Saturday, September 27, 2014

On Saturday, September 27, 2014 by farook press in ,    
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பாரப்பன அக்ராஹரம் கோர்ட் வளாகத்திற்கு முன் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க,., தொண்டர்கள் குவிந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவின் கார் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் அவரை வாழ்த்தி அவர்கள் கோஷமிட்டனர்

On Saturday, September 27, 2014 by farook press in ,    
சென்னை : பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடைபெறும் சொத்து குவிப்பு வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதால், வழக்கில் நேரில் ஆஜராக தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு செல்லும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வழக்கு நடைபெறும் நீதிமன்ற வளாகத்திற்கு செல்ல உள்ளார்.
On Saturday, September 27, 2014 by farook press in ,    
பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ள பரப்பன அக்ரஹாரத்திற்கு அருகில், ஏராளமானோர் குவிந்துள்ளனர். ஒசா ரோடு சந்திப்பில் அருகே தடுப்புக்களை தாண்டி, கோர்ட் வளாகம் அருகே சிலர் செல்ல முயன்றனர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
On Saturday, September 27, 2014 by farook press in ,    
திருப்பூர் : "மக்காச்சோளத்துக்கு யூரியா தேவைப்படும் நேரத்தில், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலை கடுமையாக உயர்த்தப்படுகிறது,' என, குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். வேளாண் துறை இணை இயக்குனர் சந்தான கிருஷ்ணன், நேர்முக உதவியாளர் அல்தாப் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க பிரதிநிதிகள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
அவர்கள் பேசியதாவது:
துரைசாமி, தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் : உடுமலை உதவி வேளாண் அலுவலக வளாகத்தில், வீணாகக் கிடக்கும் நான்கு எக்டர் நிலத்தில், கிடங்கு அமைக்க வேண்டும். பி.ஏ.பி., தண்ணீர் திறப்பில், தலா 3.5 சுற்று என்ற முடிவை, ஐந்து சுற்றுகளாக மாற்றி, கூடுதல் தண்ணீர் வழங்க வேண்டும்.
பாலசுப்ரமணியம், உழவர் <உழைப்பாளர் கட்சி மாநில நிர்வாகி: அருள்புரம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு உட்பட்ட சாய ஆலைகள், கழிவுநீரை நிலத்துக்குள் இறக்குவதால், அமராவதிபாளையம், அவரப்பாளையம், வீரபாண்டி, நொச்சிபாளையம் பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்வரமூர்த்தி, தாராபுரம் பாசன சபை சங்க தலைவர்: தாராபுரம் தாலுகாவில் உள்ள நான்கு வாய்க்கால்களை, ஒப்பந்ததாரர்கள் மூலம் பராமரிப்பதற்கு பதிலாக, பாசன சங்கத்துக்கு நிதி ஒதுக்கி, அதன் மூலம் பராமரிக்க வேண்டும். நெல்லுக்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. மக்காச்சோளத்துக்கு யூரியா உரம் தேவைப்படும் நேரத்தில், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, உரம் விலை உயர்த்தப்பட்டுள்ளது; விலை பட்டியலும் வைக்கப்படுவதில்லை.
லோகநாதன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க அமைப்பாளர் : ஆவின் பால் விலை கட்டுப்படியாகாமல் உள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்கின்றனர். மாவட்டத்தில், 2.40 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் கொள்முதல், 1.60 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. மாட்டுப்
பாலுக்கு லிட்டருக்கு ஐந்து ரூபாய், எருமைப்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த வேண்டும்.
பழனிசாமி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர்: திருப்பூர் தெற்கு உழவர் சந்தை அருகே, ரோட்டில் வியாபாரிகள் கடை வைக்கின்றனர்; ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. விவசாயிகள் பாதிக்காத வகையில், உழவர் சந்தையை முறைப்படுத்த வேண்டும்.
பரமசிவம், உடுமலை
விவசாயி: தோட்டக்கலைத்துறை திட்டங்கள் குறித்து, கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கூடுதல் மானியம் பெற்று, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.வெங்கடாசலம், பொங்கலூர் விவசாயி: வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டு வராத நிலையில், கடன் வசூலிப்பில் வங்கிகள் நெருக்கடி கொடுக்கின்றன. வங்கி நடவடிக்கைகளை தளர்த்த வேண்டும்.ரமேஷ்குமார், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விவசாயிகள் நிலத்தடி நீர் பாதுகாப்பு அமைப்பு
செயலாளர் : திருப்பூர் விவசாயிகள் பாதிக்கும் வகையில் ஓடைகள், கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில், சாயக்கழிவுகளை கொட்டுவதால், நிலத்தடி நீர் மாசுபடு
கிறது. இதை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொன்னுசாமி, பி.ஏ.பி., மங்கலம் பாசன சபையின் முன்னாள் தலைவர்: ஆண்டிபாளையம் மின் அலுவலகம் அருகே உள்ள கோழிப்பண்ணை, குள்ளேகவுண்டம்பாளையம், குளத்துப்புதூர் பகுதிகள், இடுவம்பாளையம் மின் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. இடையூறு ஏற்படுவதால், ஆண்டிபாளையம் அலுவலகத்துக்கே மாற்ற வேண்டும்.இவ்வாறு, விவசாயிகளின் பிரதிநிதிகள் பேசினர்.

On Saturday, September 27, 2014 by farook press in ,    
தாராபுரத்தில் வங்கியில் போலி நகை கொடுத்து ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

நகைக்கடன் 


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதுபஸ்நிலையம் அருகே நாச்சிமுத்துபுதூரில் வங்கி ஒன்றில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கடத்தூர் முத்துநாயக்கன்பட்டி குருவன்வலசை சேர்ந்த நாராயணசாமியின் மகன் முத்துசாமி (வயது 34) என்பவர் நகைக்கடன் வாங்க வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த அலுவலரிடம் தான் கொண்டு வந்த நகையை காட்டி, அதற்கு ஈடுடாக ரூ.4 லட்சம் கடன் வேண்டும் என்று முத்துசாமி கேட்டுள்ளார்.


உடனே வங்கி அலுவலர்கள் முத்துசாமி கொண்டு வந்த நகையை வாங்கி அது அசல் நகைதானா? என பரிசோதித்து பார்த்தனர். அப்போது அவர் கொடுத்த நகை அனைத்தும் 22 காரட் தங்கம் என தெரியவந்தது. மேலும் முத்துசாமி கொண்டு வந்த 186 கிராம் நகையின் எடைக்கு ரூ.3 லட்சத்து 42 ஆயிரம் கடன் தர முடியும் என்று வங்கி அலுவலர்கள் கூறினார்கள்.
ரூ.3½ லட்சம் கடன் 
ஆனால் முத்துசாமி ரூ.4 லட்சம் தர வேண்டும் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். பின்னர் 186 கிராம் நகையை முத்துசாமி வங்கி அலுவலரிடம் கொடுத்தார். ஆனால் வங்கி அலுவலர்களோ மீண்டும் அந்த நகையை பரிசோதித்து பார்க்காமல் ரூ. 3 லட்சத்து 42 ஆயிரத்தை முத்துசாமியிடம் கொடுத்தனர். பணத்தை வாங்கிய முத்துசாமி அங்கிருந்து சென்று விட்டார்.
அன்று மாலை வங்கியின் நகை மதிப்பீட்டாளர் வங்கியில் உள்ள நகையை பரிசோதித்து பார்த்தார். அப்போது முத்துசாமி கொடுத்த நகை அனைத்தும் போலி என தெரியவந்தது.
இதையடுத்து வங்கி தலைமை கிளை மேலாளர் ராஜகோபால் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பொம்மு, சப்–இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் முத்துசாமி மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். முத்துசாமி இதுபோல் வேறு எங்கும் மோசடி செய்தாரா? வங்கியில் அவர் கொடுத்த முகவரி உண்மையானது தானா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
On Saturday, September 27, 2014 by farook press in ,    
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆட்டோ நிறுத்தத்தை வேறு இடத்திற்கு மாற்ற, ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை 
திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதிக்கேற்ப நிலைய வளாகத்திற்குள் சுமார் 70–க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்தநிலையில் நேற்று ரெயில்வே அதிகாரிகளின் உத்தரவு பேரில் ஆட்டோ நிறுத்தம் ரெயில் நிலையத்தின் வெளியே திடீரென்று மாற்றப்பட்டது. இதைதொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர்கள் ரெயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து ரெயில் நிலைய ஆட்டோ ஓட்டுனர்கள் கூறியதாவது:–
திருப்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் சுமார் 70–க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இதற்காக சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தை பயன்படுத்தி வருகிறோம். நேற்று ரெயில்வே அதிகாரிகள் திடீரென்று ரயில் நிலைய வளாகத்தில் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்காமல், வெளியே ரோட்டோரத்தில் நிறுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் ரெயில் நிலையத்தின் வெளியே ஆட்டோக்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லை. எனவே திருப்பூர் ரெயில் நிலையத்தின் வளாகத்திலேயே ஆட்டோக்களை நிறுத்தி தொழிலை தொடர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
பின்னர் ஆட்டோ ஓட்டுனர்கள் ரெயில் நிலைய அதிகாரியை முற்றுகையிட்டு பழைய இடத்தையே எங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரி ஆட்டோ ஓட்டுனர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் கலைந்து சென்றனர்.
தகுந்த நடவடிக்கை
இது குறித்து திருப்பூர் ரெயில் நிலைய அதிகாரி குயிலன் கூறும்போது:–

ரெயில் நிலைய வளாகத்திற்குள் இருந்து வந்த ஆட்டோ நிறுத்தம், மேல் அதிகாரிகளின் உத்தரவுபடி வளாகத்திற்கு வெளிபுறமாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடம் தங்களுக்கு வசதியானதாக இல்லை. இதனால் வளாகத்திற்குள்ளேயே எங்கள் ஆட்டோக்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் ரெயில் நிலைய கோட்ட அதிகாரி திருப்பூர் ரெயில் நிலைய ஆய்வுக்காக இங்கு வர உள்ளார். அப்போது அவரிடம் ஆட்டோ ஓட்டுனர்களின் குறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு, இதற்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
On Saturday, September 27, 2014 by farook press in ,    
திருப்பூர் அருகே பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து 10 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவதுரத்த வெள்ளத்தில் பிணம் 
திருப்பூர் கூத்தம்பாளையம் ஜே.பி.நகரைச் சேர்ந்தவர் சுந்தரம்(வயது 45). இவர் பாண்டியன் நகரில் கேபிள் ஆபரேட்டராக உள்ளார். இவருடைய மனைவி புஷ்பலதா(38). இவர்களுக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிறது. கோகுல்(18), வசந்த்(16) என்ற இரு மகன்கள் உள்ளனர். கோகுல் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். வசந்த் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறான்.
நேற்று வழக்கம் போல் சுந்தரம் பாண்டியன் நகருக்கு கேபிள் டி.வி. பணிக்கு சென்று விட்டார். மகன்கள் இருவரும் பள்ளி, கல்லூரிக்கு சென்று விட்டனர். வீட்டில் புஷ்பலதா மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்தநிலையில் மாலை 5¼ மணி அளவில் பள்ளியில் இருந்து வசந்த் வீட்டுக்கு சென்றார். உடன் அவருடைய மாமா ஜெய்கணேசும் சென்றார். வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இருவரும் உள்ளே சென்று பார்த்தபோது புஷ்பலதா வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
10 பவுன் நகை கொள்ளை 
உடனடியாக இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை கமிஷனர் திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். புஷ்பலதா தலையின் பின்பகுதியில் கொடூரமான ஆயுதத்தால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் அதிகப்படியாக வெளியானதில் அவர் இறந்தது தெரியவந்தது.
புஷ்பலதா அணிந்திருந்த தங்க நகை மற்றும் கம்மல் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தாலிக்கொடி கழுத்தில் கிடக்கிறது. அதுபோல் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்படவில்லை. புஷ்பலதாவை கொலை செய்து சுமார் 10 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
மேலும் தடயம் எதுவும் சிக்காமல் இருப்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை கொள்ளையர்கள் தூவிச் சென்றுள்ளனர். வீட்டுக்குள் தரையில் தண்ணீரையும் ஊற்றிச் சென்றுள்ளனர். இதனால் கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளது தெரியவந்து உள்ளது. கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா? இல்லை வேறு எதுவும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
On Saturday, September 27, 2014 by farook press in ,    
எஸ்.எம்.எஸ்., ஆன்–லைன் முறை தவிர நேரிலும், தொலைபேசி மூலமும் கியாஸ் சிலிண்டரை பதிவு செய்ய வேண்டும் என்று கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்களுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்ட கியாஸ் நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அதிகாரி கணேசசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு நுகர்வோர் அமைப்பினர், பொதுமக்கள், கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:–
திருப்பூர் மாவட்டத்தில் தற்போது அனைத்து கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்களும் எஸ்.எம்.எஸ்., ஆன்–லைன், மற்றும் தானியங்கி சேவை மூலம் மட்டுமே கியாஸ் சிலிண்டர்களை பதிவு செய்கிறார்கள். அவர்களின் அலுவலகங்களுக்கு நேரில் சென்றோ, தொலைபேசியில் தொடர்பு கொண்டோ பதிவு செய்ய முறையிட்டால், அங்குள்ள ஊழியர்கள் பதிவு செய்ய மறுக்கிறார்கள்.
மேலும் ஒரு சில வினியோகஸ்தர்களிடம் புதிதாக கியாஸ் சிலிண்டர் இணைப்பு பெற விண்ணப்பித்தால், சிலிண்டருடன் வேறு வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள் வாங்கக்கூறி கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் மிகவும் சிரமமாக இருக்கிறது. இதுதவிர புகார்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க புத்தகம் இல்லை. வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த அறிவிப்பு பலகைகள் இருப்பதில்லை.
இவ்வாறு பல்வேறு புகார்களை அவர்கள் கூறினார்கள்.
இதைதொடர்ந்து மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் பேசும் போது கூறியதாவது:–
வாடிக்கையாளர்கள் அனைவரிடமும் செல்போன் இருக்கும் என்று கூறமுடியாது. எனவே அனைத்து கியாஸ் சிலிண்டர் வினியோகஸ்தர்களும் எஸ்.எம்.எஸ்., ஆன்–லைன் முறை தவிர நேரிலும், தொலைபேசி மூலமும் கியாஸ் சிலிண்டரை பதிவு செய்ய வேண்டும்.
அதிகாரிகளை தொடர்பு கொள்ள ஏதுவாக அவர்களின் தொலைபேசி எண்ணை பொதுமக்கள் பார்வையில் படும்படி எழுதிவைக்க வேண்டும். மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதை கட்டாய படுத்தக்கூடாது. அனைத்து அலுவலகங்களிலும் குறைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்க ஆலோசனை புத்தகம் வைத்து பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல் கூறினார்.
On Saturday, September 27, 2014 by farook press in ,    
திருப்பூரில் தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. பள்ளி கல்வியை பாதியிலேயே விட்டவர்கள் மீண்டும் கல்வியை தொடரும் வகையில் 8–ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கும், கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த தனி தேர்வர்களுக்கும் பொதுத்தேர்வு நேற்று நடைபெற்றது.
இதன்படி மாவட்டம் முழுவதிலும் இருந்து 8–ம் வகுப்பு தேர்வுக்கு 815 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத கே.எஸ்.சி. அரசு பள்ளி, சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி ஆகிய 2 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 621 பேர் மட்டுமே நேற்று தேர்வு எழுத வந்திருந்தனர். 194 பேர் வரவில்லை. அதைபோல எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த 252 பேருக்கு பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் 213 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 39 பேர் வரவில்லை. பிளஸ்–2 தேர்வுக்கு விண்ணப்பித்ததிருந்த 96 பேருக்கு தாராபுரம் விவேகம் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 74 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 22 பேர் வரவில்லை.
On Saturday, September 27, 2014 by farook press in ,    
திருப்பூர் மாவட்டத்தில் அடுத்த மூன்று மாதங்களில் 12 கிராமங்களை சேர்ந்த 1,167 பேருக்கு விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் 2014–15–ம் நிதியாண்டுக்கான விலையில்லா வெள்ளாடுகள் வழங்க பயனாளிகளை தேர்வு செய்வது குறித்து கிராம அளவிலான தேர்வுக்குழுவுக்கு நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். முகாமில் கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர்கள், ஊராட்சி தலைவர்கள், துணைத்தலைவர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசும் போது கூறியதாவது:–
13,738 பயனாளிகள்
தமிழக அரசு சார்பில் கிராமப்புறங்களில் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 194 கிராமங்களில் 13,738 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பு நிதியாண்டில் 54 கிராமங்களில் 3,987 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 37 கிராமங்களில் 2,488 பேருக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த 3 மாதங்களில் 12 கிராமங்களில் 1,167 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடக்க உள்ளது. நீங்கள் பயனாளிகளை தேர்வு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் உறவினர்கள் (மனைவி, தாய், தந்தை, மாமனார், மாமியார், மகன், மகள், மருமகள், மருமகன்) மத்திய, மாநில அரசு மற்றும் கூட்டுறவு, அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அங்கம் வகிக்கக்கூடாது.
இவ்வாறு கலெக்டர் ஜி.கோவிந்தராஜ் பேசினார்.
On Saturday, September 27, 2014 by farook press in ,    
ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தி.மு.க.வினர் கருப்புக் கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.
தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்டதுடன், வரலாறு காணாத அளவுக்கு மனித உரிமை மீறல்களை அரங்கேற்றிய இலங்கை அதிபர் ராஜபக்சே, ஐ.நா. பொது உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொள்வதை கண்டித்து டெசோ கூட்ட தீர்மானத்தின்படி, உலக தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் தி.மு.க.வினர் கருப்புச்சட்டை அணிந்து நேற்று கண்டனம் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மு.பெ.சாமிநாதன் கருப்புச்சட்டை அணிந்து கறுப்புக்கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தார். மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் கருப்புச்சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
இதேபோல் திருப்பூர் மாநகர தி.மு.க. சார்பில் திருப்பூர் பெரியார், அண்ணா சிலை அருகே மாநகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் தி.மு.க.வினர் ராஜபக்சேவை கண்டித்து அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து துண்டுபிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர். மேலும் திருப்பூர் மாநகர வீதிகளில் கருப்புக்கொடி ஏற்றினர். மேலும் தி.மு.க.வினர் பலர் தங்களுடைய வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மாநகர துணைச் செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜ், நிர்வாகிகள் மேங்கோ பழனிச்சாமி, நல்லி சண்முகசுந்தரம் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
On Saturday, September 27, 2014 by farook press in ,    
தாராபுரம் பஸ் நிலையத்தில் மாணவியிடம் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
தனியார் கல்லூரி 
கேரள மாநிலம் குமுளி தாலுகா ரோசாப்பு கண்டம் மேட்டில் வீட்டை சேர்ந்த அஜ்மல்கான் என்பவரது மகன் முகமது சுனைல் (வயது 22). இவர் தாராபுரம் அண்ணா நகரில் தங்கி திருப்பூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் டிப்ளமோ என்ஜினீயரிங் 3–ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலையில் கல்லூரி முடிந்ததும் அங்கிருந்து பஸ்சில் தாராபுரம் பஸ் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது அதே கல்லூரியில் ஆங்கில இலக்கியம் 2–வது ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரிடம், முகமது சுனையில் செல்போன் பேட்டரியை கொடுத்து விட்டு பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
3 பேர் கொண்ட கும்பல் 
இதற்கிடையில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் முகமது சுனைலிடம் தனியாக பேச வேண்டும் என்று அவரை ஒதுக்குப்புறமாக அழைத்து சென்று அந்த கும்பல் பயங்கரமாக தாக்கியது. அப்போது அங்கிருந்த பயணிகளும், பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசாரும் அந்த மாணவரை மீட்டு, அந்த கும்பலை பிடிக்க முயன்ற போது அந்த கும்பலில் ஒருவர் சிக்கினார். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட வாலிபரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் தாராபுரம் கோட்டை மேட்டை சேர்ந்த கர்ணன் என்பவரது மகன் சேதுபதி (21) என்றும், இவர் பழனியில் உள்ள கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் அவருடன் சேர்ந்து தாக்கிய பிரதாப், துர்க்கையண்ணன் ஆகியோரையும் போலீசார் பிடித்து வந்தனர்.
வழக்குப்பதிவு

பின்னர் முகமது சுனையில் தாராபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்–இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கோபால் ஆகியோர் விசாரித்து சேதுபதி, பிரதாப், மற்றும் துர்க்கையண்ணன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் காயம் அடைந்த முகமது சுனைலுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
On Saturday, September 27, 2014 by farook press in ,    
காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் ஆட்டு பட்டியில் புகுந்து ஆடுகளை திருடியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு வேன், மற்றும் ரூ.4¼ லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதிகளில் அடிக்கடி பட்டிகளில் இருந்து ஆடுகள் திருட்டு போவதாக கடந்த 2 மாத காலமாக புகார் எழுந்த வண்ணம் இருந்தது. காங்கயம் பகுதியில் அழகுகவுண்டன்புதூர் மற்றும் முள்ளிப்புரம் பகுதியில் செலாம்பாளையம் என்ற இடத்திலும் 84 செம்மறி ஆடுகளும், வெள்ளகோவில் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஓலப்பாளையத்தில் 60 ஆடுகளும், என மொத்தம் 144 ஆடுகள் திருட்டு போனதாக வழக்குபதிவு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அமித்குமார்சிங் உத்தரவின் பேரில், காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு எம்.சுருளிராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கே.கே.மகாலிங்கம், செல்வத்தங்கம், சிவக்குமார், சப்–இன்ஸ்பெக்டர்கள் பி.சாஸ்தாஇந்துசேகரன், அப்சல்அகமது, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமை காவலர்கள் பெரியசாமி, மணிமுத்து, மற்றும் போலீசார் ஜெகதீஷ்பிரபு, செந்தில்குமார், கார்த்தி, நீலமேகம், இளைஞர் காவலர் சங்கிலிமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, காங்கயம் அருகே பாப்பிணி வீரசோழபுரம் என்ற இடத்தில் சந்தேகப்படும்படியாக ஒரு வாகனத்துடன் நின்றிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஆடுகள் திருடப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது இதை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம்,கம்பளியம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் மகேந்திரன் (29) ஈரோடு முத்தம்பாளையம் ரெட்டபாளி வலசு என்ற பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் பிரகாஷ் (22), ஈரோடு ரங்காம்பாளையம் அன்னை சத்யா நகரை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் துரைசாமி (24), அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் பெரியசாமி (23), கணேசன் என்பவரின் மகன் ராகவேல் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில் திருடிய ஆடுகளை விற்பனை செய்துவிட்டதாக கூறினார்கள்.
இதைத்தொடர்ந்து ஆடுகளை விற்ற பணம் ரூ.4லட்சத்து 29 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வேனும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்கள் திருப்பூர் மாவட்டம் மூலனூர் மற்றும் கரூர் மாவட்டம் தென்னிலை போன்ற பகுதிகளிலும் ஆடுகளை திருடியது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரும் காங்கயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த திருட்டு கும்பலின் தலைவனாக மகேந்திரன் செயல்பட்டுள்ளார். இவர் ரெயில்வேயில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். பகல் நேரத்தில் இவர்கள் இரு சக்கர வாகனங்களில் சென்று ஆடுகள உள்ள பகுதியை நோட்டம் இடுவது. பின்னர் இரவு நேரத்தில் அந்த ஆடுகள் உள்ள பகுதியில் வேனை நிறுத்தி ஆடுகளை திருடி வேனில் போட்டு சென்று விடுவார்கள். பின்னர் திருடிய ஆடுகளை பழனி பகுதியில் உள்ள சந்தைகளில் விற்பனை செய்து விடுவார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.