Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
அ.தி.மு.க.பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு கடந்த 27–ந்தேதி பெங்களூர் கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்ததன் எதிரொலியாக தாராபுரத்தில் கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்தியது தொடர்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் மோதிக்கொண்டனர்.
அப்போது கார் மற்றும் சில மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதுதொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தியதாக அ.தி.மு.க.வை சேர்ந்த சிவசங்கர், மகாமுனி, பெருமாள்சாமி ஆகிய 3 பேரை நேற்று தாராபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
சென்னை, 
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் நேற்று கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள நகர் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஜோனாஷா டி சன்னா (வயது 19) சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை தொலைக்காட்சி மூலம் பார்த்து மிகுந்த வேதனை அடைந்து, தனது வீட்டு சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்போல, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள வங்கி நாராயணபுரத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி நாகலட்சுமி (17) தனது உடலில் தானே மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
சென்னை நந்தனத்தில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் நேற்று ஜெயலலிதா மீதான தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சின்னம் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் ஜெயலலிதாவை விடுதலை செய் என்று கோஷம் எழுப்பியதுடன், மத்திய அரசு மற்றும் நீதித்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஆய்வு மையத்தின் மாணவர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை முதலே வகுப்புகளுக்கு செல்லாமல் மாணவ-மாணவிகள் ஆய்வு மையத்தின் வெளியே அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களது ஆராய்ச்சி மையத்தின் தரத்தை உயர்த்தியதில் முதல்-அமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவின் பங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் ஊக்கப்படுத்தி வருகிறார். அவர் கைது செய்யப்பட்டது மாணவ-மாணவிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை கண்டிக்கும் வகையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறோம்’’, என்றனர். இந்த போராட்டத்தில் 80-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னதாக நேற்று மதியம் 12 மணி அளவில் கல்லூரி நுழைவு வாயிலில் மாணவ, மாணவிகள் திரண்டனர். அங்கு ஜெயலலிதாவை விடுவிக்கக்கோரி கோஷம் எழுப்பினர்.
கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மடிகணினி, கல்வி உதவித்தொகை, புத்தகப்பை, பாடப்புத்தகங்கள், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை வழங்கிய ஜெயலலிதாவை விடுவிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரி மாணவ, மாணவிகள் 1,800 பேரும், குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி மாணவிகள் 3,925 பேரும், அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 1,490 பேரும் வகுப்புகளை புறக்கணித்து ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையை அடுத்த மேலூரில் உள்ள அரசினர் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புக்கு செல்லாமல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள்.
On Tuesday, September 30, 2014 by farook press in ,    
தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பெங்களூர் வந்தார். அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் சசிகலா, இளவரசியும் சிறையில் உள்ளனர்.
ஜெயலலிதாவை பார்ப்பதற்காக அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மேயர்கள் மற்றும் பல்வேறு பதவிகளில் உள்ளவர்கள், நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்து வருகிறார்கள். 
இந்த நிலையில் தமிழக முதல்–அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நேற்று பதவி ஏற்றார். அதைத்தொடர்ந்து அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். அவருடன் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சில அமைச்சர்களும் வந்தனர். அவர்கள் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் மாலை 6 மணிக்கு மேல் ஜெயிலில் உள்ள கைதிகளை சந்திக்க அனுமதி இல்லை.


இதனால் அவர்கள் நேற்று இரவு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கினர். பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுகிறார்கள். அப்போது தனது தலைமையில் புதிய அரசு அமைந்து உள்ளது குறித்து விளக்கி கூறுகிறார். தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகையையொட்டி பெங்களூர் நகர போலீசார் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Monday, September 29, 2014

On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்குபாளையம் முத்து நகரைச் சேர்ந்தவர் சின்னான்(வயது 51). இவர் பல்லடம் நகராட்சியில் குடிநீர் வினியோக ப்பாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று மாலை 4.30 மணி அளவில் பல்லடம்–மங்கலம் சாலையில் உள்ள கல்லம்பாளையம் பகுதியில் குடிநீர் திறந்து விட்டார். பின்னர் அருகில் உள்ள குறிஞ்சிநகர் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கல்லம்பாளையத்தில் இருந்து பல்லடம் நோக்கி பாரம் ஏற்றி வந்த வேன் எதிர் பாராதவிதமாக சின்னான் ஓட்டிச்சென்ற மொபட் மீது மோதியது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த சின்னான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவரை கைது செய்தனர். விபத்தில் பலியான சின்னானுக்கு மனைவி, ஒரு மகள் மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இன்று உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து இன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் உண்ணாவிரதம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் நகராட்சி துணை தலைவர் விஜயகுமார், அவைத்தலைவர் வெங்கடாச்சலம், கவுன்சில ர்கள் ஜேம்ஸ்ராஜா, வசந்த், நகர மீனவர் அணி செயலாளர் செல்வமுரளி, குரு, கிட்டான் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் திருப்பூர் ரெயில் நிலையம் அருகில், துணை மேயர் சு.குணசேகரன் தலைமையில் 1000–க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், முத்துசாமி, கிருத்திகா சோமசுந்தரம், எம்..ஜி.ஆர்., மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், எஸ்.ஆர்.ஜெயக்குமார், தம்பி மனோகரன், இணை செயலாளர் சி.பி.வசந்தா மணி, மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி, மீனவரணி செயலாளர் தங்கமுத்து, சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ்,
வக்கீல் அணி செயலாளர் கே.என்.சுப்பிரமணி, சதீஷ், பி.கே.முத்து, வி.கே.பி.மணி, வே.அய்யாசாமி, வே.கண்ணப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாகரன், அன்னபூரணி, கோமதி,. கவுன்சிலர்கள் முருகசாமி, கணேஷ், பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, கீதா, சந்திரசேகர், கலைமகள் கோபால், சண்முகசுந்தரம், சுபா மோகன், ஆனந்தன், பேபி தர்மலிங்கம், கேபிள் சிவா, பிரியா சக்திவேல், சபரி, விஜயகுமார், வேலுசாமி, அமுதா வேலுமணி, நகர இளைஞரணி கண்ணபிரான், ஹரிஹரசுதன், உஷா ரவிக்குமார், அட்லஸ் லோகநாதன், எஸ்.பி.என்.பழனிசாமி, ஏ.எஸ்.கண்ணன், ராஜசேகரன், பொன்னுசாமி, சரவணன், நீதி ராஜன், தேவராஜ், கேபிள் பாலு,
பாஸ் என்கிற பாஸ்கரன், ருக்குமணி, சத்யா, சரஸ்வதி, முத்துலட்சுமி, வசந்தி, செல்வம் தங்கவேல், கருத்தம்மா, பனியன் ருக்குமணி, மல்லிகா, சாரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து இன்று (திங்கட் கிழமை) காலை 9 மணியளவில் அவினாசி புதிய பஸ் நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர் சுப்ரமணியம் தலைமையில் 150–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேரூராட்சி தலைவர் ஜெகதாம்பாள் ராஜசேகர், நகர செயலாளர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், வேளாண் இணை இயக்குனர் சந்தானகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அல்தாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் விவரம் வருமாறு:–
பாலசுப்பிரமணியம் (உழவர் உழைப்பாளர் கட்சி):– அருள்புரத்தில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உறுப்பினர்களாக உள்ள சாயப்பட்டறையாளர்கள் சாயக்கழிவுநீரை முறைகேடாக நிலத்தில் பாய்ச்சுகிறார்கள். கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் வழியாக சாய நீரை பூமிக்குள் இறக்குவதால் நிலத்தடி நீர் மாசுபட்டு வருகிறது.
கரைப்புதூர், சுக்கம்பாளையம், நொச்சிப்பாளையம் சுற்றுப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் கறுப்பு நிறமாக மாறி விட்டது. கால்நடைகளுக்கு கூட தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே சாய திடக்கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈஸ்வரமூர்த்தி(உழவர் உழைப்பாளர் கட்சி):–
பாசன சபையின் பெயரில் வங்கியில் இருக்கும் பணத்துக்கான வட்டியை அமராவதி கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்க விவசாயிகள் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.
வாய்க்கால் பராமரிப்பு பணிகளை செய்ய தனியாருக்கு ஒப்பந்தம் விடப்படுகிறது. இந்த பணியை கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்துக்கே வழங்க வேண்டும். தாராபுரம் பகுதியில் குறுகிய ரக விதை நெல் மானியத்துடன் வழங்க தயாராக இருந்தது. ஆனால் மத்திய அரசின் மானியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறி விதை நெல் விலை அதிகமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரக நெல் 115 முதல் 120 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்து விடும். தற்போது போதுமான தண்ணீர் இருப்பதால் குறுகிய கால நெல் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால் நெல்லுக் கான மானியத்தை விரைந்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவிந்தாபுரம், முத்தூர், சத்திரம் பகுதியில் மக்காச்சோளம் அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது. அதனால் யூரியா உரத்தின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் தனியார் உரக்கடை உரிமையாளர்கள், யூரியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர் ஜி.கோவிந்தராஜ்:– கரைப்புதூர் பகுதியில் உள்ள சாயக்கழிவுநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும். நெல்லுக்கு மானிய விலை வழங்குவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கேட்டு அறிவிக்கப்படும். யூரியா உரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் மீது ஆர்.டி.ஓ. மூலம் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
On Monday, September 29, 2014 by farook press in ,    
வெள்ளகோவில், செப். 29–
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகேயுள்ள வெள்ளப்பாறை என்ற இடத்தில் காசுவைத்து சூதாட்டம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருப்பூர் மாவட்ட சப்–இன்ஸ்பெக்டராக (தனிப்பிரிவு) பணியாற்றிய பஞ்சலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு காசுவைத்து சூதாடிக் கொண்டிருந்த 54 பேரை கைது செய்தனர். ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு காங்கயம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசா ரணைக்கு ஆஜராகுமாறு பஞ்சலிங்கத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு சாட்சி பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி மோகனவள்ளி உத்தரவிட்டார். பஞ்சலிங்கம் தற்போது கோவை பி–1 காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் அமைந்துள்ள நிப்ட் டீ பேஷன் பின்னலாடை கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் முதன்மை ஆலோசகரும், இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட தலைவருமான ராஜா சண்முகம் தலைமை தாங்கினார்.
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாயி 130 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை பட்டமும், 35 மாணவ, மாணவிகளுக்கு முதுகலைப்பட்டமும் வழங்கினார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:–
உலகில் ஆடை உற்பத்தி தொழில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் கடுமையான உழைப்பாளிகளாக விளங்குவதால் பின்னலாடை தொழில் துறையில் திருப்பூர் நகரம் தனித்தன்மை பெற்று விளங்குகிறது.
ஆடை வடிவமைப்பு துறையில் அதிக ஆர்வம் ஏற்பட்டு மாணவ, மாணவிகள் இதில் அதிகளவில் பட்டங்களை பெற்று வருகின்றனர்.
நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் புதிய பாணி ஆடைகளை வடிவமைப்பில் ஆர்வமும், விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது. ஆனால் கலாசாரத்தையும், பண்பாட்டையும் மீறாத வகையில் ஆடைகளை வடிவமைப்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆடைகள் தயாரிக்கப்படவேண்டும். ஆடைகளே கலாசாரத்தின் எதிரொலி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஆடை தயாரிப்பாளர்களுக்கும், வடிவமைப்பாளர்களுக்கும் அதிக பொறுப்புணர்வும், சமூக உணர்வும் வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
On Monday, September 29, 2014 by farook press in ,    
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் வளாகத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் முழு உருவ வெண்கல சிலையும், மறைந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் மார்பளவு வெண்கல சிலையும் திறக்கப்பட உள்ளது.
இதையொட்டி, விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேற்று பார்வையிட்டார்.
அப்போது, அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை தீர்ப்பாக தான் பார்க்க வேண்டும். அதில் விமர்சனம் செய்ய ஒன்றுமில்லை. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் சட்டம்-ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட வேண்டியது காவல்துறையினர், அரசு அதிகாரிகளின் முக்கிய கடமையாகும்.

வன்முறையில் ஈடுபடும் வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி சாதாரண மக்கள் எந்தவித அச்சமின்றி இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.