை சந்தித்து, அவரும் சட்டப்படி அழைப்பு விடுத்து, இன்று அமைச்சர்கள் பதவியேற்று, அரசியல் சட்டப்படி கடமையாற்ற விருக்கின்றனர்.
அமைதியும், அடக்கமும் நிறைந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அவர் ஏற்கனவே ஒரு முறை இப்பதவியில் அமர்ந்தப்பட்டும் உள்ளார். அவரது தொடர் விசுவாசத்திற்கு அத்தலைமை தந்த அங்கீகாரப் பரிசு இது. ஜனநாயகத்தில் ஏதுவும் நிரந்தரமோ, மாறாததோ அல்ல.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மீண்டும் இரண்டாவது முறையாக அ.தி.மு.க. ஆட்சியில் முதல்வர் ஆவது சமூக நீதிக் கண்ணோட்டத்தில் பெரிதும் வரவேற்கத்தக்கது. அவரது தலைமையில் அமைந்து புதிய அரசு அனைத்து மக்கள் நலத்திலும் அக்கறை காட்டி, எதிர்க்கட்சிகளையும் மதித்து தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி, நீதியான ஆட்சி என்ற பெயரை எடுத்து வரலாறு படைக்க வாழ்த்துகிறோம்.
இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.